விஸ்வநாத் பிரதாப் சிங்
விஸ்வநாத் பிரதாப் சிங் என்றால் பலருக்குத் தெரியாது. அனைவருக்கும் அவர் வி.பி.சிங்!
கேன்சருக்கான அறிகுறி தெரிய ஆரம்பித்து பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ‘நாட்களை எண்ணி வாழ்பவன் நான்’ என்று சொல்லி, கவலை இல்லாமல் நாட்களைக் கழித்தவர் இந்த ராஜ குடும்பத்துக்காரர்.
உ.பி முதல்வராக இருந்தவரை தேசிய அரசியலுக்குக் கொண்டுவந்தவர் இந்திரா. ராஜீவுக்கு நெருக்கமான நண்பரானார் சிங்... ‘நண்பன் என்ற எல்லையைத் தாண்டி, ராஜீவ் என் துறையில் அதிகமாகத் தலையிடுகிறார்’ என்று வெளிப்படையாகவே குற்றம் சொன்னவர் வி.பி.சிங். அரசியலில் நேர்மையை வலியுறுத்தி தனது நண்பனுக்கு எதிராகவே தேசிய முன்னணியை ஆரம்பித்து, அதிரடியாக ஆட்சியிலும் அமர்ந்தார் சிங்.
341 நாட்கள் இந்தியாவின் பிரதமராக இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் செய்த மூன்று காரியங்கள் காலங்கள் கடந்தும் பேசப்படுகின்றன. பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரையைப் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர் அமல்படுத்தினார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அடுத்ததாக, அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் கரசேவை செய்ய பாரதிய ஜனதா, வி.ஹெச்.பி. கிளம்பியபோது, ராணுவத்தை வைத்து அடக்கினார். இத்தனைக்கும் பி.ஜே.பி தயவில்தான் வி.பி.சிங் பிரதமர் நாற்காலியில் இருந்தார். ‘எனக்கு நாற்காலியைவிட தத்துவம்தான் முக்கியம்’ என்று அறிவித்தார்.
இலங்கையில் இந்திய அமைதிப்படை இருந்தது. அதை வாபஸ் வாங்க வேண்டும் என்று தமிழகக் கட்சிகள் கோரிக்கை வைத்தன. ‘வாபஸ் வாங்கினால் இந்தியாவுக்கு அவமானம்’ என்றார்கள் வெளியுறவுத்துறை அதிகாரிகள். ‘ஆக்கிரமிப்பதுதான் அவமானம். பின்வாங்குவது பெருமைதான்’ என்று சொல்லி, அமைதிப் படையை வாபஸ் வாங்கினார்.
பதவி நாற்காலி பற்றிக் கவலைப்படாமல் தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காகக் கடைசி வரை வாழ்ந்தவர்களில் வி.பி.சிங்குக்கு ஓர் இடம் உண்டு!
- ப.திருமாவேலன்