இங்கிலாந்து வரலாற்றில் நீண்டகாலம் ராணியாக இருந்தவர் இரண்டாம் எலிசபெத். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்ட அவர் தன்னுடைய 96-வது வயதில் காலமானார். இவர் காலமானதைத் தொடர்ந்து உலக நாடுகளின் பார்வையை கடந்த 12 நாள்களாக தன்பக்கம் ஈர்த்திருந்தது, இங்கிலாந்து. அவர் தொடர்பான செய்திகள் வந்த வண்ணமேதான் இருந்தது. மேலும் ராணியின் இறப்புக்குப் பின் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. அதில் ராணி வளர்த்த நாய்களின் பாதுகாப்பு குறித்துப் பலரும் கேள்வி எழுப்பினர்.
மறைந்த ராணி 2-ம் எலிசபெத் மிகப்பெரிய நாய்ப் பிரியர். எலிசபெத், ராணியாக இருந்த காலத்தில் 30 நாய்களை வளர்த்துள்ளார். அவர் இறப்பதற்கு முன்கூட பெம்புரோக் வெல்ஷ் கோர்கிஸ் இன நாய்கள் 2, டோர்கி இன நாய் ஒன்று, காகர் ஸ்பேனியல் இன நாய் ஒன்று என நான்கு நாய்களை வளர்த்து வந்திருக்கிறார். ராணி எலிசபெத்திற்கு மிகவும் பிடித்த நாய் என்றால் அது கோர்கிஸ் (corgis) இன நாய்தான். அதற்கு காரணம், 1933-ல், எலிசபெத்தின் பெற்றோர் கோர்கிஸை வாங்கியுள்ளனர்.

அவர் முதன் முதலில் வளர்த்தது கோர்கிஸ் என்பதால் அது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். இதுமட்டுமன்றி, சக்தி மற்றும் வேகம் காரணமாக கோர்கிஸ் இன நாய்களை எலிசபெத் அதிகம் விரும்பியுள்ளார். 1944-ம் ஆண்டு அவரது 18-வது பிறந்தநாளுக்காக ராணியின் தந்தை கோர்கிஸை பரிசாக வழங்கியுள்ளார். கணவர் பிலிப் காலமான பிறகு, தன் மகன் ஆண்ட்ரூவிடமிருந்து இரண்டு நாய்களையும் அவர் பரிசாகப் பெற்றிருக்கிறார். நாய்களை நேரடியாகக் கவனித்துக் கொண்ட அவர், உணவு அளிப்பது, நடைப்பயிற்சி அழைத்துச் செல்வதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் குதிரையும் வளர்த்து வந்துள்ளார். அவருக்குப் பிடித்த black pony Emma என்ற குதிரையையும், Sandy and Muick என்ற இரண்டு கோர்கிஸ் நாய்களையும் அவரது இறுதி ஊர்வலத்தின்போது இடம்பெறச் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ராணி வளர்த்து வந்த நாய்களை இளவரசர் ஆண்ட்ரூவும் அவரின் மனைவி சாராவும் பராமரிக்க உள்ளனர்.