விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே என்.சுப்பையாபுரம் கிராமத்தில் மே தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்துகொண்டார். கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட அவர், ரேஷன்கடை, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், பள்ளிக்கு கூடுதல் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக மக்களுக்கு உறுதி அளித்தார்.

பின்னர் கிராம சபைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், "கடந்த ஆட்சியில் அரசு வேலை பெற பல லட்சங்கள் லஞ்சமாக பெறப்பட்டது. அது போன்று இல்லாமல், தற்போது செலவில்லாமல் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் அரசு வேலை கிடைக்க முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். தகுதியுள்ள அனைவருக்கும் வேலை கிடைக்க முயற்சி முயற்சிகள் நடைபெறுகிறது. பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளையும், குறைகளையும் நிறைவேற்றி வரும் தமிழக அரசு எப்போதும் மக்களுக்கு துணையாக இருக்கும்" என பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடர்ந்து, உப்பத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுப்பணித்துறை சார்பில் சுமார் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்திற்கு பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதையடுத்து, சமத்துவபுரம் பகுதி பொதுமக்களுக்கு வீடு பராமரிப்பு தொகையாக 50 ஆயிரம் வீதம் 72 பயனாளிகளுக்கு உதவித்தொகையை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.