`உலகப் பண்பாடுகளுக்கு முன்னுதாரணம் இந்தியா’ எனப் பெருமை பேசும் நிலையில், ஒவ்வொரு 10 நிமிடமும் ஆதிதிராவிடர்களுக்கு எதிரான வன்முறை இந்தியாவில் நிகழ்த்தப்படுகிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம். அது போன்ற ஒரு கோரச் சம்பவம் ஒடிசா மாநிலத்தில் சமீபத்தில் நடந்தேறியிருக்கிறது. ஒடிசா மாநிலம், பார்கர் மாவட்டத்தில் பாதம்பூர் என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் முச்சுனு எனும் கூலித் தொழுலாளி இரண்டு மகள்கள் மற்றும் மனைவியுடன் வசித்துவந்திருக்கிறார்.

இந்த நிலையில். அவருக்குக் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால், அவரைத் தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். நிலைமை கைமீறிச் சென்றதால், அவரை உடனே அரசு மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார்கள். மேலும், அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார். உடனே பிரேத பரிசோதனை முடித்து அவரது உடல் சொந்த கிராமமான பாதம்பூருக்கு ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால், குடும்பத்தாரும், உறவினர்களும், கிராம மக்களும் அந்த உடலை வாங்க மறுத்துவிட்டனர்.
பிரேதத்துடன் என்ன செய்வது எனத் தெரியாமல் விழித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உடலை வாங்க மறுப்பதற்கான காரணத்தை விசாரித்தபோதுதான் அந்த அதிர்ச்சிகர காரணம் தெரியவந்தது. கிராம மக்கள், `இறந்த முச்சுனு-வின் உடலை பட்டியலினத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் தொட்டு பிரேத பரிசோதனை செய்திருக்கிறார்கள். அதனால், அந்த உடலை நாங்கள் வாங்க மாட்டோம். எனவே, அதை நீங்களே எடுத்துச் சென்று தகனம் செய்துவிடுங்கள்’ எனக் கூறி வலியுறுத்தியிருக்கிறார்கள்.
ஆம்புலன்ஸ் ஊழியரும் அந்த உடலை தகனம் செய்ய இடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல முயன்றபோது, அந்த கிராமத்தில். அதற்கான சாலை வசதியும் இல்லாமல் இருந்திருக்கிறது. இதற்கு மேல் வேறு எதுவும் செய்ய முடியாததால், அந்த கிராமத் தலைவியின் கணவரிடம் இந்த உடல் தொடர்பாக பேசியிருக்கிறார். அதன் பிறகு முச்சுனு-வின் உடலை அவரிடமே ஒப்படைத்திருக்கிறார். அவரும் உடலைப் பெற்றுக்கொண்டு பைக்கில் கட்டி எடுத்துச் சென்று தகனம் செய்திருக்கிறார். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காவல்துறை இது சம்பந்தமாக விசாரித்துவருகிறது.