ஜனவரி 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கொங்கு மண்டலத்தில் தேர்தல் பிரசாரம் செய்துவருகிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. கோவை காளப்பட்டி சாலையிலுள்ள சுகுணா அரங்கத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``பெரிய நிறுவனங்கள் முதல் சிறு நிறுவனங்கள் வரை ஜி.எஸ்.டி வரியால் பாதிக்கப்படுகின்றன. தொழில்முனைவோரை நசுக்கும் வகையிலுள்ள ஜி.எஸ்.டி மாற்றி அமைக்கப்பட வேண்டும். வரி குறைப்பு செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி வரி குறைப்பை அமல்படுத்தச் சரியான திட்டம் எங்களிடம் இருக்கிறது'' என்று பேசினார். இரண்டாவது நாள்... அரச்சலூரை அடுத்துள்ள ஒடாநிலையில் நெசவாளர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. பிறகு, நெசவாளர்களுடன் அமர்ந்து ராகுல் காந்தி மதிய உணவு சாப்பிட்டார்.

``விவசாயிகள், நெசவாளர்களை பலவீனப்படுத்திக்கொண்டு 5% பணக்காரர்களை மோடி அரசு வாழவைக்கிறது. விவசாயிகள், நெசவாளர்கள், ஏழைகளின் ஒரு சதவிகிதக் கடன்கள்கூட தள்ளுபடி செய்யவில்லை. நீங்கள்தான் இந்த நாட்டின் சொத்து. நெசவாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதை உணர முடிகிறது. உங்களை முழுமையாக பாதுகாக்கும் வகையில் திட்டத்தைத் தயாரிக்கவிருக்கிறோம்'' என்றார்.
ஆங்காங்கே டீக்கடையில் அமர்ந்து டீ குடிப்பது, நெசவாளர்களுடன் மதிய உணவு என்று மக்களுடன் நெருங்கிப் பழகிவருகிறார் ராகுல் காந்தி. தொழில்முனைவோர், நெசவாளர்களுடன் அரங்கங்களில் ஆங்காங்கே சந்திப்பு நிகழ்ச்சியை நடத்திவருகிறார்கள். ராகுல் காந்தியின் இந்த பாணி பிரசாரம் மக்களிடம் எந்த அளவுக்கு எடுபட்டது என்று அறியும் வகையில், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களிடம் விசாரித்தோம்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜ், ``உள் அரங்கங்களில் ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் முன்னிலையில் ராகுல் காந்தியைப் பேசவிடுகிறார்கள். இதுவே, பொது இடங்களில் அவர் வந்தால்... `கொங்கு மண்டல மக்களுக்கு காங்கிரஸ்/தி.மு.க ஆட்சியில் நடந்த கொடுமைகளுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?’ என்று நாங்கள் கேட்டிருப்போம். அதற்கு தற்போது வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
தமிழகத்தைக் கலங்கடிக்கும் பல திட்டங்களுக்குப் பிள்ளையார்சுழி போட்டதே காங்கிரஸ் ஆட்சிதான். கொங்கு மண்டலத்தில் கெயில் எரிவாயு குழாய் திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டது அவர்கள்தான். பத்து வருடங்களுக்கு முன்பு, ஒரு குவின்டால் பஞ்சு விலை ரூ. 15,000 என்று இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது ஆன்லைனில் பஞ்சு விற்பனையை மாற்றும் திட்டத்தைக் கொண்டுவந்தார். அதனால், பஞ்சு விலை ரூ. 65,000 வரை உயர்ந்தது. ஏராளமான நூற்பு ஆலைத் தொழிலாளர்கள், உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டனர். நான் நடத்திவந்த நிறுவனத்தில் 400 பேருக்கு வேலை பறிபோனது. அதேபோல், காங்கிரஸ்/தி.மு.க ஆட்சிக் காலத்தில் மின்வெட்டு எட்டு முதல் 10 மணி நேரம் இருந்தது.

அதனால் பல தொழிற்சாலைகள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டன. அப்போது ஏற்பட்ட அந்த பாதிப்பு இன்று வரையில் தொடர்கிறது. அவை பற்றியெல்லாம் விவாதிக்க ராகுல்காந்தி தயாரா? நாங்கள் தயார்..!
மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்டிரினோ போன்ற திட்டங்களுக்கு முன்னோடி யார்... காங்கிரஸ்தானே... ஜல்லிக்கட்டு தடை உத்தரவைப் பிறப்பித்தது காங்கிரஸ் ஆட்சியில்தானே... கூடங்குளம் அணுமின் நிலையம் யார் காலத்தில் வந்தது... காவிரி நதி பிரச்னையில் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் திட்டத்தைத் தமிழக மக்கள் நலனுக்காக நிறுத்துவோம் என்கிற நிலைப்பாட்டை அறிவிப்பாரா ராகுல்?
முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் தமிழகத்துக்கே எங்கள் ஆதரவு என்று பகிரங்கமாக அறிவிப்பாரா... ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் எத்தனை ஆண்டுகள் சிறைச்சாலையில் இருக்கிறார்கள்? அவர்களை விடுதலை செய்யும் க்ளைமாக்ஸ் நேரம் நெருங்கிவிட்டது. அவர்கள்மீது கருணைகொண்டு விடுவிக்கலாம் என்று ராகுல் காந்தி அறிவிப்பாரா? இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டது காங்கிரஸ் ஆட்சியில்தானே? வரலாற்றைத் தமிழ் மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை. தேர்தல் நேரத்தில் தக்க பாடம் புகட்டுவார்கள். பிரதமர் மோடி ஆட்சிக் காலத்தில் மேலே சொன்ன மாதிரி எந்த ஒரு பெரிய திட்டத்தையோ, அடக்குமுறையையோ தமிழக மக்கள் திணிக்கவில்லையே? அவரைக் குறைசொல்வது ஒன்றையே தனது பிரசாரத்தின் நோக்கமாக வைத்திருக்கும் ராகுல் காந்தியின் திட்டம் தமிழகத்தில் நிறைவேறாது’’ என்றார் காட்டமாக.