‘சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் வளர்ச்சி’ என்னும் நோக்கத்தோடு 2013-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி, சென்னையில் தொடங்கப்பட்டது சட்ட பஞ்சாயத்து இயக்கம். இந்த இயக்கத்தின் ஏழாவது ஆண்டு தொடக்க விழா, விழுப்புரத்தில உள்ள ஒரு தனியார் அரங்கில் சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில், இதுவரை நாம் என்ன செய்தோம், இனி என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து விவாதித்தனர்.

செங்கோல் விருதுபெற்ற காரைக்குடியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் அருள் பேசுகையில்,
“நான் இந்த இயக்கத்தைச் சேர்ந்தவன் இல்லை. நேர்மைக்கான இந்த விருது எனக்கு கிடைக்குமென்று நினைத்தும் பார்க்கவில்லை. நான் இன்ஜினீயரிங் படித்தேன். சமுதாயத்தில் நடக்கும் விஷயங்களைப் பார்க்கும்போது ஏதேனும் ஓர் அரசு வேலைக்குச் சென்று இவற்றை மாற்ற வேண்டும் என நினைப்பேன். அதன்படி, கிராம நிர்வாக அலுவலர் வேலை கிடைத்தது. வேலையில் சேர்ந்த அன்றே நாற்காலிக்குப் பின்னால், ‘லஞ்சத்தை தவிர்ப்பீர் யாரேனும் லஞ்சம் கேட்டால் என் தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொள்ளுங்கள்’ என்று செல்போன் நம்பரையும் எழுதிவைத்தேன். ஆக்கிரமிப்பில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான 40 ஏக்கர் அரசு நிலங்களை மீட்டெடுத்தேன்.
இதைத் தொடர்ந்து, என் மேல் கோபம்கொண்ட என்னுடைய உயர் அதிகாரிகள் சிலர், ஒன்பதுக்கும் மேற்பட்ட வழக்குகளை என்மேல் பதிவுசெய்து சஸ்பெண்ட் செய்யவைத்தனர். நேர்மையாக இருந்ததற்கு, தற்போது ஒரு வருடமாக சஸ்பெண்டில் இருக்கிறேன். இந்த நடவடிக்கைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறேன். இந்த இயக்கம், அரசு அதிகாரிகளுக்கு எதிரான இயக்கம் எனப் பலராலும் கூறப்படுவது பொய். தவறு செய்யும் அரசு ஊழியர்களுக்கு மட்டும்தான் எதிரானது” என்றார்.
விழாவில், சமூக நலனுக்காகப் பணியாற்றும் பல்வேறு அறக்கட்டளைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இயக்கத்தின் மாநிலச் செயலாளர் இளங்கோவன் பேசுகையில், “உள்ளாட்சித் தேர்தல் வேலைகள் தொடங்கிவிட்டன. சிலர், ‘உங்கள் இயக்கம் ஒரு கட்சியாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுமா?’ என்று கேட்கின்றனர். நம் இயக்கம் ஒருபோதும் அரசியல் கட்சியாக மாறாது. நேரடியாகவும் தேர்தலில் போட்டியிடாது. ஆனால், விருப்பம் உள்ள உறுப்பினர்கள் போட்டியிடலாம். அதற்காக இயக்கம் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்யும். நாம், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்பதற்காக ஏதேனும் வார்டு உறுப்பினரிடமோ, கிராம ஊராட்சித் தலைவரிடமோ சென்று முறையிடவேண்டிய நிலை உள்ளது. அந்த இடத்தில் நாமே இருக்கும்போது, மக்களுக்குத் தேவையானதை எளிதாகப் பெற்றுத் தந்துவிட முடியும்.

சசிகலா முதலமைச்சர் ஆகாமல் தடுத்ததில் நம் இயக்கத்திற்கு பெரும் பங்கு உண்டு. சசிகலா முதலமைச்சர் ஆகியிருந்தால், தமிழக அரசு அன்று இரண்டாவது அவமானத்தைச் சந்தித்திருக்கும். நல்லவேளை அப்படி ஆகவில்லை. சட்ட பஞ்சாயத்து இயக்கம், அரசு ஊழியர்களுக்கு எதிரானது இல்லை. யார் தவறு செய்கிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான் எதிராக இருக்கும். உண்மைக்கும், உண்மைக்குத் துணையாக இருப்பவர்களுக்கும், என்றும் நம் இயக்கம் துணையாகவே இருக்கும்” என்றார்.
செந்தில் ஆறுமுகம் பேசுகையில், “தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது ஒப்புக்குச் சப்பாணியாகச் செயல்பட்டுக்கொண்டுள்ளது. கொள்ளையடிப்பவர்கள் கொள்ளை அடித்துக்கொண்டுதான் உள்ளனர்.

லோக் ஆயுக்தா எப்போது சிறப்பாக நடைபெறும் என்றால், அரசு ஒழுங்காக இருக்க வேண்டும். அப்படி இல்லையேல் மக்கள் நினைத்தால் முடியும். அது ஜல்லிக்கட்டுக்கு திரண்டது போல் மக்கள் ஒன்றாகத் திரண்டால் முடியும். ஆனால், பல்வேறு காரணங்களால் நாம் ஒன்று சேர முடியாமல் உள்ளோம். சட்ட பஞ்சாயத்து இயக்கம் என்றோ அரசியலுக்கு வந்துவிட்டது. ஆனால்,தேர்தல் அரசியலில் என்றும் ஈடுபடாது. இன்றும் மக்கள் நலன் சார்ந்த அரசியலில் ஈடுபட்டுக்கொண்டுதான் உள்ளது” என்றார்.
மாநில பொருளாளர் ஜாகிர் ஹீசைனை சந்தித்துப் பேசினோம்.
“இந்த இயக்கம் தொடங்கப்பட்டு, தற்போது ஏழாவது ஆண்டு விழாவை சந்தித்துள்ளது. ‘சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் வளர்ச்சி’ எனும் அடிப்படை நோக்கத்தோடுதான் இந்த இயக்கம் செயல்பட்டுவருகிறது. நாங்கள், ஒரு கால்சென்டர் வைத்து நடத்தி வருகிறோம். சட்டச் சிக்கல்கள், அரசு ஊழியர்களால் ஏமாற்றப்படுபவர்கள், ஆர்.டி.ஐ- யில் எப்படி தகவல் பெறுவது என்று சந்தேகம் உள்ளவர்கள் என எந்த அடிப்படை விஷயத்துக்காகவும், 7667100100 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பேசினால், எங்கள் இயக்கம் அவர்களுக்குத் துணை நிற்கும், உதவி செய்யும்.

இந்த எண், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். இந்த ஆறு ஆண்டுகளில் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட அழைப்புகளைப் பெற்று, அதற்கு தீர்வும் அளித்துள்ளோம். ஒரு 8 மாவட்டங்களுக்கு மேல் இந்த இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள்மூலம் ஆர்.டி.ஐ பயிற்சி வகுப்பு நடத்துகின்றோம். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில், மக்களின் பிரச்னைகள் குறித்து தீர்வு காண்பதற்கு முகாம் நடத்தப்படுகிறது. அப்போது கூறப்படும் பிரச்னைகளைத் திங்கள்கிழமை அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோ அல்லது பொதுநல வழக்கு போட்டோ தீர்வு அளிக்கிறோம்.
தொலைக்காட்சியில் நடைபெறும் விவாதங்களில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைப் பங்கெடுக்கச் செய்து, மக்களின் குரலாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். மது இல்லாத தமிழகம் அமைய வேண்டும் என்பதையும் வலியுறுத்திவருகிறோம். இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம், ‘நாளைய சமுதாயத்தின் நல்ல தலைவர்களை உருவாக்குவது’ என்றார்.