மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இதற்காக அந்தக் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கோவை வந்திருக்கிறார். அப்போது, காந்திபுரம் பகுதியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

``இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை ஆபத்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும். தடுப்பு மருந்து இருப்பு குறித்துத் தெளிவான தகவலை மத்திய அரசு தெரிவிக்கவில்லை.
பெட்ரோலியப் பொருள்களுக்கு கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது. பெட்ரோலிய பொருள்களின்மீது விதிக்கப்பட்ட வரியைக் குறைத்தால் மட்டுமே, அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் குறைக்க முடியும். இந்தியாவின் முக்கியப் பிரமுகர்கள், நீதித்துறையை சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற பலரும் பெகாசஸ் மூலம் வேவு பார்க்கப்பட்டுள்ளனர்.

இதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தவிருக்கிறோம். ஆப்கானிஸ்தான் காபூலிலுள்ள இந்தியர்களைக் காக்க மத்திய அரசு தவறிவிட்டது.
ஆப்கானிஸ்தானிலிருந்து எத்தனை இந்தியர்கள் இங்கு அழைத்து வரப்பட்டனர் என்ற தகவல் அரசிடம் இல்லை. ஆகஸ்ட் 14-ம் தேதி பிரிவினை பயங்கரவாத நாள் என்று பா.ஜ.க அறிவித்துள்ளது. 1938-ம் ஆண்டிலேயே சாவர்க்கர் இரண்டு தனி நாடாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதன் பிறகு 1940-ம் ஆண்டு ஜின்னா பாகிஸ்தான் கோரிக்கையை முன்வைத்தார். தற்போது இந்தியாவில் 126 இடங்களில் பா.ஜ.க யாத்திரை நடத்திவருகிறது. இது கொரோனா மூன்றாம் அலை பரவுவதற்கு வழிவகுக்கும்” என்று கூறினார்.