இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டடம் வரும் 28-ம் தேதி திறக்கப்பட இருக்கிறது. இங்கு செங்கோல் ஒன்று பிரதானமான இடத்தில் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் திறப்பு விழாவில், மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அடுத்ததாக தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி நிறுவுவார்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் 1947-ல் அது வழங்கப்பட்டது. ஆங்கிலேயர்களிடமிருந்து நம் நாட்டு மக்களுக்கு அதிகாரம் மாறியதற்கான அறிகுறியாகவும், தமிழ்நாட்டின் ஆதினம் மூலம் இது வழங்கப்பட்டது" என்றார். மேலும் அந்த செங்கோல் உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸில் தயாரிக்கப்பட்டது என்ற தகவலும் வெளியானது. இதையடுத்து உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் நிர்வாக பங்குதாரர் அமரேந்திரன் உம்மிடியை நேரில் சந்தித்தோம்.
அப்போது அவர், "செங்கோல் முதலில் உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸில் தயாரிக்கப்பட்டது என்பது குறித்த கட்டுரை ஜூனியர் விகடனில் தான் வெளியாகியிருந்தது. அதை பார்த்ததும் தாத்தாவின் பெயர் இருந்தது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. பிறகு ஜூனியர் விகடன் அலுவலகத்தை தொடர்ப்பு கொண்டோம்.

அப்போது ஆதீனத்தின் தொடர்பு எண் கிடைத்தது. அதன் மூலமாக செங்கோலை செய்தது எனது தாத்தா என்பதை அறிந்தோம். பின்னர் எனது பெரியப்பாவிடம் "நாம் தான் செங்கோலை செய்தோமா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது. ஆதீனத்தில் இருந்தும், டெல்லியில் இருந்தும் வந்து கேட்டனர்.
அவர்களே வடிவைப்பைப்பையும் வழங்கி விட்டார்கள். அதன்படி செய்து கொடுத்தோம்" என்றார். ஆனால் செங்கோல் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. தொடர் தேடுதலில் விளைவாக 2021-ம் ஆண்டு அலகாபாத்தில் இருக்கும் ஆனந்தபவன் அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது.

நேராக சென்று பார்த்தோம். அதில் "வாக்கிங் ஸ்டிக் கிப்ட்டேட் டு நேரு" என்று இருந்தது. மேலும் அதில் யார், யாருக்கு கொடுத்தது என்று தமிழில் எழுதப்பட்டு இருந்தது. அதை பார்த்ததும் நாங்கள் செய்த செங்கோல் தான் என உறுதி செய்துவிட்டோம். அது பெரிய புதையலை கண்டு பிடித்தது போன்று இருந்தது.
இதையெல்லாம் தொகுத்து 4 நிமிட வீடியோவாக தயாரித்து வெளியிட்டோம். அது பிரதமர் அலுவலகம் வரை சென்றது.
அதில் செங்கோலை செய்ய கூறியவர் யார்?, எப்போது செய்தது?, யாருக்கு யார் வழங்கியது?, எதற்காக கொடுத்தது?, எப்போது கொடுத்தது?" என்பது தமிழில் எழுதப்பட்டிருக்கிறது.
செங்கோலில் இருக்கும் நந்தி ஆதீனத்தின் உறுதி தன்மையையும், நீதியையும் குறிக்கிறது. புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவுக்கு அரசின் அழைப்பை ஏற்று குடும்பத்தை சேர்ந்த 15 பேர் செல்கிறோம்.

1947-ம் ஆண்டிலேயே நாங்கள் 47 ஆண்டு அனுபவம் கொண்ட நிறுவனம். எனவே தான் எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. இது ஒவ்வொரு இந்தியனும் விரும்பக்கூடிய விஷயம் என்பதால் செங்கோலை செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.