விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு வயது 48. ‘எங்கள் தாகம் தமிழீழத் தாயகம்’ என்ற முழக்கத்தோடு அவர் ஆயுதத்தைத் தூக்கி 30 ஆண்டுகள் முடியப்போகின்றன.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS* ‘தமிழ் மாணவர் பேரவை’ தான் பிரபாகரனுக்கான ஆரம்பம். இயக்கத்தில் ரொம்பவும் வயது குறைந்தவர் (பதினாறு வயது)அவர் என்பதால், எல்லோருமே ‘தம்பி, தம்பி’ என்று கூப்பிட்டிருக்கிறார்கள். அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. பிறகு அவரே புலிகள் இயக்கம் தொடங்கி இளைஞர்களை நிறைய சேர்த்தபோது அவர்கள், தம்பி என்று எப்படி அழைப்பது என்று தயங்கி ‘தம்பியண்ணா’ என்று அழைத்தார்கள். இப்போது அனைவருக்கும் அவர் தலைவர்.
* தமிழ்நாட்டில் இருந்தபோதுதான் பிரபாகரனுக்குத் திருமணமானது. மனைவி பெயர் மதிவதனி. இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக பெரிய உண்ணாவிரதப் போராட்டத்தை மதி நடத்தியபோது, இருவருக்கும் காதல் ஏற்பட்டது. புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்களே இவர்களின் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, ஆன்டன் பாலசிங்கம் மட்டும்தான் ஆதரவு தெரிவித்திருக்கிறார்! காதல் என்பது தமிழ் கலாசாரத்துக்கு எதிரானது அல்ல. வீரத்துக்கு இணையாகவே தமிழ் இலக்கியங்களில் காதல் பேசப்பட்டிருக்கிறது என்று போராளிகளுக்கு விளக்கம் சொல்லி, பிரபாகரனின் திருமணத்துக்கு அனுமதி வாங்கித்தந்தாராம் பாலசிங்கம். திருக்கோயிலூர் கோயிலில் இவர்களின் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். தனது புலிப் படையிலிருந்து மரணமடைந்த சார்லஸ், துவாரகா, பாலச்சந்தர் ஆகியோர் பெயர்களையே தன் குழந்தைகளுக்கு வைத்திருக்கிறார் பிரபாகரன். மூத்த மகனுக்கு 17 வயது. மூன்றாவது குழந்தைக்கு ஆறு வயது.
* கைத்துப்பாக்கி, ராக்கெட் லாஞ்சர் இரண்டையும் இயக்குவதில் பிரபாகரன் கெட்டிக்காரர். எட்டு பாட்டில்களை வரிசையாக வைத்து யார் வீழ்த்துகிறார்கள் என்று ஒரு போட்டி புலிகளின் முகாமில் நடந்திருக்கிறது. அதில் எட்டு பாட்டில்களையும் குறி தவறாமல் சுட்டு சிதறடித்திருக்கிறார் பிரபாகரன்.

* பல ஆயுதங்களை புலிகளே சொந்தமாகத் தயாரிப்பதும் உண்டு. துப்பாக்கியில் செருகிச் சுட்டால் பறந்து போய்த் தாக்கும் ரைஃபில் கிரானைட்ஸ், பசிலன்-5000 போன்றவை சில உதாரணங்கள்.
* ஜானி கண்ணிவெடி பிரபாகரனின் ஒரிஜினல் தயாரிப்பு! இரும்பையே பயன்படுத்தாமல் மரத்தால் ஆனதாம் இந்த வெடி. மரக்கட்டையை வெட்டி, அதற்குள் வெடிமருந்து திணிக்கப்பட்டிருக்கும். சாதாரணமாக ரோட்டில் கிடக்கும் அந்த வெடியில் கால் பட்டால் வெடிக்கும்.
* தமிழ்ச்செல்வன், கருணா, சூசை மூவரும்தான் பிரபாகரனின் முக்கிய தளபதிகள். ஆனையிறவு ராணுவ முகாமைத் தாக்கி ஏராளமான ஆயுதங்களை எடுத்து வந்த கருணா இப்போது புலிகளின் இராணுவப் பிரிவுப் பொறுப்பாளர். பிரபாகரன் மிக முக்கியமாக நினைக்கும் படைப்பிரிவான கடற்புலிகளை நிர்வகிக்கிறார் சூசை.

* இயக்கத்தவர்கள் திருமணம் செய்துகொள்வது பற்றி விவாதம் வந்தபோது, ஒன்று கலப்புத் திருமணம் செய்ய வேண்டும். அல்லது விதவைகளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டார் பிரபாகரன். காதல் திருமணங்களுக்கும் பச்சைக்கொடி! ஆனால் அவர்கள் இயக்கத்தில் சேர்ந்து ஆறு ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். சிவப்பு நிறச் சேலையை மணமகள் அணிந்திருப்பார். வெள்ளை வேட்டி சட்டையில் இருப்பார் மணமகன். உறுதிமொழி எடுத்துக்கொண்டு தாலி கட்டிக்கொள்வார்கள். தாலியில் தமிழர்களின் பண்பாட்டை விளக்கும் சின்னங்கள் இருக்கும். சமீப காலமாக நடக்கும் திருமணங்களில் மணமகனுக்கு மணமகள் சங்கிலி அணிவிக்கும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறதாம்.
- ப. திருமாவேலன்
பாலசிங்கம் - ஒரு ப்ளாஷ்பேக்
உலகப் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பிரபாகரனிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு பதில் சொன்னவர் ஆன்டன் பாலசிங்கம்தான். இயக்கம் தொடங்கிய காலத்திலேயே பிரபாகரனுக்கு இவர் அறிமுகம். புலித்தலைவருக்குப் பிடித்த அறிவு சிங்கம் இவர்.
கொழும்பில் இருக்கும் பிரிட்டிஷ் தூதரகத்தில் மொழிபெயர்ப்பாளராக வேலைபார்த்த பாலசிங்கம், ‘மார்க்சிய மனோதத்துவம்’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். வீரகேசரி பத்திரிகையில் துணை ஆசிரியராகவும் இருந்தவர். உலக விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றியும் ஆயுதங்கள் பற்றியும் ஆங்கிலப் புத்தகங்களை பிரபாகரனுக்கு மொழிபெயர்த்துச் சொல்லி அதன் மூலம் அவரின் நெருக்கத்தைப் பெற்றவர். போராளிகள் படிப்பதற்காக சேகுவேரா, மாவோ மற்றும் பலர் எழுதிய கெரில்லா யுத்தம் பற்றிய கட்டுரைகளை மொழிபெயர்த்து புத்தகமாகத் தந்தவர் பாலசிங்கம்.
அனைத்து நாடுகளோடும் புலிகள் தங்கள் அமைப்பின் தொடர்பைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரபாகரன் முடிவெடுத்தபோது பாலசிங்கத்தை லண்டனுக்கு அனுப்பி வைத்தார். ஈழத் தமிழர்களிடம் இருந்து பெருமளவு பணமும், பல நாடுகளின் ஆதரவும் கிடைக்க பாலசிங்கம் காரணமாக இருந்தார்.
லண்டனில் இருந்தபோது சிறுநீரகக் கோளாறு காரணமாக பாலசிங்கத்தின் மனைவி இறந்துபோனார். அதன்பிறகு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அடேல் என்பவரை பாலசிங்கம் திருமணம் செய்துகொண்டார். தொழிலால் இவர் நர்ஸ். புலிகளின் பெண்கள் பிரிவில் உறுப்பினர்.
காரல் மார்க்ஸ் - லெனின் தத்துவங்களின்பால் ஆழ்ந்த ஈடுபாடும் ஆழமான படிப்பும் கொண்ட பாலசிங்கத்துடன் சேர்ந்துதான் கொள்கைபூர்வமான முடிவுகளை எப்போதும் எடுத்து வந்திருக்கிறார் பிரபாகரன். மூன்றாவது நாடு ஒன்றின் முன்னிலையில் பேசினால்தான் தீர்வு வரும் என்று சொல்லி, அதற்கான வேலையில் இறங்க பாலசிங்கத்துக்கு பிரபாகரன் உத்தரவிட்டார். இந்த நிலையில், நார்வே நாட்டோடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவந்தார் பாலசிங்கம். தாய்லாந்தில் நடக்கப்போகும் பேச்சுவார்த்தையிலும் பிரபாகரன் சார்பாகப் பேசப்போவது பாலசிங்கம்தான்.
முகத்தில் சாந்தமும் வார்த்தைகளில் கம்பீரமும் காட்டி வெளிப்படையாகப் பேசிவரும் பாலசிங்கம், இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில்தான் நாட்களை நகர்த்திவருகிறார்.