நரிக்குறவர், குருவிக்காரர், பலவேசம் கட்டுபவர் இன்னும் பிற அறியப்படாத, அறியப்படுத்தப்படாத எத்தனையோ பழங்குடி இனத்தவர்கள் இன்னும்கூடத் தங்களுக்கான அடையாளமாக சாதிச் சான்றிதழ் பெறப் போராடிவருவதைப் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் நாம் கண்டுவருகிறோம். இதன் காரணமாகப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த எத்தனையோ முதல் தலைமுறை மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்தும், மேற்படிப்பைத் தொடர முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இது மட்டுமல்லாமல், இட ஒதுக்கீட்டின் மூலம் தனக்கு கிடைக்கவேண்டிய உரிமையைக்கூட இவர்கள் இழக்க நேரிடுகிறது.
இப்படியான சூழ்நிலையை நாளும் பல பழங்குடியினர்கள் எதிர்கொண்டுவரும் இச்சூழலில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினரைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.
இந்தக் கடிதத்தில், ``நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினரைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இந்த இரு சமூகத்தினரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதன் மூலம், இவர்களும் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்குரியவர்களாக தகுதி பெறுவர். மேலும், இந்த இரு சமூகத்தினரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு இந்தியத் தலைமைப் பதிவாளரும் ஒப்புதல் வழங்கியுள்ளார்" என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
