மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 30 - லாரா சொல்வது உண்மையா?

பறக்கும்தட்டு
பிரீமியம் ஸ்டோரி
News
பறக்கும்தட்டு

இனி நான் சொல்பவை, அவநம்பிக்கையின் உச்சம். எவற்றுக்கும் என்னால் உத்தரவாதம் தர முடியாது. உலகம் முழுவதும் பேசப் படுவதையும், அறிந்தவற்றையும் சொல்கிறேன்

1969-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி, ஜார்ஜியாவிலிருக்கும் (Georgia) சிறிய நகரொன்றின் உணவகத்தில், இரவு உணவருந்திவிட்டு நண்பர்கள் சிலர் வெளியே வந்தனர். அவர்கள் மொத்தமாக 26 பேர் இருந்தார்கள். உணவகத்துக்கு வெளியே வந்து சிறிது நேரம் உரையாடினார்கள். அப்போது ஒரு நண்பன், ‘‘அங்கே பாருங்கள்...’’ என்று வானத்தைக் காட்டி அலறினான். அவன் காட்டிய திசையில், பிரகாசமான வெளிச்சத்துடன் ஒரு பொருள் மிதந்துகொண்டிருந்தது. இவர்களை நோக்கி மெல்லக் கீழே வரவும் ஆரம்பித்தது. சற்று தூரத்திலிருந்த பைன் மரங்கள் வரை வந்த பிறகு அசையாமல் நின்றுகொண்டது. அசையும்போதும், மிதந்தபடி நிற்கும்போதும் அதிலிருந்து எந்தவித ஒலியும் வரவில்லை. தங்களுக்கு முன்னால் ஒரு பறக்கும்தட்டு நிற்கிறது என்பதை நண்பர்கள் அனைவரும் புரிந்துகொண்டார்கள்.

லாரா ஐசனோவர்
லாரா ஐசனோவர்

பறக்கும்தட்டையே எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது, அதிலிருந்து வந்த வெள்ளை நிற வெளிச்சம் திடீரென நீலமாக மாறியது. பின்னர் சிவப்பாக மாறி, மீண்டும் வெள்ளை நிற ஒளியானது. பத்து நிமிடங்கள் வரை அது வானில் நின்றிருக்கலாம். திடீரென வேகமெடுத்து மறைந்துபோனது. என்ன நடக்கிறது என்றே அவர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் கண்டது அந்த ஊர் முழுவதும் பேசப்பட்டாலும், வெளியே அது பற்றிப் பெரிதாகத் தெரியவில்லை. அங்கிருந்த 26 பேரில் ஒருவர், 1970-ம் ஆண்டு ஜார்ஜியாவின் கவர்னரானார்.

அமெரிக்காவில் கவர்னர் என்பது மிகப்பெரிய ஒரு பதவி. அதன் பின்னர், 1973-ம் ஆண்டு ஜார்ஜியாவில் மீண்டும் பறக்கும்தட்டுகள் தோன்றியதைப் பலர் பார்த்தார்கள். அது, பத்திரிகைகளில் பரபரப்பாகப் பேசப்பட்டது. வழக்கம்போலப் பார்த்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் விவாதப் பொருளானது. பார்த்தவர்களில் ராணுவத் தளபதி ஒருவரும், சில மதிக்கத்தக்க பிரஜைகளும் இருந்தார்கள். அதுவரை, தனக்கு நடந்த சம்பவத்தை எவருக்கும் சொல்லாமலிருந்த கவர்னர், முதன்முதலாக வாயைத் திறந்தார். ‘‘பறக்கும்தட்டைப் பார்த்ததாக அவர்கள் சொல்வது உண்மைதான். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நானும் ஒரு பறக்கும்தட்டைக் கண்டிருக்கிறேன்’’ என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். தன் கைப்பட எழுதிய கடிதத்திலும் அதுபற்றிக் குறிப்பிட்டார். அந்தச் சமயத்தில் நடைபெற்ற லயன்ஸ் கிளப் கூட்டமொன்றில், பறக்கும் தட்டைப் பார்த்ததாகப் பேசியிருந்தார். அவர் பேசியதும், அவர் கைப்பட எழுதியதும் இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் சாட்சியங்கள். ஆனால் அந்த கவர்னருக்கு, அமெரிக்காவின் மிகப்பெரிய பதவியை தான் வகிக்கப்போகிறோம் என்பது தெரிந்திருக்கவில்லை. தனது ஊரின் மக்களைப் பொய்யர்களாக்கக் கூடாது எனும் எண்ணத்துடன், தனது சாட்சியத்தை அன்று பதிவுசெய்திருந்தார். அதுவே பின்னாள்களில் வினையாகும் என்று அவர் நினைக்கவில்லை.

பறக்கும்தட்டைக் கண்ட 26 பேரில் ஒருவராக இருந்தவர், 1977-ம் ஆண்டு அமெரிக்காவின் 39-வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ஜிம்மி கார்ட்டர்’ (Jimmy Carter). பறக்கும்தட்டைக் கண்டதாக ஜிம்மி கார்ட்டர் தெளிவாகவே பதிவு செய்திருந்தார். ஆனால், வெள்ளிக்கோள் மின்னுவதைப் பார்த்துத்தான் அப்படிச் சொல்லிவிட்டார் என்றும், காலநிலையை கணிக்கும் பலூனைக் கண்டு தவறிச் சொன்னார் என்றும் வரிசையாகக் கதைகள் அமெரிக்க அரசின் சார்பில் அடுக்கப்பட்டன. அமெரிக்க அதிபரே பறக்கும்தட்டு இருக்கிறது என்று சொல்ல முடியுமா... அவரின் வாக்குமூலங்களி லிருந்து அவரையும் அமெரிக்காவையும் காப்பாற்ற வேண்டுமல்லவா? கார்ட்டரும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லி, தன் குரலைத் தாழ்த்திக்கொண்டார். “வெள்ளிக்கோள் எது, வெதர் பலூன் எதுவெனத் தெரியாத ஒருவரையா அமெரிக்காவின் அதிபராக்கினோம்?” என்று சொல்லிச் சிரிக்கிறார்கள். என்னவொரு முட்டாள்தனமான காரணம் இது... எதையெடுத்தாலும் வெதர் பலூனென்று சொல்லிவிடுவதா... வெள்ளிக்கோள் கூடவா ஜிம்மி கார்ட்டருக்குத் தெரியாது... அவருக்குத்தான் தெரியவில்லையென்றால், கூட இருந்த நண்பர்களும் முட்டாள்களா என்ன? பறக்கும்தட்டைக் கண்டவர்களைவிட, அதை மறுப்பதற்கு அமெரிக்க அரசு மிகவும் பதற்றம் காட்டுகிறது. மறுப்பதற்காக எதைச் செய்யவும் தயாராக இருக்கிறது. எதற்காகப் பதற்றப்படுகிறது அமெரிக்க அரசு... எதை மறைக்க இவ்வளவு பாடுபடுகிறது? இந்தக் கேள்விகளுக்கான பதிலைச் சொன்னால், நீங்கள் சிரிப்பீர்கள். விழுந்து விழுந்து சிரிப்பீர்கள். ‘இதையெல்லாமா நம்புகிறார்கள்?’ என்றும் கேட்பீர்கள். பறக்கும்தட்டுகள் பூமிக்கு வந்தன என்பதைக்கூட நம்பிவிடுவீர்கள். ஆனால், இதை உங்களால் நம்பவே முடியாது. நீங்கள் மட்டுமல்ல, நானும் நம்ப மாட்டேன். ஹாலிவுட் சினிமாக்களையே மிஞ்சிவிடும் கதைகள் அவை. அதைச் சொல்கிறேன், நம்புவதும் நம்பாததும் உங்கள் முடிவு. என்னாலும் இதில் சரியான முடிவை எடுக்க முடியவில்லை. நானே சந்தேகிக்கும் ஒன்றை எதற்குச் சொல்ல வேண்டும்? சொல்வதற்குக் காரணம்... அந்தச் சம்பவத்துக்குச் சமீபத்தில் கிடைத்த பலமான சாட்சியம்தான். அந்தச் சம்பவத்துக்கு உரியவரும் ஓர் அமெரிக்க அதிபர்தான்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 30 - லாரா சொல்வது உண்மையா?

மீண்டும் ஒரு முறை சொல்லிவிடுகிறேன். இனி நான் சொல்பவை, அவநம்பிக்கையின் உச்சம். எவற்றுக்கும் என்னால் உத்தரவாதம் தர முடியாது. உலகம் முழுவதும் பேசப் படுவதையும், அறிந்தவற்றையும் சொல்கிறேன். 1954-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்தவர் ஐசனோவர் (Dwight Eisenhower). ஓய்வுக்காகக் குடும்பத்துடன் ‘பாம் ஸ்பிரிங்ஸ்’ (Palm Springs, California) எனும் இடத்துக்குச் சென்றார். பாதுகாப்பு பலமாக இருந்தது. அந்தப் பாதுகாப்புகளையும் மீறி அவர் காணாமல்போனார். 1954-ம் ஆண்டு, பிப்ரவரி 20-ம் தேதி மாலை காணாமல்போனவர், அடுத்த நாள் மதியமே திரும்பி வந்தார். 18 மணி நேரம் அமெரிக்க அதிபரைக் காணவில்லை என்பது பலவிதங்களில் பேசப்பட்டது. அவர் திரும்பி வந்ததும், கோழி இறைச்சியைச் சாப்பிட்டபோது பல்லில் பிரச்னை ஏற்பட்டு உடனடியாகப் பல் மருத்துவரைச் சந்திக்கச் சென்றார் என்று தெரிவிக்கப்பட்டது. சொல்லப்பட்ட காரணத்தை யாரும் நம்பவில்லை. அவர் ஏன் மறைந்தார், எங்கு சென்றார் எனும் மர்மம், பல ஆண்டுகளின் பின்னரே கசிந்தது. வேற்றுக்கோள்வாசிகளான ஏலியன்களையே அமெரிக்க அதிபர் ஐசனோவர் சந்திக்கச் சென்றார் என்று சொல்லப்பட்டது. கலிஃபோர்னியாவில் இருக்கும் அமெரிக்க வான்படைக்குச் சொந்தமான எட்வர்ட் விமானப் படைத்தளத்தில் (Edward Air Force base) அந்தச் சந்திப்பு நடந்ததாம். அது பற்றிப் பலவிதமான கதைகள் உலாவருகின்றன. அவற்றில் எது உண்மை, எது பொய்யென்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியாததால், அனைத்தையும் சொல்லாமல் சுருக்கமாகச் சொல்கிறேன்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 30 - லாரா சொல்வது உண்மையா?

அந்தச் சந்திப்பின்போது, ஐசனோவருடன் மிக முக்கியமான நான்கு பேர் கலந்துகொண்டார்கள். இயற்பியல் ஆராய்ச்சியாளரான ‘ஜெரால்டு லைட்’ (Gerald Light), பொருளாதார மேதையான ‘எட்வின் நோர்ஸ்’ (Edwin Nourse), லாஸ் ஏஞ்சலீஸின் கத்தோலிக்க பிஷப்பான ‘ஜேம்ஸ் ஃபிரான்சி மக்கின்டயர்’ (James Franci Macintyre), பிரபல ஊடகவியலாளரான ‘ஃபிராங்ளின் விந்த்ரோப் ஆலென்’ (Franklin Winthrop Allen) ஆகிய நால்வரும் அந்தச் சந்திப்பில் இருந்தார்கள். இவர்கள், இரண்டு ஏலியன்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. ‘நோர்டிக்ஸ்’ (Nordics) எனப்படும் ஒருவகை ஏலியன்கள். மனிதர்கள்போலவும், உயரமான உருவத்துடனும், நீல நிறக் கண்களுடனும், வெள்ளைத் தலைமுடியும் கொண்டவர்களாகக் காணப்பட்டார்கள். டெலிபதி மூலம் உரையாடல்கள் நடந்ததாகவும் சொல்கிறார்கள். தங்களால் மனிதர்களுக்கு எந்தவித ஆபத்தும் வராதெனவும், கிரே ஏலியன்களிடம் (Grey Alien) அவதானமாக இருக்க வேண்டுமெனவும் அவர்கள் சொன்னார்களாம். அவர்களின் பறக்கும்தட்டை ஆராய்வதற்கும் அனுமதியளித்திருக்கிறார்கள். பேச்சுவார்த்தைகள் அந்த வகையிலேயே நடைபெற்றிருக்கின்றன.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 30 - லாரா சொல்வது உண்மையா?

அதிபர் ஐசனோவர் மூன்று தடவை ஏலியன்களுடன் சந்திப்பு நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. அவர் இரண்டு வகையான ஏலியன்களைச் சந்தித்ததாகவும் சொல்லப்படுகிறது. யாராலும் லகுவில் இந்தக் கதைகளை நம்ப முடியாது. யாரோ சதிக்கோட்பாட்டாளர்கள் கட்டிவிட்ட கதைகளையெல்லாம் எப்படி நம்புவது என்றே தோன்றும். ஆனாலும், ஒரு சில முக்கிய சாட்சியங்கள் இவற்றை நம்பவைப்பதாகவே அமைந்திருக்கின்றன. அந்தச் சந்திப்பில், ஐசனோவருக்குப் பாதுகாப்புக்காக நின்றவர், ‘சார்ல்ஸ் சக்ஸ் சீனியர்’ (Charles Suggs Sr.) எனும் கடற்படைத் தளபதி. பேச்சுவார்த்தைகளில் பங்குகொள்ளாது தள்ளி நின்றிருக்கிறார். அவர், தன்னுடைய மகனான சார்ல்ஸ் சக்ஸ் ஜூனியருக்கு (Charles Suggs Jr.) அந்தச் சந்திப்பில் நடந்தவற்றைச் சொல்லியிருக்கிறார். தகப்பன் கூறியவற்றை, ஜூனியர் சக்ஸ் பேட்டியொன்றில் வெளியிட்டிருக்கிறார். கிட்டத்தட்ட அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியாக அதை எடுத்துக்கொள்ளலாம். அது தவிர்த்தும் வேறு பல ராணுவத் தளபதிகளும் உண்மை என உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இல்லாத ஒன்றை இந்த அளவுக்கு வடிவமைத்து, பலரால் ஒரே மாதிரிச் சொல்ல முடியாது. நிச்சயமாக ஏதோவொன்று நடந்துதான் இருக்கிறது. ஆனாலும், எந்த விவரமும் சரியாகத் தெரியவில்லை. நம்புவதா, விடுவதா என்று இருந்தபோது, இன்னுமொரு முக்கியமானவர் அந்தச் சம்பவங்கள் எல்லாம் உண்மையானவைதான் என்று சமீபத்தில் கூறியிருக்கிறார். என்றோ நடந்த அந்தச் சம்பவம், இன்று உயிர் கிடைத்து வெளியே வந்ததற்கும், நான் இப்போது எழுதுவதற்கும் அந்த நபரின் கூற்றே காரணம். அப்படிச் சொன்னவர் வேறு யாருமில்லை. ஐசனோவர் குடும்பத்தின் அங்கத்தவர் ஒருவர்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 30 - லாரா சொல்வது உண்மையா?

அமெரிக்க அதிபர் ஐசனோவரின் மகன் ஜானின் மகள் சூசன் ஐசனோவர். சூசனின் மகள் லாரா ஐசனோவர் (Laura Eisenhower). அதிபர் ஐசனோவரின் குடும்பம், அமெரிக்காவில் மிகவும் சக்திவாய்ந்த, புகழ்மிக்க, பாரம்பர்யமான குடும்பம். அவரின் கொள்ளுப் பேத்திதான் லாரா. இவர் ஒரு வானியற்பியலாளர். 2018-ம் ஆண்டு, ஜனவரியில் மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தார். அந்தச் சமயம் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு, “தன் அம்மாவின் பாட்டனான அதிபர் ஐசனோவர் ஏலியன்களைச் சந்தித்தது உண்மைதான்” என்று பேட்டி கொடுத்தார். அவர் கொடுத்த வாக்குமூலத்தால் உலகமே மிரண்டுபோனது. அதுவரை உண்மையா, பொய்யா என்று சந்தேகப்பட்ட சம்பவத்துக்கு, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே சாட்சி சொன்னது, மாபெரும் அதிர்ச்சிதான். “இதைவிட அந்தச் சம்பவத்துக்கு வேறென்ன சாட்சி வேண்டும்?” என்று கேள்வி கேட்க ஆரம்பித்திருக் கிறார்கள். ‘லாரா உளறுகிறார்’ என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால், இணைய மெங்கும் லாராவின் பல காணொலிகள் காணப்படுகின்றன. பல விஷயங்கள் பற்றி வெளிப் படையாகப் பேசியிருக்கிறார். அந்தக் காணொலிகளைப் பார்த்தவர்கள், அவர் உளறுவதாகக் கருத மாட்டார்கள். மிகவும் படித்த, புத்திசாலியான பெண் அவர். மிகுந்த துணிச்சலுமுடையவர். இல்லாவிட்டால், அனைவரும் மறைத்துவைத்திருந்த சம்பவத்தைப் போட்டு டைத்திருக்க மாட்டார். எது எப்படியானாலும், கடந்த மூன்றாண்டுகளாக ஏலியன்கள் சம்பந்தமான பல சம்பவங் களின் உண்மைத்தன்மைகள் வெளிவரத் தொடங்கியிருக் கின்றன. இந்த தசாப்தத்தில், ஏலியன்களின் இருப்பை நிச்சயம் கண்டுபிடித்துச் சொல்வோம் என்று விஞ்ஞானிகள் சொல்லியிருப்பதும் ஒருவித நெருடலைத் தருகிறது.

ஐசனோவர் ஏலியன்களைச் சந்திப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது, 1947-ல் ரோஸ்வெல் எனும் இடத்தில் நடந்த சம்பவம்தான். அந்தச் சம்பவத்தைப் பார்த்துவிட்டு ஏலியன்களிடமிருந்து விலகி, வழமையான மர்மத் தேடல்களை நாம் ஆரம்பிக்கலாம்.

(தேடுவோம்)