அரசுப் பள்ளி என்றாலே தரம் குறைவான கல்விதான் வழங்கப்படும் என நினைத்துக்கொண்டு பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைத் தனியார் பள்ளியிலேயே விரும்பி சேர்க்கின்றனர். ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினரே அதிகளவு தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்க்கின்றனர்.

இந்நிலையில் அனைத்து தரப்பினரும் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என முந்தியடித்துக் கொண்டு தங்கள் குழந்தையை பள்ளியில் போட்டி போட்டு சேர்த்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ளது ராமநாத செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில்தான் தற்போது அட்மிஷன் போட பெற்றோர்கள் குவிந்து வருகின்றனர்.
இது குறித்து தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா நம்மிடம், `2013-ல் நடுநிலைப் பள்ளியாக இருந்த இப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக விரிவடைந்து. அந்த ஆண்டே நான் பொறுப்பேற்ற பின்னர் பள்ளியில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என நினைத்து சக ஆசிரியர்களிடம் பேசினேன். பணியாற்றும் ஒவ்வோர் ஆசிரியரின் ஒத்துழைப்போடும், பெற்றோர்களின் ஆதரவோடும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர முடிந்தது.

தனியார் பள்ளியில் பயன்படுத்தப்படுவது போல தனித்துவமான சீருடை, டை, ஷூ, டைரி என்று மாற்றினேன். வகுப்பறையில் முதல் மாணவனுக்கும் வகுப்பு தலைவனுக்கு பேட்ஜ் வழங்கி கெளரவப்படுத்தினோம். பிறந்தநாள் கொண்டாடும் மாணவர்களுக்கு வாழ்த்துக் கடிதம் வழங்குதல், தனித்திறன் போட்டி, விளையாட்டு எனப் போட்டி வைத்து பரிசுகள் வழங்கினோம். இதனால் மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தினர். இதனால் ஒரே ஆண்டில் மாற்றத்தைக் கொண்டு வந்து சேர்க்கை விகிதத்தை உயர்த்தினோம்.
213 ஆக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை 318, 478, 709, 940, 1,320 என ஆண்டுக்கு, ஆண்டு ஏறுமுகாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா காலகட்டம் என்பதால் பலரும் தனியார் பள்ளியை விரும்பாமல் அரசுப் பள்ளியை விரும்பி சேர்க்கின்றனர். இதனால் கூடுதலாக 700 பேர் எங்கள் பள்ளியில் சேர விரும்பினர். ஆனால், கூடுதல் கட்டடங்கள் இல்லாததால் 200 புதிய மாணவர்களை மட்டும்தான் அட்மிஷன் போட்டு சேர்க்க முடிந்ததுள்ளது. தனியார் பள்ளிகளை விஞ்சும் அளவுக்கு மாணவர்கள் திறமை வெளிப்படுவதால் பெற்றோர் எங்கள் பள்ளியை விரும்பி வருகின்றனர்.

மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்ததால் 6 ஆசிரியர்களாக இருந்த இப் பள்ளியின் ஆசிரியர் எண்ணிக்கையும் 35 ஆக உயர்த்தியுள்ளது. எனவே தொடர்ந்து அரசு, எங்கள் பள்ளிக்கு ஆதரவு வழங்கும்போது பள்ளியின் நிலையைத் தொடர்ந்து மேம்படுத்துவோம்" என்றார்.
இது குறித்து பெற்றோர்கள் சிலர், "தனியார் பள்ளியில் அதிக பணம் செலுத்த முடியாததால், இந்த அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளோம். தற்போது என் பிள்ளைகள் நன்றாகப் படிக்கின்றனர். இப்பள்ளியிள் கூடுதல் கட்டடங்கள் இல்லாததால் அதிகளவு மாணவர்கள் படிக்க முடியவில்லை. எனவே, அரசு கூடுதலாக வேறு இடங்களில் கட்டடங்கள் கட்டி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்" என்றனர்.