Published:Updated:

``சேது சமுத்திர திட்டத்தை அரசு கைவிட வேண்டும்!" - பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

சேது சமுத்திர திட்டம்
News
சேது சமுத்திர திட்டம்

`இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரையிலுள்ள 140 மீனவ கிராமங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோகும்.' - பூவுலகின் நண்பர்கள்

Published:Updated:

``சேது சமுத்திர திட்டத்தை அரசு கைவிட வேண்டும்!" - பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

`இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரையிலுள்ள 140 மீனவ கிராமங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோகும்.' - பூவுலகின் நண்பர்கள்

சேது சமுத்திர திட்டம்
News
சேது சமுத்திர திட்டம்

``சேது சமுத்திர திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரையிலுள்ள 140 மீனவ கிராமங்களைச் சேர்ந்த லட்சகணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோகும். இந்தத் திட்டத்தால் கடலை ஆழப்படுத்தும் நிறுவன உரிமையாளர்களுக்கும், துறைமுகம் அமைக்கும் அதானி போன்ற தொழிலதிபர்களுக்கும்தான் நன்மை" என அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர்.

சேது சமுத்திர திட்டம் தொடக்கம்
சேது சமுத்திர திட்டம் தொடக்கம்

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``சேது கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி 12.01.2023 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ரூ.2,427 கோடி செலவில் 02.07.2005 அன்று மதுரையில் அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் ராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையிலுள்ள ஆதாம் பாலம் மணல் திட்டுப் பகுதியில் கால்வாய் தோண்டுவதற்கு 17.09.2007-ல் தடைவிதித்தது.

அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தடையை இந்துத்துவ பிரிவினை சக்திகளும், பா.ஜ.க., அ.தி.மு.க ஆகிய கட்சிகளும் தங்கள் அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்தத் தொடங்கி சேது கால்வாய்க்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர். அவர்கள் எதிர்த்ததற்காகவே இந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என்கிற வழியில் தமிழ்நாட்டின் ஜனநாயக சக்திகளும், அரசியல் கட்சிகளும் முடிவெடுத்திருப்பது வேதனைக்குரியது. இந்தத் திட்டத்தால் கிடைக்கும் பலன்களைவிட சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு அதிகம் என்பதை அவர்கள் உணர வேண்டும். மன்னார் வளைகுடா (Gulf of mannar), பாக் நீரினை (Palk Straight), பாக் ஜலசந்தி (Palk Bay) ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 167 கி.மீ தொலைவுக்கு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது. இதில் 89 கி.மீ நீளத்துக்கு, 12 மீட்டர் ஆழத்துக்கு கடல் தூர்வாரப்படும் (Dredging) எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சேது கால்வாய்
சேது கால்வாய்

மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்திருக்கும் 21 தீவுகளை உள்ளடக்கிய 10,500 சதுர கி.மீ அளவுக்குப் பரந்து விரிந்திருக்கும் கடற்பரப்பு, `மன்னார் வளைகுடா உயிர்மண்டலக் காப்பகம்’ (Biosphere Reserve) என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது உலக அளவில் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. இந்தப் பகுதியில் 104 வகை பவளத்திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், 280 வகை கடற்பஞ்சுகள், 92 வகை பவளங்கள், 22 வகை கடல் விசிறிகள், 160 வகை பலசுனைப்புழுக்கள், 103 வகை முட்தோலிகள், கடல் சங்குகள், பங்குனி ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற 4,223 வகை உயிரினங்கள் வாழும் உயிர்ப்பன்மயம் நிறைந்த பகுதியாக இருக்கிறது. இந்தியக் கடல் பகுதியிலேயே இரண்டாயிரத்துக்கும் அதிகமான மீன் வகைகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில்தான் இருக்கின்றன. அழிந்துவரும் பாலூட்டி இனங்களைச் சேர்ந்த ஆவுளியாவும் (Dugong), ஓங்கில்களும் (டால்பின்) இந்தப் பகுதியில் காணப்படுகின்றன. (ஆவுளியா கடற்பசுக்களை பாதுகாக்கும் பொருட்டு 15.02.2022 அன்று தமிழ்நாடு அரசு ஆவுளியா உயிர்மண்டலக் காப்பகத்தை 5 கோடி ரூபாய் செலவில் உருவாக்கியிருக்கிறது).

மன்னார் வளைகுடா
மன்னார் வளைகுடா
விகடன்

ஒருபுறம் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மன்னார் வளைகுடா பகுதியைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்துவிட்டு, மறுபுறம் சேது கால்வாய் திட்டம் என்ற பெயரில் வணிக நோக்குக்காக அந்தப் பகுதியின் உயிர்ப்பன்மயத்தை அழிக்க நினைப்பது எப்படிச் சரியாகும்... இந்தப் பகுதியில் காணப்படும் பவளத்திட்டுகள் (corals), கடற்புற்கள் (Sea grass), சதுப்புநிலக் காடுகள் (Mangroves) ஆகிய மூன்றும்தான் கடல் சூழல் அமைவின் ஆரோக்கியத்தில் மிக முக்கியப் பங்காற்றுபவை. இவை ஒன்றுக்கொன்று பெரிதும் தொடர்புடைய சூழல் அமைவுகள். சதுப்புநிலக் காடுகளிலிருந்து நீரில் கலக்கும் மரத்தின் பாகங்கள் கடற்புற்களுக்கு ஊட்டச்சத்தாக மாறுகின்றன. கடற்புற்களும், பவளப்பாறைகளும் சேர்ந்து பல கடல்வாழ் உயிரினங்களுக்கு மேய்ச்சல் இடமாக (grazing grounds) இருக்கின்றன. இத்தகைய அரிய உயிர்ச்சூழல் அமைவுதான் சேது கால்வாய் திட்டம் என்ற பெயரில் அழியப்போகிறது.

மன்னார் வளைகுடா உயிர்மண்டலக் காப்பகப் பகுதியிலுள்ள 21 தீவுகளை அலைகளின் அழுத்தத்திலிருந்தும், கடல் அரிப்பிலிருந்தும் அரணாகக் காத்து நிற்பது தீவுகளைச் சுற்றி இருக்கும் பவளத்திட்டுகள்தான். தொடர்ந்து சட்டவிரோதமாக பவளத்திட்டுகள் கடத்தப்படுவதாலும், காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகளில் ஒன்றான கடல்மட்ட உயர்வாலும், கடல் நீரோட்ட மாறுபாட்டாலும் மன்னார் வளைகுடா பகுதியிலுள்ள 21 தீவுகளில் இரண்டு தீவுகள் (பூமரிச்சான், விலங்குசாலி) ஏற்கெனவே நீரில் மூழ்கிவிட்டன. சேது கால்வாய் திட்டத்துக்காக இந்தப் பகுதியில் கடல் ஆழப்படுத்தப்பட்டால் பல லட்சம் ஆண்டுகளாக பூமியின் பரிணாமத்தில் உருவான இயற்கை அரணாக விளங்கும் பவளத்திட்டு அடுக்குகள் (coral reefs) பாதிப்புக்கு உள்ளாவதோடு, ஏற்படப்போகும் அலையின் அழுத்தத்தின் காரணமாக தீவுகள் மூழ்குவதோடு இந்தப் பகுதியின் உயிர்பன்மயமே முற்றிலும் அழிந்துபோகும் வாய்ப்பிருக்கிறது.

சேது சமுத்திர திட்டம்
சேது சமுத்திர திட்டம்

சேது கால்வாய் திட்டத்துக்கு தேர்வுசெய்யப்பட்டிருக்கும் பகுதி இயற்கையாகவே கடலின் வண்டல் படிமங்கள் வந்து சேரும் இடம். இந்தத் தரைக்கடலின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு ஆழத்தில் வண்டல்கள் வந்து சேருகின்றன. இவை குறித்தான முழுமையான ஆய்வுகள் இன்னும் செய்து முடிக்கப்படாத நிலையில், இந்தப் பகுதியில் 89 கி.மீ நீளத்துக்குக் கடலை ஆழப்படுத்துவது என்பது பல்வேறு வகையான மீள்புதுப்பிக்க முடியாத சூழல் பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடும். வண்டல் படிவுகள் இயற்கையாக உருவாவதால், அவை தொடர்ந்து படிந்துகொண்டே இருக்கும். ஆகவே, கடலை ஆழப்படுத்துதல் / வண்டல் படிவுகள் அகற்றலும் தொடர்ந்து செய்யப்படும். இதற்கான செலவுகளையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.

மன்னார் வளைகுடா
மன்னார் வளைகுடா

பொருளாதார கண்ணோட்டத்தில் பார்த்தால்கூட இந்தத் திட்டம் பலனளிக்காது எனக் கடல் போக்குவரத்து நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக, சேது கால்வாயில் 10 மீட்டர் மிதவை ஆழம் (DRAFT) கொண்ட 30,000 டன்னுக்கு உட்பட்ட கப்பல்கள் மட்டுமே செல்ல முடியும். அதற்குமேல் கொள்ளளவு கொண்ட கப்பல்கள் செல்ல முடியாது. பொதுவாகவே மேற்குக் கடற்கரைகளுக்கிடையே குறைவான எண்ணிக்கையில் மட்டுமே கப்பல்கள் செல்கின்றன. அப்படி 30,000 டன்னுக்குக் குறைவான கப்பல்கள் சேது கால்வாயில் சென்றாலும் சுங்கவரி, பைலட் கப்பல் வாடகை எனச் செலவு செய்ய வேண்டும். மேலும், சேதுக் கால்வாயில் செல்லும்போது கப்பல்கள் வேகத்தைக் குறைத்துப் பயணிக்க வேண்டியிருப்பதால் கூடுதல் எரிபொருள் செலவாகும். சூயஸ், பனாமா போன்ற கால்வாய்கள் பல வார பயணத்தையும், எரிபொருளையும் மிச்சப்படுத்திக் கொடுக்கின்றன. மேலும் அவை நிலத்தைத் தோண்டி அமைக்கப்பட்ட கால்வாய்கள் என்பதை நாம் கருத்தில்கொள்ள வேண்டும். ஆனால், சேது கால்வாயோ 30 மணி நேரத்தையும், 424 நாட்டிகல் மைல் தூரத்தையும் மட்டுமே மிச்சப்படுத்துவதால், கப்பல் நிறுவனங்களுக்கு பெரிய அளவில் லாபமிருக்காது.

இந்தத் திட்டத்துக்காக 2012-ம் ஆண்டு NEERI நிறுவனம் தயாரித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை பல்வேறு உண்மைகளை மறைத்தது. சேது கால்வாயைக் கடந்து செல்லும் கப்பல்களிலிருந்து சிந்தும் எண்ணெய்க் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து EIA-வில் எந்தக் குறிப்பும் இல்லை. சேது கால்வாயை ஆழப்படுத்தும் பகுதியில் ஹைட்ரோ டைனமிக்ஸ், ஜியோமார்ஃபாலஜி ஆகியவற்றால் ஏற்படும் மாற்றம் பற்றி EIA பேசவில்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை கிரீன் பீஸ் அமைப்பு முன்வைத்திருக்கிறது.

பூவுலகின் நண்பர்கள்
பூவுலகின் நண்பர்கள்

சேது கால்வாய் திட்டம் வந்தால் தமிழ்நாட்டில் பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரையிலுள்ள 140 மீனவ கிராமங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோகும். சேது சமுத்திர திட்டத்தால் கடலை ஆழப்படுத்தும் நிறுவன உரிமையாளர்களுக்கும், துறைமுகம் அமைக்கும் அதானி போன்ற தொழிலதிபர்களுக்கும்தான் நன்மையே தவிர, தங்களின் தற்சார்பு பொருளாதரத்திலிருந்து கூலித் தொழிலாளியாக மாற்றப்படப்போகும் லட்சகணக்கான மீனவர்களுக்கு இது வளர்ச்சி இல்லை... வீழ்ச்சி. மேற்கூறிய விஷயங்களைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவித்திருக்கின்றனர்.