தமிழ்நாடு, பஞ்சாப், தெலங்கானா, மேற்கு வங்கம் போன்ற பா.ஜ.க ஆட்சியில் அல்லாத மாநிலங்களில், ஆளுநர்களின் செயல்பாடுகள் அந்தந்த மாநில அரசுகளுக்கு எதிராக இருப்பதாக அரசியல் அரங்கில் தொடர் புகார்கள் முன்வைக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இங்கே ஆளுநருக்கும், மாநில அரசுக்குமிடையே மோதல் போக்கு வெளிப்படையாகவே நிலவி வருகிறது. ஆளுநர் மசோதாக்களைக் கிடப்பில் போட்டது, அதைக் கண்டித்து ஆளுநருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவந்தது என பல சம்பவங்களை அடுக்கலாம். முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவந்த அதே நாள், ஆளுநர் ஆர்.என்.ரவி முக்கிய மசோதாவான ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார்.
மேலும், ஸ்டாலின் தனித் தீர்மானத்தின்போது சட்டமன்றத்தில், ``குடியரசுத் தலைவரைப் பதவிநீக்க `இம்பீச்மென்ட்' அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இருப்பதுபோல, ஆளுநர்களை நீக்க சட்டமன்றத்துக்கும் இம்பீச்மென்ட் அதிகாரம் வழங்கலாமா?'' எனக் கடந்த காலங்களில் எழுந்த விவாதத்தை நினைவுபடுத்தினார்.
அதன் தொடர்ச்சியாக விகடன் வலைதளப் பக்கத்தில் இது குறித்து வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், ``ஆளுநரைப் பதவிநீக்கம் செய்யும் `இம்பீச்மென்ட்' அதிகாரம் மாநில சட்டமன்றத்துக்குக் கொடுக்கப்பட வேண்டுமா?" எனக் கேட்கப்பட்டது.

அதற்கு, ``ஆம், இல்லை, கருத்து இல்லை" என மூன்று விருப்பங்களும் தரப்பட்டன. இந்த நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, அதிகபட்சமாக 71 சதவிகிதம் பேர் `ஆம்' எனத் தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, 26 சதவிகிதம் பேர் `இல்லை' என்றும், 3 சதவிகிதம் பேர் `கருத்து இல்லை' என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

முன்னதாக, மாநிலச் சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்யுமாறு, மத்திய அரசுக்கு வலியுறுத்தி தனித் தீர்மானத்தைக் கொண்டுவருமாறு, பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.