தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருகில் உள்ளது மழவராயநத்தம் கிராமம். இந்த கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முழுமையாக விவசாயத் தொழிலையே நம்பி உள்ளனர். இந்த கிராமத்திற்கு பாத்தியப்பட்ட மயானம், இதே கிராமத்திற்கு அருகில் ஓடும் வாய்க்காலுக்கு அக்கரையில் உள்ளது. மயானத்திற்குச் செல்ல என தனிப்பாதை எதுவும் இல்லாததால், இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது உயிரிழந்தால் அவரின் உடலை வாய்காலைக் கடந்துதான் தூக்கிச் செல்ல வேண்டும்.

இந்த நிலையில் நேற்று 65 வயதான சண்முகசுந்தரம் என்கிற முதியவர், உடல்நலக்குறைவினால் உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்கு நடந்தது. வழக்கம்போல் உடலை சுமந்துகொண்டு வாய்க்காலைக் கடந்து மயானத்தில் இறுதிச்சடங்கினை செய்துள்ளனர். வாய்க்காலைக் கடக்க பாலம் அமைத்துத்தர வலியுறுத்தி போராட்டம் நடத்தியும், மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை எனப் புலம்புகிறார்கள் கிராம மக்கள்.
இது தொடர்பாக கிராமத்தினரிடம் பேசினோம். ``இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது உயிரிழந்தால் அவர்களின் இறுதிச்சடங்கினை செய்வதற்கு இந்த கிராமத்தின் கீழ்பகுதியில் உள்ள 100 மீட்டர் அகலமுள்ள வாய்க்காலை தாண்டித்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர் பிரிந்து உபரிநீராக இந்த வாய்க்கால் வழியே ஓடுகிறது. வருஷத்துல 8 மாசம் இந்த வாய்க்காலில் கழுத்தளவுக்கு தண்ணீர் போகும்.

மழை பெய்யுற நாகள்ல தண்ணியோட வேகம் அதிகமா இருக்கும். அந்த நாள்கள்ல கயிறு கட்டி ரெண்டு புறமும் பிடிக்கச் சொல்லி கயித்தைப் பிடிச்சுக்கிட்டே நடந்து போவோம். 50 வருஷத்துக்கும் மேலாக எங்க கிராமத்துல யாரு இறந்தாலும் உடலை கழுத்தளவு தண்ணிலதான் இறுதிச்சடங்கு செய்ய தூக்கிக்கிட்டு போறோம். ஊர்ல உள்ள இளந்தாரிகள்தான் உடலை தூக்கிட்டு போவாங்க.
முதலில் ரெண்டு மூணு பேரு கையில தடியைப் பிடிச்சுக்கிட்டு இறங்கி நடந்து போவாங்க. அவங்களைப் பின் தொடர்ந்து உடலைத் தூக்கிட்டுப் போறவங்க கவனமா நடந்து போவாங்க. தண்ணீரின் இழுவைக்கு நடுவுல மெதுமெதுவா வாய்க்காலைக் கடந்து உடலைத் தூக்கிட்டு சுடுகாட்டுக்குப் போகவே அரை மணி நேரம் ஆயிடும். கொஞ்சம் தவறினாலும் உடலைத் தூக்கிட்டுப் போறவங்க தண்ணியில மூழ்கிடுவாங்க.

வாய்ககாலைக் கடந்து போக மாற்று வழியும் கிடையாது. அதனால, வாய்க்காலைக் கடந்து போக சிமென்ட் பாலம் போட்டுத் தராட்டாலும், இரும்பு பாலமாவது போட்டுத்தாங்கய்யான்னு தாசில்தார், கலெக்டர்னு எல்லா அதிகாரிகளுக்கும் மனு கொடுத்துட்டோம். இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்ல” எனப் புலம்புகிறார்கள்.