இன்று பிறந்தநாள் விழா காணும் திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு, அமைச்சர் பதவி அளிக்கப்போவதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேச்சுக்கள் அடிபட்டன. அப்போது கட்சியின் அமைச்சர்கள் சிலர் அதற்கு ஆதரவும் தெரிவித்துவந்தனர். இந்த நிலையில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், `அமைச்சராவதற்கான அனைத்து தகுதிகளும் உதயநிதிக்கு இருக்கின்றன' என இன்று தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மா.சுப்பிரமணியனிடம், உதயநிதி ஸ்டாலின் அடுத்தாண்டு அமைச்சராகப் பிறந்தநாள் கொண்டாடுவாரா என்று பத்திரிகையாளரொருவர் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த மா.சுப்பிரமணியன், ``நடந்தால் நல்லது. ரொம்ப மகிழ்ச்சியடைவோம். அதற்குரிய எல்லா தகுதிகளும் உடையவர். எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.

தி.மு.க-விலிருக்கும் இளைஞரணி அமைப்பு சம்பிராயத்துக்காக இருக்கும் அமைப்பு அல்ல. சமூகத்துக்கு உழைக்கும் அமைப்பு. 1980-ம் ஆண்டு இன்றைய தமிழக முதல்வரின் முயற்சியின் காரணமாகத் தொடங்கப்பட்டது. ஏறத்தாழ 42 ஆண்டுகளைக் கடந்து நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. தி.மு.க-வின் இளைஞரணி அமைப்பு 30 லட்சம் இளைஞர்களை உள்ளடக்கியிருக்கிற உயிரோட்டமான அமைப்பு. எனவே இந்த உயிரோட்டமான அமைப்பை வழி நடத்திக் கொண்டிருக்கின்ற வளர்ந்து வரும் தலைவராக உதயநிதி இருப்பதால், அவர் எல்லா தகுதிகளுக்கும் ஏற்புடையவர்" என்று கூறினார்.