சென்னையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொருள் பொறியாளர் சுவாதி கடந்த 2016-ம் ஆண்டு, ஜூன் 24-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம் டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் கைதுசெய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், அதே ஆண்டு, செப்டம்பர் 18-ம் தேதி சிறையில் மின் வயரைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது.

ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயசந்திரன் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தார்.
இந்த வழக்கில், " மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொண்டதில், சாட்சியம் மற்றும் ஆவணங்களைவைத்துப் பார்க்கும்போது ராம்குமார் உண்மையிலேயே மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டாரா... வேறு யாரேனும் அவரின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சினார்களா அல்லது எய்ம்ஸ் மருத்துவர் சுதீர்குப்தா அளித்த அறிக்கையின்படி மூச்சுத்திணறல் காரணமாக இறந்தாரா என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.

ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் மின்சாரம் பாய்ந்து ராம்குமார் இறந்தது உறுதியாகியிருக்கிறது. எனவே, ராம்குமார் மரணம் தொடர்பாக உண்மையைக் கண்டறிய சுதந்திரமான விசாரணை மிகவும் அவசியம். ராம்குமாரின் தந்தை பரமசிவத்துக்கு தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், சிறையில் கைதிகளைக் கண்காணிக்க ஊழியர்கள் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, ராம்குமார் மரணத்துக்கு சிறைகாவலர்களை மட்டுமே குறை கூற முடியாது. தமிழக அரசுக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது. சிறைக் கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய போதுமான அளவுக்கு அதிகாரிகளைப் பணியில் அமர்த்த வேண்டும்" என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருக்கிறார்.