
என் இல்லம் பசுமை இல்லம்
“ஆன்லைன் பார்த்துதான் வீட்டுத் தோட்டமும் மாடித்தோட்டமும் அமைத்தேன்” என்கிற ராதா கண்ணன், சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த இல்லத்தரசி.
பிளாஸ்டிக் பாட்டில்கள், டயர்கள், காலணிகள் எனக் கிடைக்கும் அனைத்துப் பொருள்களிலும் 500-க்கும் மேற்பட்ட செடிகளை வளர்த்து அழகிய தோட்டமாக்கியிருக்கிறார் இவர்.


‘‘ஆரம்பத்தில் எங்க அப்பார்ட்மென்ட்டில் செடிகள் வளர்க்க ஆரம்பிச்சேன். 1,200 சதுர அடி மாடிங்கிறதுனால எல்லா வகையான செடிகளையும் வளர்க்க முடிஞ்சுது. அதே நேரம், அப்பார்ட்மென்ட் மாடி பொது இடம் என்கிறதுனால, ‘அதிகமா தண்ணீர் செலவழிக்கறீங்க, கட்டடம் விரிசல் விட்டுடும், கொசு வருது’ன்னு ஏகப்பட்ட புகார்களை எதிர்கொள்ள ஆரம்பிச்சேன். அதனால, தோட்டத்தை அப்படியே என் கணவரின் அலுவலகத்துக்கு மாத்தினேன். அவர் அலுவலகத்துக்கு வெளியே இருந்த இடங்களில் செடிகள் வளர்க்க ஆரம்பிச்சேன். தினமும் வீட்டு வேலைகளை முடிச்சுட்டு, காலை 10 மணிக்கு அவருடன் அலுவலகத்துக்குப் போயிடுவேன். உரம் தயாரிக்கிறது, தண்ணீர் ஊத்துறது, களை எடுக்கிறதுன்னு ரெண்டு மணி நேரம் வேலை இருக்கும்’’ என்கிற ராதா தன் வீட்டிலேயே பீன்ஸ் வளர்க்கும்முறை பற்றி விளக்குகிறார்.

பீன்ஸ் வளர்ப்பு
செடி பீன்ஸ், கொடி பீன்ஸ்னு ரெண்டு வகை இருக்கு. தொட்டி வெச்சு பராமரிக்க மட்டுமே இடம் இருக்கு என்கிறவங்களுக்கு செடி பீன்ஸ் ஏற்றது. மாடித்தோட்டம் போட நினைக்கிறவங்களுக்கு கொடி பீன்ஸ் ஏற்றது. தென்னங்கழிவு, மண்புழு உரம், செம்மண்ணை 2:3:1 என்கிற விகிதத்தில் தொட்டியில் நிரப்பணும். பிறகு, ஒருநாள் இரவு முழுவதும் பஞ்சகவ்யா / தண்ணீரில் ஊறவைத்த பீன்ஸ் விதைகளை மண் தொட்டியில் ஆள்காட்டி விரல் அளவுக்குத் தோண்டி, தொட்டிக்கு இரண்டு என்று நடணும். 15 நாள்களில் செடி துளிர்க்க ஆரம்பிச்சிரும். அந்த நேரத்தில் பஞ்ச கவ்யா / 3ஜி கரைசல் (பச்சை மிளகாய், பூண்டு, சம அளவு எடுத்து அரைத்து, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி லிட்டர் எனக் கலந்து கொள்வது) தெளிக்கணும்.

கொடி பீன்ஸ் விதை நட்ட 40-வது நாள் செடியில் பூப்பூக்கத் தொடங்கி விடும். இந்தப் பருவத்தில் மக்கும் குப்பை, கடலைப் பிண்ணாக்கு, எள்ளுப் பிண்ணாக்கு மூன்றையும் சம அளவு எடுத்து ஒன்றாக அரைத்து, செடி வளர்ந்திருக்கும் தொட்டியில் 3 செ.மீ குழிதோண்டி உரமாக இடணும். ஒரு தொட்டிக்கு 50 கிராம் உரம் போதுமானது. இந்தச் செடியை, கொடி அல்லது பந்தலில் ஏற்றிவிட வேண்டும்.
50-வது நாளிலிருந்து காய்கள் காய்க்கத் தொடங்கி விடும். ஒருமுறை நட்ட செடியில் 100 நாள்கள் வரை அறுவடை செய்யலாம். ஒரே நேரத்தில் இரண்டு பீன்ஸ் செடிகள் விதைத்தால் நான்கு பேர் உள்ள குடும்பத்துக்குப் போதுமான காய்கள் கிடைக்கும்.
பீன்ஸ் விதைக்கு... சில பீன்ஸ்களை செடியிலேயே காயவிடணும். பிறகு, தண்ணீரில் நனைத்து நிழலில் உலர்த்தி சாம்பலில் கலந்து வைத்தால் விதை ரெடி.

மண் வளமாகும்!
காய்கறிக் கழிவுகளை நேரிடையாக மண்ணில் விதைத்தால், அவை மக்க நீண்ட நாள்கள் ஆகும். அதனால், அவற்றை அரைத்தோ, காயவைத்தோ அதன் பிறகு சிறிதாக நறுக்கி மண்ணில் புதைக்கலாம்.
கடைகளில் விற்கும் தென்னங்கழிவுகளை வாங்க முடியாவிட்டால், வீட்டில் இருக்கும் தேங்காய் நார்களைத் தண்ணீரில் ஊறவைத்து மூன்று நாள்களுக்குப் பிறகு மண்ணில் புதைக்கலாம்.
செடிகளை மண் தொட்டி, பழைய குடம். ஷூ, கார் பேட்டரி, தண்ணீர் கேன் போன்றவற்றில்கூட வளர்க்கலாம். இவற்றிலெல்லாம் தண்ணீர் வழிய போதுமான துளைகள் அமைத்தால் போதும்.
`தோட்டம் வைத்திருக்கிறேன், அறுவடை முடிந்து விட்டது. கோடை நேரத்தில் செடிகளைப் பராமரிக்க முடியவில்லை' என்பவர்கள் தொட்டி மண்ணை ஓரிடத்தில் மொத்தமாகக் கொட்டி அத்துடன் சாம்பல், மண்புழு உரம் கலந்து லேசாகத் தண்ணீர் தெளித்து வெயில் படாதவாறு சாக்கால் மூடவும். கோடை சீஸன் முடிந்த பிறகு, அந்த வளமான மண்ணில் ஆடிப் பட்டம் விதைக்கலாம்.
கோடை பருவத்துக்கேற்ற காய்கறிகள்
இடம் குறைவாக இருக்கிறது என்பவர்கள் மிளகாய், வெண்டை, கத்திரிக்காய் போன்றவற்றை விதைக்கலாம். இடம் அதிகமாக இருக்கிறது என்பவர்கள் தர்பூசணி பழங்களை விதைக்கலாம்.