வாரணாசியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட பேராசிரியர் ஒருவர் தனது சமூகவலைதளத்தில், `பெண்கள், தங்கள் அடிமை வாழ்விலிருந்தும், பயத்துடனே வாழ்வதிலிருந்தும் தப்பிக்க, நவராத்திரிக்கு 9 நாள்கள் விரதமிருப்பதை விட வேண்டும்; இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும், இந்து சட்ட மசோதாவையும் படிப்பது நல்லது’ என்று பதிவிட்டு இருந்தார். அந்தப் பதிவுக்காக அவர் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டு, பல்கலைக்கழகத்துக்குள் நுழையவும் தடை விதிக்கப் பெற்றிருக்கிறார்.

மிதிலேஷ் கவுதம் என்ற அந்த பேராசிரியர், வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீட் பல்கலைக்கழகத்தில், அறிவியல் அரசியல் (Political Science)பிரிவில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் தனது சமீபத்திய சமூகவலைதள பதிவொன்றில், `நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கும் குறிப்பிட்ட அந்த 9 நாள்களின் போது விரதம் இருப்பதை கைவிட வேண்டும்; அதற்கு பதிலாக பெண்கள் இந்திய அரசியலைப்புச் சட்டத்தையும், இந்து சட்ட மசோதா சட்டத்தையும் படித்தால், அவர்கள் தங்களின் அடிமை வாழ்வில் இருந்தும் பயத்தில் இருந்தும் விடுதலை பெற முடியும். ஜெய் பீம்” என்று எழுதி இருந்தார்.
இதைத் தொடர்ந்து, அந்தப் பேராசிரியர் மீது ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-ஐ சார்ந்த செயற்பாட்டாளர்கள் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின்பேரில், பேராசிரியர் மிதிலேஷ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சுனிதா பாண்டே பெயரில் வெளியாகியிருக்கும் உத்தரவில், ``டாக்டர் மிதிலேஷ் குமார் கவுதமின் சமூகவலைதள பதிவு, இந்து மதத்தின் நம்பிக்கைக்கு எதிராக இருப்பதாகக் கூறி, அவருக்கு எதிரான புகாரொன்று பல்கலைக்கழகத்துக்கு வந்தது. இது பல்கலைக்கழகத்தின் சூழலையும், வரவிருக்கும் தேர்வையும் பாதிக்கும் வகையில் தெரிந்தது. அதனால் பல்கலைக்கழக விதிகளின் கீழ் கவுரவ பேராசிரியர் டாக்டர் மிதிலேஷ் குமார் கவுதமை பணிநீக்கம் செய்யுமாறு எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விதியான 14.04- (01) கீழ் நிறுவன வளாகத்திற்குள் அவர் நுழைவதும் தடைசெய்யப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த வியாழக்கிழமையன்று கல்லூரியை சேர்ந்த குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், பேராசிரியர் மிதிலேஷூக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டத்தின்போது பேராசிரியருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி முழங்கியுள்ளனர். இதுகுறித்து ஏ.பி.வி.பி அமைப்பை சேர்ந்த ஞானேந்திரா என்பவர் அளித்த பேட்டியில், ``பொது மாணவர்கள் பலரும்கூட, தங்களின் கருத்தியலை ஒதுக்கி வைத்துவிட்டு இந்தப் போராட்டத்தில் அதிகளவில் கலந்து கொண்டனர்” என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த நடவடிக்கைக்கு பேராசிரியர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- இன்பென்ட் ஷீலா