`இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை’ எனப் போற்றப்படும் டாக்டர் அம்பேத்கரின் 131-வது பிறந்தநாள் இந்தியா முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் மத்திய சமூகநீிதித்துறை அமைச்சர் வீரேந்திர குமார், ``காங்கிரஸ், ஓட்டு அரசியலுக்காக அம்பேத்கரை ஒரு பட்டியலினத் தலைவராக உருவகப்படுத்தி, அவரின் பெயரைப் பயன்படுத்தியது" என கடுமையாகச் சாடியுள்ளார்.
அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய வீரேந்திர குமார், ``ஓட்டு அரசியலுக்காக, அம்பேத்கரின் பெயரை பயன்படுத்தும் வேலையை காங்கிரஸ் செய்தது. அம்பேத்கருக்கு மரியாதை அளிக்கும் வகையில் எந்தவித நடவடிக்கையையும் காங்கிரஸ் எடுக்கவில்லை.
அம்பேத்கரின் மறைவுக்குப் பின்னர் இருந்த அப்போதைய அரசுகள், அவருக்கு நினைவிடங்களை எழுப்புவதற்கான எந்த முயற்சியையும் செய்யவில்லை. ஆனால் 2014-ல் மோடி பிரதமரான பிறகு அம்பேத்கருக்கு பஞ்ச தீர்த்தங்கள் கட்டப்பட்டன. பா.ஜ.க ஆதரவு அரசு ஆட்சி செய்யும்போதுதான் அம்பேத்கருக்குப் பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது. தற்போது அம்பேத்கரின் கனவை நனவாக்கும் பணியை மோடி தலைமையிலான அரசு செய்து வருகிறது” என்றார்.