
ராதா பாலசந்தர்
பள்ளிக்கூடத்தில் ‘ஸ்மார்ட் க்ளாஸ்’, வீட்டில் யூடியூபில் பாடம் என ‘ஸ்மார்ட்டாகவே’ ஓடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் உண்மையில் ஸ்மார்ட்டாக இருக்கிறார்களா? இல்லை என்பதே உண்மை. பிறந்ததிலிருந்தே தங்கள் உள்ளங்கைகளில் மொபைல், டேப் தவழ வளரும் குழந்தைகள் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்கிறார்களே தவிர, வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களைக் கற்றுக்கொள்வதில்லை. செல்போனிலும் கம்ப்யூட்ட ரிலும் பாடம் படிப்பது ‘ஒருவழித் தகவல் பரிமாற்ற முறையில் (one way communication)’ நடத்தப்படுகிறது. இதில், குழந்தைகளுக்கான உரையாடல் தடைப்படுகிறது.
ஓடியாடி விளையாடுவது, பேச்சுத்திறன், சமூகச் செயல்பாடுகள் இன்றைய குழந்தைகளிடத்தில் குறைந்துவருகின்றன. விளைவு, நிறைய சிறுவர்களிடம் உடற்பருமன், கற்றல் குறைபாடு பிரச்னைகள் காணப்படு கின்றன. இவையெல்லாம் வரும் முன் காக்க, தினமும் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை குழந்தைகள் உடற்பயிற்சி செய்வது அவசியம். கான்க்ரீட் காடுகளாகிவிட்ட நகரங்களில், குழந்தைகள் ஓடியாட இடமில்லை என்றாலும், அவர்களை வீட்டுக்குள்ளேயே சில பயிற்சிகளைச் செய்ய வைக்கலாம். இதற்குப் பெற்றோரும் மெனக்கெட வேண்டும்.
ஆனந்த விகடன்’ வாசகர்களுக்காக வாரந்தோறும் ஒவ்வொரு விஷயத்தைப் பரிந்துரைக்கிறார்கள் பிரபலங்கள். இந்த வாரம், மொபைல் போனே கதியாக இருக்கும் குழந்தைகளை வளர்ப்பது குறித்துச் சொல்கிறார், குழந்தைகள் நல மருத்துவர் ராதா பாலசந்தர்.
பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வந்ததும், குழந்தை களை உடனே வீட்டுப்பாடம் செய்ய வைக்க வேண்டாம். ‘படிப்புக்குப் பின் விளையாட்டு’ என்றால், குழந்தையின் கவனம் முழுக்க, ‘எப்போது விளை யாடலாம்’ என்பதில் மட்டுமே இருக்கும். படிக்கும்போது கவனச்சிதறல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். மாறாக, ‘விளையாட்டுக்குப் பின் படிப்பு’ எனக் கடைப்பிடிக்கலாம். விளை யாட்டுக்கான அந்த நேரத்தை, உடலுக்கும் மனதுக்கும் தேவைப்படும் பயிற்சிகளை அவர்களைச் செய்ய வைப்ப தாக அமைத்துக்கொள்ளலாம்.

வீட்டில் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளினாலேயே, உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க முடியும். ஜம்பிங் க்ளாப், சிட் அண்டு ஸ்டாண்டு பயிற்சிகள், எட்டில் நடத்தல் பயிற்சி, அடியொட்டி அடிவைத்து நேர்கோட்டில் நடக்கும் டேன்டம்(Tandem) வாக்கிங் என எளிமையான உடற்பயிற்சிகளை குழந்தை களைச் செய்யவைக்கலாம். அவர்களை அதை ஆர்வத்து டனும் மகிழ்ச்சியுடனும் செய்யவைக்க ஒரு வழி... பெற்றோரும் அவர்களுடன் இணைந்துகொள்வது. ‘யாரு 20 கவுன்டிங்ஸ் ஃபினிஷ் பண்றான்னு பாக்கலாமா?’ என்று ஒரு விளையாட்டாக அதைக் குழந்தைகளுடன் பெற்றோரும் சேர்ந்து செய்யும்போது, அந்தப் பொழுது இன்னும் உற்சாகமானதாக அமையும். அப்போது அவர்களிடம், ‘இன்னிக்கு ஸ்கூல்ல சுவாரஸ்யமா என்ன நடந்தது?’, ‘ஸ்போர்ட்ஸ் க்ளாஸ்ல என்ன விளையாடினீங்க?’ எனப் பேச்சுக்கொடுக்கும்போது, அது குவாலிட்டி டைம் ஆகி, பெற்றோர் - குழந்தைகளின் உறவையும் பலமாக்கும்.
பெரும்பாலான இல்லங்களில், இருந்த இடத்தி லேயே குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் செய்து கொடுக்கிறார்கள் பெற்றோர்கள். சாப்பிட்ட தட்டைக்கூட அவர்களை எடுத்து வைக்க விடாமல் செல்லம் கொடுத்து வளர்ப்பது, குழந்தைகளின் உடல்நலம், மனநலம் இரண்டுக்குமே நல்லதல்ல. குழந்தைகளால் செய்ய முடிகிற வேலைகளை அவர்களைச் செய்ய வைக்க வேண்டும். அப்படி ஒரு வேலையை அவர்கள் சரியாகச் செய்யும்போது, தட்டிக்கொடுத்துப் பாராட்ட லாம்.

குழந்தைகளை கிச்சனுக்குள் அனுமதித்து, பெற்றோர்கள் செய்யும் வேலைகளை கவனிக்க வைக்கலாம். பட்டாணியை உரிப்பது, மார்க்கெட்டி லிருந்து வாங்கிவந்த காய்கறிகளைப் பிரித்து, எடுத்து வைப்பது போன்ற அவர்கள் வயதுக்கேற்ற வேலைகளை அவர்களைச் செய்யவைக்கலாம். கைகள், விரல்கள், கண்களை ஒரு புள்ளியில் இணைத்து இயக்கும் இதுபோன்ற வேலைகள், அவர்களின் ஃபைன் மோட்டார் ஸ்கில்ஸை வளர்க்கும். வார்ட்ரோப் க்ளீனிங், ஹவுஸ் கீப்பிங் வேலைகளிலும், பெற்றோர்கள் குழந்தைகளையும் தங்களுடன் சேர்த்து ஈடுபடுத்தலாம். உடலுக்குச் சுறுசுறுப்பான ஒரு வேலை கிடைப்பதுடன், பொறுப்புணர்வையும் பழகு வார்கள் குழந்தைகள்.
முக்கியமாக, குழந்தைகள் செய்ய வேண்டிய வேலை களைப் பெற்றோர்கள் செய்யக்கூடாது. விளையாடி முடித்த உடன், விளையாட்டுப் பொருள்களைக் குழந்தைகளே எடுத்துவைக்கும் ஒழுங்கைப் பழக்க வேண்டியது அவசியம். வீட்டின் ஓர் ஓரத்தில், குழந்தைகளுக்குப் பிடித்த ஸ்டிக்கர்களைச் சுவர்களில் ஒட்டிக்கொடுத்து, அல்லது அவர்களை ஒட்டவைத்து, அங்கே ஒரு பாய்விரித்து, ‘இது உனக்கான ஸ்பேஸ். இங்கே நீ புத்தகம் படிக்கலாம், பிடிச்ச கிராஃப்ட் செய்யலாம். இதைச் சுத்தமா வெச்சுக்க வேண்டியது உன் பொறுப்பு’ என்று அறிவுறுத்தலாம்.
குழந்தைகளிடத்தில் நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான திறன்களை வளர்த்தெடுப்பதில் பெற்றோர்களுக்கு முக்கியப் பங்குண்டு. அப்போதுதான் உண்மையிலேயே நம் பிள்ளைகள் ‘ஸ்மார்ட் பிள்ளைகள்’ ஆவார்கள்!