தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் பூண்டோம் சாய்மூன் (55) - அம்னுவாய் சாய்மூன் (49) தம்பதி. இவர்கள் இருவரும் விடுமுறையைக் கழிக்க மஹா சரகம் மாகாணத்திலுள்ள தங்களது சொந்த ஊருக்குப் பயணம் சென்றிருக்கின்றனர். தம்பதி இருவரும் மகிழ்ச்சியோடுதான் சென்றதாகக் கூறுகின்றனர். இந்த நிலையில், அதிகாலை 3 மணியளவில் வாகனத்தை ஓட்டிவந்த கணவர் பூண்டோம் சிறுநீர் கழிக்க வாகனத்தை ஓரமாக நிறுத்தியிருக்கிறார்.

அதே நேரம் மனைவி அம்னுவாயும் இயற்கை உபாதையைக் கழிக்க காரிலிருந்து இறங்கியிருக்கிறார். அந்தப் பகுதியில் கழிவறை இல்லை என்பதால் அருகிலிருந்த புதர்ப் பகுதிக்குச் சென்றிருக்கிறார். அவர் திரும்பி வருவதற்குள் சிறுநீர் கழித்துவிட்டு வந்த பூண்டோம், மறதியாக வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். பின்னர் அவர் மனைவி, காரை நிறுத்திய இடத்துக்கு வந்து பார்த்திருக்கிறார். அப்போது காரோடு கணவன் காணாமல்போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். செல்போனையும் காரிலேயே வைத்திருந்ததால் அவரால் யாரையும் தொடர்புகொள்ள முடியாமல் தவித்திருக்கிறார்.
அதிகாலை நேரம் என்பதால் இருட்டில் பயந்து, யாரிடமும் உதவி கேட்க முடியாமல் அழுதிருக்கிறார். பின்னர் வேறு வழியின்றி, அவர் நடந்து செல்ல தீர்மானித்திருக்கிறார். அதன்படி பயம் மற்றும் பதற்றத்துடன் வேகமாக நடந்து, அதிகாலை 5 மணியளவில் கபின் புரி மாவட்டத்தை சுமார் 20 கி.மீ (தோராயமாக 12.4 மைல்) நடந்து அடைந்திருக்கிறார். அதிர்ஷ்டவசமாக, ஊர் எல்லையில் இருந்த காவல்துறை அதிகாரியின் செல்போனிலிருந்து தன்னுடைய கணவரை அழைத்திருக்கிறார். ஆனால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

காலை 8 மணியளவில்தான், மீண்டும் போலீஸாரின் உதவியுடன் அவர் தன் கணவரைத் தொடர்புகொள்ள முடிந்தது. அவர் அப்போது 159.6 கிமீ (100 மைல்) தொலைவிலுள்ள கோரட் மாகாணத்துக்கே சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து, மனைவியை அழைத்துச் செல்ல வந்த கணவனிடம் காவல்துறை விசாரித்ததில், ``இவ்வளவு நேரம் காரில் மனைவி இல்லை என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. அவள் பின்சீட்டில் அயர்ந்து தூங்குகிறாள் என்ற எண்ணத்தில் இருந்தேன்" எனக் கூறி தனது செயலுக்கு மிகவும் வருந்தினார். மேலும், தன் மனைவியிடம் மன்னிப்புக் கேட்டார்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, மனைவி கணவனின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு அவரோடு சண்டையிடாமல் அமைதியாக இருந்தார். இது தொடர்பாக அந்தப் பெண், "எனக்கும் அவருக்கும் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 26 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அவரைப் பற்றிய புரிதல் எனக்கு இருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இந்த தம்பதியைப் பாராட்டிவருகின்றனர்.