அலசல்
Published:Updated:

புதுக்கோட்டையைவிட வாரணாசியில் வறுமை அதிகம் - வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம்!

வாரணாசி
பிரீமியம் ஸ்டோரி
News
வாரணாசி

- வறுமைக்கோடு வரைந்த நிதி ஆயோக்...

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வளவு வறுமை நிலவுகிறது என்பது பற்றிய விரிவான ஆய்வறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. வறுமையை வென்ற பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருக்கிறது என்பதே இதில் மகிழ்ச்சியடையவைக்கும் தகவல். தமிழகத்தில் வறுமை நிலவும் மாவட்டங்களில் ஒன்றாகப் புதுக்கோட்டை குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேசமயம், ‘தொழில் வளர்ச்சியடைந்த மாநிலம்’ என்று மார்தட்டிக்கொள்ளும் குஜராத்திலும், பிரதமர் மோடியின் தொகுதி அமைந்துள்ள உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி மாவட்டத்திலும் புதுக்கோட்டையைவிட வறுமை அதிகமாக நிலவுகிறது.

2015-ல் மத்திய திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு, நிதி ஆயோக் அமைப்பை ஏற்படுத்தியது மத்திய பா.ஜ.க அரசு. நிதி ஆயோக் உருவாக்கப்பட்ட பிறகு, முதன்முதலாக வறுமை குறித்த விரிவான ஆய்வறிக்கை இப்போதுதான் வெளியிடப்பட்டுள்ளது. உணவு என்கிற ஓர் அம்சத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு கடந்த காலங்களில் வறுமைக்கோடு வரையறுக்கப்பட்டுவந்த நிலையில், இந்த ஆய்வறிக்கை உணவு, உடை, குடிநீர், தங்குமிடம், கல்வி, வேலை, சுகாதாரம் எனப் பல அம்சங்களைக் கணக்கில்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அதனாலேயே இது பல பரிமாணங்களைக்கொண்ட வறுமைக் குறியீடு (MPI - Multidimentional Poverty Index) என்று குறிப்பிடப்படுகிறது.

புதுக்கோட்டையைவிட வாரணாசியில் வறுமை அதிகம் - வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம்!

இதில் அதிகமான ஏழைகளைக்கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகியவை பிடித்திருக்கின்றன. குறைவான ஏழைகளைக்கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு ஆகியவை இடம்பெற்றுள்ளன. வறுமை குறைவாக இருக்கும் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. பல பரிமாண வறுமைக் குறியீட்டில் பீகார் 51.91 %, உத்தரப்பிரதேசம் 37.79%-ஆக இருக்கும் நிலையில், தமிழ்நாடு வெறும் 4.89 %, கேரளா 0.71 %-ஆக இருக்கின்றன.

மாவட்டவாரியாகவும் புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் வறுமை குறைந்த மாவட்டங்களின் பட்டியலில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை ஆகியவையும், வறுமை அதிகமான மாவட்டங்களின் பட்டியலில் நாகப்பட்டினம், சிவகங்கை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. 11.71 சதவிகிதத்துடன் அதிக வறுமையான மாவட்டமாகப் புதுக்கோட்டை இருக்கிறது. 26.03 சதவிகிதத்துடன் புதுக்கோட்டையைவிட அதிக வறுமையான மாவட்டமாக வாரணாசி இருக்கிறது. இந்தியாவில் ஏழைகளே இல்லாத மாவட்டமாக, கேரளாவின் கோட்டயம் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘வளர்ந்த மாநிலம்’ என்று பா.ஜ.க-வினர் சொல்லிக்கொள்ளும் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 18 சதவிகித மக்கள் ஏழைகள் என்கிறது ஆய்வறிக்கை.

தென் மாநிலங்களில் வறுமை குறைவாகவும், வடமாநிலங்களில் வறுமை அதிகமாகவும் இருப்பதற்கான காரணங்கள் பற்றிய விவாதத்தை இந்த ஆய்வறிக்கை உருவாக்கியிருக்கிறது. “தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் கல்வியறிவும், தொழில் வளர்ச்சியும் அதிகம். இங்கு சாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ வேலைவாய்ப்பு மறுக்கப்படுவது கிடையாது. இவையெல்லாம் இங்கு வறுமை குறைந்ததற்கான முக்கியக் காரணங்கள்” என்றபடியே பேசினார் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன்...

“1990-களிலேயே தமிழ்நாட்டில் சாஃப்ட்வேர் தொழில் வந்துவிட்டது. இங்கு அனைத்து கிராமங்களுக்கு அருகிலும் நகரங்கள் இருப்பதால், விவசாயம் இல்லாத நாள்களில் கிராமத்தினருக்கு நகரங்கள் வேலைவாய்ப்பு அளிக்கின்றன. பள்ளியிலிருந்து கல்லூரி செல்லும் மாணவர்களின் சதவிகிதம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம். குறு, சிறு தொழில்களும் தமிழ்நாட்டில்தான் அதிகம். அரசு உதவிபெறும் பள்ளி என்கிற முறை தமிழ்நாட்டைத் தவிர, இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. 1980-களிலேயே அதிக எழுத்தறிவு பெற்ற மாநிலமாகத் தமிழ்நாடு வளர்ந்துவிட்டது. இங்கு பெண் கல்வி அதிகரித்ததால், நிறைய பெண்கள் வேலைக்குப் போகிறார்கள். பொது விநியோகத் திட்டம் சிறப்பாக இருப்பதால், உணவுப் பிரச்னை இல்லை. ஆட்சிகள் மாறினாலும் மாநில நலன் சார்ந்த கொள்கைகளை யாரும் மாற்றுவதில்லை. வறுமை ஒழிப்புக்கு இங்குள்ள இட ஒதுக்கீடு முறை முக்கியப் பங்காற்றுகிறது. இந்தச் சிறப்புகள் எதுவும் பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் இல்லை. அதுதான் அங்கு ஏழைகள் அதிகமாக இருப்பதற்குக் காரணம்” என்றார்.

ஆனந்த் சீனிவாசன் - ராஜலட்சுமி
ஆனந்த் சீனிவாசன் - ராஜலட்சுமி

பா.ஜ.க-வைச் சேர்ந்த பொருளாதாரப் பேராசிரியர் ராஜலட்சுமியும் கிட்டத்தட்ட இதே கருத்தைக் கூறுகிறார்... “தென் மாநிலங்கள்போல வடமாநிலங்களில் சமூகநலத் திட்டங்கள் இல்லை. 100 நாள் வேலைத்திட்டம்கூட அங்கு சரியாகச் செயல்படுத்தப்படுவதில்லை. இட ஒதுக்கீட்டால் தமிழ்நாட்டில் வறுமை பெருமளவு ஒழிக்கப்பட்டிருக்கிறது. பெரியார் போன்ற தலைவர்கள் உருவாக்கிய சமூக சீர்திருத்த இயக்கங்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகியிருக்கின்றன. கேரளாவில் ஏராளமானோர் வெளிநாடுகளில் வேலை பார்ப்பதால் வறுமை ஒழிப்பு சாத்தியமாகியிருக்கிறது. வடமாநிலங்களில் பெரிய அளவில் விவசாயம் நடைபெற்றாலும் அங்கு விநியோகத் திட்டம் சரியாக இல்லை. வறுமை ஒழிப்புக்கு மிகப்பெரிய தடை அது. பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் சாலை வசதிகளே இல்லை. சுமார் 50 % மக்களுக்குக் கல்வி இல்லை. அதேசமயம், பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு வடமாநிலங்களின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இவை நீண்டகால அடிப்படையில் வடமாநிலங்களை வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லும்” என்றார்.

வடக்கு, தெற்கு என எந்த பேதமும் இல்லாமல், மொத்த நாடும் வறுமையிலிருந்து விடுபட்டால்தான் அது முழுமையான வளர்ச்சி!