Published:Updated:

``எப்ப பார்த்தாலும் அமைச்சர் அமைச்சர்னு சொல்லாதீங்க..!” - திருச்சி மேயரிடம் கொதித்த கவுன்சிலர்கள்

மேயர் அன்பழகன்
News
மேயர் அன்பழகன்

முதல்வர் வருகையின்போது, திருச்சி மாநகராட்சிக் கூட்டத்தில் தி.மு.க மேயரைக் கண்டித்து நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

``எப்ப பார்த்தாலும் அமைச்சர் அமைச்சர்னு சொல்லாதீங்க..!” - திருச்சி மேயரிடம் கொதித்த கவுன்சிலர்கள்

முதல்வர் வருகையின்போது, திருச்சி மாநகராட்சிக் கூட்டத்தில் தி.மு.க மேயரைக் கண்டித்து நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேயர் அன்பழகன்
News
மேயர் அன்பழகன்

திருச்சி மாநகராட்சியின் மாதாந்தர கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை மேயர் திவ்யா, மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேற்றைய தினம் மதியம் சுமார் 12:30 மணியளவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரம்பலூர் – அரியலூரில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு திருச்சிக்கு வந்து விமானம் மூலமாகச் சென்னைக்குப் போவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. அதனால் முதல்வரை வழியனுப்ப மேயர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் செல்லவேண்டிய சூழல் இருந்தது. இப்படியான சூழலில்தான் காலை 10:30 மணியளவில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் கூடியது. கவுன்சிலர்களெல்லாம் 10:30 மணிக்கு முன்னதாகவே, கூட்ட அரங்குக்குள் வந்திருந்தனர். ஆனாலும், கூட்டம் தாமதமாகத்தான் தொடங்கியது. இது கவுன்சிலர்களிடையே சலசலப்பை உண்டாக்கியது.

திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள்
திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள்

குறிப்பாக திமுக கவுன்சிலரான முத்துசெல்வம், ``முதலமைச்சர் இன்னைக்கு வர்றாங்க. இந்தச் சூழ்நிலையில் கூட்டம் முக்கியமா... பேச நிறைய இருக்குல்ல” என மேயர் அன்பழகனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதையடுத்து மேயர் அன்பழகன், ``நான் சொல்றேன்ல... உட்காருங்க. சீக்கிரமா முடிச்சிடலாம்யா” என்று கவுன்சிலர் முத்துசெல்வத்திடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதில் கடுப்பான கவுன்சிலர் முத்துசெல்வம், ``வாய்யா போய்யான்னெல்லாம் பேசாதீங்க. இன்னைக்குக் கூட்டம் நடத்த வேணாம். நாளைக்குவெச்சுக்கலாம்” என்றார்.

இதற்கிடையே காங்கிரஸ் கவுன்சிலரான சுஜாதா, ``அரை மணி நேரத்துல கூட்டத்தை முடிச்சிடலாம்னா எப்படிங்க... 45 பொருளைவெச்சுக்கிட்டு, விவாதம் பண்ணாம எப்படிக் கூட்டத்தை முடிக்க முடியும்?” என எகிறினார். அதையடுத்து, `அமைச்சரை (கே.என்.நேரு) கேட்டுத்தான் கூட்டத்தைக் கூட்டினேன்’ என்று மேயர் அன்பழகன் சொல்ல, கவுன்சிலர் முத்துச்செல்வமோ, `ஏங்க நீங்க... எப்பப் பார்த்தாலும் அமைச்சர் அமைச்சர்னு சொல்லாதீங்க. ஒன்பதரை மணிக்குக் கூட்டத்தை வெச்சுருக்கலாம்ல... முதல்வர் வர்றதைவிட கூட்டம் ஒண்ணும் முக்கியமானது இல்லை’ எனக் கொதித்தார். இந்தச் சம்பவத்தால் கவுன்சிலர்கள் கூட்டத்தில் சலசலப்பு உண்டானது.

மேயர் அன்பழகன்
மேயர் அன்பழகன்

அதையடுத்து, ``மாமன்ற உறுப்பினர்கள் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டிருக்கும் கூட்டத் தீர்மானப் பொருள்களில் எதற்கு ஆட்சேபனை  இருக்கிறதோ அவற்றை மட்டும் ஒத்திவைத்துவிடுவோம். மற்ற பொருள்களை நிறைவேற்றிவிட்டுச் செல்லலாம். மக்கள் பணி எந்தவிதத்திலும் தடைப்படக் கூடாது” என்று மேயர் கோரிக்கை வைத்தார். அதையடுத்து மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட 45 தீர்மானங்களில், 41 தீர்மானங்கள் மட்டுமே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தந்த நாளில், திருச்சி மாநகராட்சிக் கூட்ட அரங்கில் தி.மு.க மேயரைக் கண்டித்து, தி.மு.க கவுன்சிலர் மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் கருத்துகளை முன்வைத்துக் காட்டமாகப் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  ஒவ்வொரு முறையும் கவுன்சில் கூட்டத்தில் மேயர் அன்பழகனின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி எழுதுவதும், தி.மு.க கவுன்சிலர்களே மேயர்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருவதும் சலசலப்பை ஏற்படுத்திவருகிறது.