விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் அருகே உள்ளது பூரிகுடிசை கிராமம். இப்பகுதியில் உள்ள பனையேறிகள், நீண்ட நாட்களாக 'கள் தடை நீக்கம்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஜூன் 18, 19 ஆகிய தேதிகளில் பனங்காடு அறக்கட்டளையின் சார்பில் "பனை கனவுத் திருவிழா -2022" நடத்தப்பட்டது.
முதல் நாளன்று, பறை மேளங்கள் முழங்க, 100-க்கும் மேற்பட்ட பனையேறிகள் ஊர்வலமாக சென்று பனைமரத்திற்கு படையலிட்டு திருவிழாவை துவங்கினர். பனை மரங்கள் சூழ்ந்த ரம்மியமான பகுதியில் நடத்தப்பட்ட இந்த பனைத் திருவிழாவில், பலவகையான விற்பனையகங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பனை பொருட்களால் செய்யப்பட்ட அழகிய பொருட்கள், பலவகையான இயற்கை விதைகள், உணவுப் பொருட்கள், புத்தகங்கள், கைவினைப் பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்பட்டன.

மேலும், பனையால் ஏற்படும் நன்மைகள் குறித்த கருத்தரங்கமும் நடத்தப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான மக்கள், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை கண்டுகளித்ததுடன், விற்பனைக்கு வைக்கப்பட்ட பொருட்களை வாங்கியும் சென்றனர். முதல் நாள் இரவு, பனை பொருளால் உருவாக்கப்பட்ட கார்த்தி மாவொளியை 596 பேர் ஒரே நேரத்தில் சுழற்றி அசத்தியுள்ளனர். 596 பேர் ஒரே நேரத்தில் மாவொளி சுழற்றி அசத்தியது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என கூறப்படுகிறது. இந்த நிகழ்வு, 'அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
நாட்டுபுற கலைகள், நடனம், கண்காட்சி, கருத்தரங்கம் என 19ம் தேதியும் விழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க.. அன்று மதியம் விழா மேடைக்கு வருகை தந்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "வேளாண்மை எப்படி நம்முடைய பண்பாடு, வாழ்வியலாக உள்ளதோ.. அதுபோல பனையேறும் தொழிலும் வாழ்வியல் தான். வேளாண் தொழில் எப்படி வீழ்த்தப்பட்டதோ, அப்படித்தான் பனைத் தொழிலும் வீழ்த்தப்பட்டது. பனை காட்டிலேயே இந்த திருவிழா நடப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
மைதாவை தேவையில்லாமல் நாம் பயன்படுத்துகிறோம். ஆனால், பனங்கிழங்கு மாவிலேயே சப்பாத்தி போன்ற உணவுப்பொருட்களை செய்து சாப்பிடலாம். பனையின் அருமை தெரியாமல், அது இழிதொழில் போல பார்க்கப்படுகிறது. உலகத்தில் பனை போல மரமே கிடையாது. அதன், அனைத்து பாகங்களையும் மனிதனின் பயன்பாட்டுக்கு கொடுக்கின்ற உயிர் அது. பராமரிப்பு இல்லாமல் வளரும் மரமும் அதுதான், ஆயிரம் அடிக்கு சென்று தண்ணீரை எடுத்து வரும் பனை, மடிந்து சாகிறது என்றால்... உன் நிலம் பாலைவனமாக மாற போகிறது என்பது பொருள். தண்ணீர், இன்று வியாபார முதலாளிகளின் விலை உயர்ந்த சந்தைப் பொருளாகிவிட்டது.

பனைமரத்தின் பொருட்களிலிருந்து எண்ணற்ற பொருட்களை செய்யலாம். ஆனால், அதை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவதில்லை. நெகிழிப் பைகளால் என் நாடு குப்பை மேடாகிவிட்டது. அரசியலமைப்பு சட்டமே சொல்கிறது கள் உணவில் ஒரு பகுதி என்று. கள்ளை குடித்து செத்தவனும் கிடையாது... சொத்தை மொத்தமும் வித்தவனும் கிடையாது. கள் போதைப்பொருள் என்றால், மதுபான கடைகளில் விற்கப்படுவது எல்லாம் புனித நீரா... இதையெல்லாம் போதை என்று ஏன் சொல்லவில்லை? கேரளா, ஆந்திரா, புதுச்சேரி போன்ற பகுதிகளில் கள்ளு கடை இருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டும் இல்லாதது ஏனென்றால், கள்ளுக் கடையைத் திறந்தால் அரசாங்கம் படுத்துவிடும். இதைவிட துயரம் என்னவென்றால், மதுவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையையே ஆட்சியாளர்கள்தான் வைத்துள்ளார்கள். என்னுடைய எண்ணம், '10 ஆண்டு பசுமைத் திட்டம், பல கோடி பனைத் திட்டம்'என்பதே. நாங்கள் ஆட்சிக்கு வரும்போது பனைத் தொழில் செய்வது அரசுப் பணியாக மாற்றப்படும்" என்றார்.