கேரள கவர்னர் ஆரிஃப் முகமதுகான் அடிக்கடி அதிரடியாகச் செயல்படுவதும், பேசுவதும் வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜ் பவனில் பிரஸ்மீட் நடத்தி அரசுக்கு எதிராகப் பேட்டி கொடுத்து பரபரப்பைக் கிளப்பினார். இந்த நிலையில் தற்போது, `இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள்தான்' எனப் பேசியிருக்கிறார். அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ நாடுகளில் வசிக்கும் மலையாள மொழிபேசும் சங்பரிவார் ஆதரவாளர்களின் கூட்டமைப்பான 'கேரளா இந்தூஸ் ஆஃப் நார்த் அமெரிக்கா' என்ற அமைப்பின் 'இந்து கான்கிளேவ்' நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் நடந்தது. அந்த நிகழ்ச்சியை கேரள கவர்னர் ஆரிஃப் முகமதுகான் தொடங்கிவைத்துப் பேசினார்.

அவர் பேசுகையில், "சனாதனம் உயர்த்திக்காட்டிய கலாசாரத்தின் பெயர்தான் இந்து. இந்து என்பது ஒரு பிரதேசத்தில் பிறந்தவர்களைக் குறிக்கும் சொல். இந்தியாவில் பிறந்தவர்கள் அனைவரும் இந்துக்கள். எதற்கான என்னை இந்து அல்லாதவர் எனக் குறிப்பிடுகிறீர்கள். இங்கு பிறந்த என்னை, நீங்கள் இந்து என அழைக்க வேண்டும்" என்றார்.

கேரள கவர்னர் ஆரிஃப் முகமதுகான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய மகனுடன் இருமுடி கட்டி சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.