கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க மகளிரணி தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் கள்ளச்சாராய சாவுகள் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. மதுவிலக்கு ஏன் அமல்படுத்தவில்லை என்ற கேள்விக்கு அரசாங்கம் சொல்லும் ஒரே பதில் கள்ளச்சாராயம்.

ஆனால் கள்ளச்சாராயத்தால் சாவு ஏற்படுகிறது. இதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். ஆளுங்கட்சி ஆதரவோடு கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுகிறது. எந்த அரசியல் கட்சியினர் இதில் செயல்பட்டாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவைக்கு உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் விமானத்தில் கோரிக்கை வைத்தேன். 'புதிய சாலைகளை கண்ணில் பார்க்க முடியவில்லை' எனத் தெரிவித்தேன். என் முன்னிலையிலேயே சாலைகளை சரி செய்யச் சொல்லி அதிகாரிகளிடம் பேசினார். காங்கிரஸ் கட்சியை நம்பி வருவதற்கு எந்த அரசியல் கட்சியும் தயாராக இல்லை.

மேடைக்குச் செல்வார்கள். ஆனால் தேர்தல் களம் என்று வந்துவிட்டால் வேறு. கர்நாடகா வெற்றியை வைத்து கனவு காண்கிறார்கள். அடுத்த முறை மோடி பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது. நாட்டில் இருக்கும் 95% மக்களுக்கு 2,000 ரூபாய் நோட்டால் பிரச்னை இல்லை.
2,000 ரூபாய் நோட்டு எங்கிருந்து வருகிறது என்பதை கண்காணித்தாலே நடவடிக்கை எடுப்பது சுலபம். 2,000 ரூபாயை கடைக்காரர்களோ, வியாபாரிகளோ வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கலாம். கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம் தருகிறார்கள். நல்ல சாராயம் குடித்தும் பலர் இறக்கின்றனர்.

மது குடிப்பவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அதன் மூலம் உயிரிழப்பு ஏற்படும்போது இழப்பீடு தர வேண்டும். அமைச்சர் எதற்கெடுத்தாலும் ஆதாரம் கொடு என்கிறார். நானே டாஸ்மாக் கடைக்குச் சென்றுதான் ஆதாரம் கொண்டு வரவேண்டும்" என்றார்.