பீகார் மாநிலம், வைஷாலி மாவட்டத்தில் சாலையோரம் இருந்த கோயிலில் பக்தர்கள் வழிபாடு நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் வேகமாக வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கோயிலில் வழிபாடு நிகழ்த்திக்கொண்டிருந்த பக்தர்கள்மீது லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பலர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், பலர் காயமடைந்திருக்கிறார்கள். இது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது.

இந்த விபத்து குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, "பீகார் மாநிலத்தில் நடந்த சாலை விபத்து மிகுந்த வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், ``பீகார் மாநிலம், வைஷாலியில் நடந்த விபத்து வருத்தம் அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன். மேலும், இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்" என மோடியின் பெயரில் பதிவிடப்பட்டிருக்கிறது.