தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களிடம் நடந்துகொண்டவிதம் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, ``பா.ஜ.க-வில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உரிய விசாரணை நடத்தாமல், தமிழக காவல்துறைமீது பழிபோடுவதற்கு இவருக்கு எந்த உரிமையும் இல்லை" எனக் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதற்கொண்டு செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் நாள்தோறும் அவதூறுகளையும் அபத்தங்களையும் கருத்துகளாக வெளியிட்டுவருகிறார். இவருடைய ஆதாரமற்ற கருத்துகளுக்கு விளக்கம் கேட்டால், செய்தியாளர்கள் மீது கடுமையான கோபத்தை வெளிப்படுத்துவதோடு, மிரட்டுகிற தொனியில் பேசுவது தொடர்கதையாகிவருகிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படுகிற ஊடகத்துறையை மிக மிகக் கேவலமாக நடத்துவது குறித்து பத்திரிகையாளர்கள் சங்கமே கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது.

ஆனாலும், அண்ணாமலை பாடம் கற்றதாகத் தெரியவில்லை. சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டு பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருப்பதாகக் கூறியிருக்கிறார். ஆனால், சமீபத்தில் பா.ஜ.க-விலிருந்து வெளியேறிய நடிகை காயத்ரி ரகுராம் செய்தியாளர்களிடம், `அண்ணாமலை தலைமையில் இருக்கிற பா.ஜ.க-வில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. பல்வேறு தொல்லைகளுக்கு பெண்கள் ஆளாகிவருகிறார்கள். சுதந்திரமாகச் செயல்பட முடிவதில்லை’ என்ற குற்றச்சாட்டை பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்.
ஆனால், பெண் காவலர்களுக்குத் தொல்லை கொடுத்ததாகப் புகார் வந்தவுடனே இரு தி.மு.க-வினர் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இது போன்ற தவறுகளை தி.மு.க உள்ளிட்ட எவர் செய்தாலும் அவர்கள்மீது காவல்துறை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்துவருகிறது. ஆனால், அதைப் பாராட்ட மனமில்லாத அண்ணாமலை, `பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’ என்று புலம்புகிறார்.

உண்மையிலேயே அண்ணாமலையால்தான் பா.ஜ.க-வில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உரிய விசாரணை நடத்தாமல் தமிழக காவல்துறைமீது பழிபோடுவதற்கு இவருக்கு எந்த உரிமையும் இல்லை. அதுபோல பட்டியலின மக்கள் தமிழகத்தில் பல்வேறு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுவருவதாகக் கூறுகிறார். ஆனால், தேசிய அளவில் பா.ஜ.க ஆட்சி செய்கிற மாநிலங்களில் பழங்குடியினர்கள், ஆதிவாசிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவருவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பழங்குடியின மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் 2019-ல் 45,961-ஆக இருந்தன, அது 2020-ல் 50,291-ஆக உயர்ந்திருக்கிறது. இது 11 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இந்தக் குற்றங்களில் பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டும் 74 சதவிகிதம் நிகழ்ந்திருப்பதாக அந்தப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கடுமையான தாக்குதல் நிகழ்த்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இறந்த பிறகு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இறுதிச்சடங்குகூட செய்ய வாய்ப்பு தராமல் காவல்துறையினரே சுடுகாட்டில் தன்னிச்சையாக எரித்த கொடுமை நிகழ்ந்ததை எவரும் மறக்க முடியாது. பா.ஜ.க என்பது வர்ணாசிரமத்தின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களுக்கு எதிரான தாக்குதலை நடத்துகிற இயக்கமாக மாறிவிட்டது. பா.ஜ.க ஆட்சி செய்கிற மாநிலங்களில் பழங்குடியின மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துவருகிற நிலையில், அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகக் கூறுவது அப்பட்டமான அவதூறு.
இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் மாறியிருப்பதாக அண்ணாமலை கூறுகிறார். இந்தக் கடன்கள் அனைத்துமே கடந்தகால அ.தி.மு.க ஆட்சியின் பொறுப்பற்ற நிர்வாகத்தால் ஏற்பட்டவை. இதற்கு தி.மு.க அரசு எந்த வகையிலும் பொறுப்பல்ல. ஆனால், மத்திய பா.ஜ.க ஆட்சியில் 2014-ம் ஆண்டு மொத்தக் கடன் தொகை ரூபாய் 53.11 லட்சம் கோடியாக இருந்தது. அது தற்போது டிசம்பர் 2022-ல் ரூபாய் 136 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. அது மேலும் மார்ச் 2023-ல் ரூபாய் 152 லட்சம் கோடியாக உயரும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். கடந்த எட்டு ஆண்டுக்கால மோடி ஆட்சியில் ஏற்பட்டிருக்கும் மொத்தக் கடன் தொகை ரூபாய் 83 லட்சம் கோடி. இந்தியாவையே கடன்கார நாடாக, திவாலான நிலைக்குக் கொண்டு சென்றது மோடி அரசு. உண்மைநிலை இப்படியிருக்க, தமிழக அரசின் கடன் தொகையைப் பற்றிப் பேசுவதற்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு என்ன அருகதை இருக்கிறது?

ஆதாரமற்ற அபத்தங்களை நாள்தோறும் கூறி, சர்ச்சைகளில் சிக்கிவரும் அண்ணாமலை ஊருக்கு உபதேசம் செய்வதில் எந்தப் பயனும் இல்லை. தமிழக பா.ஜ.க-வின் ஊதுகுழலாகச் செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி, வரலாற்றுத் திரிபு வாதங்களைத் தொடர்ந்து பேசிவருகிறார். தமிழகத்தில் இவரது பேச்சுகளைப் பார்க்கிறபோது, அரசமைப்புச் சட்டம் உருவாக்கிய ஆளுநரா அல்லது தமிழக பா.ஜ.க-வின் கொள்கை பரப்பு செயலாளரா அல்லது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பிரசாரகரா... என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

ஆளுநர் மாளிகையில் அமர்ந்துகொண்டு, தமிழக அரசுக்கு எதிராக அரசமைப்புச் சட்டம் அளித்திருக்கும் அதிகாரங்களை மீறுகிற வகையில் தமிழக அமைச்சரவை எடுக்கிற முடிவுகளுக்கு எதிராகச் செயல்பட்டுவருகிற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக ஆளுநர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து அனைத்து ஜனநாயக மதச்சார்பற்ற கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராடவேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்" என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார்.