சினிமா
Published:Updated:

ஜனங்களே சிதைக்கலாமா ஜனநாயகத்தை?

ஜனங்களே சிதைக்கலாமா ஜனநாயகத்தை?
பிரீமியம் ஸ்டோரி
News
ஜனங்களே சிதைக்கலாமா ஜனநாயகத்தை?

இந்தியாவின் ஆன்மா கிராமங்கள்தான்.

‘அதிகாரம் ஒரு இடத்தில் குவிக்கப்படக் கூடாது, பரவலாக்கப்பட வேண்டும். கிராமங்கள் தங்கள் தேவைகளைத் தாங்களே நிறைவு செய்யும்வகையில் அதிகாரம் பெற வேண்டும்’ என்பது மகாத்மா காந்தியின் கனவு. இந்தக் கனவை நனவாக்குவதற்காக ராஜீவ்காந்தி காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் பஞ்சாயத்துராஜ் சட்டம். இந்தச் சட்டத்தின் அடிப்படையிலேயே உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறுகின்றன.

ஒவ்வொருமுறையும் தொகுதி மறுவரையறை செய்வது, பெண்களுக்கும் பட்டியலின மக்களுக்கும் உள்ளாட்சிப் பதவிகளில் இட ஒதுக்கீடு ஆகிய பல பணிகளின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடக்கின்றன.

கடந்த மூன்றாண்டுகளாகத் தமிழகத்தில் இந்த உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் தேங்கிப்போன மக்கள் பணிகள் ஏராளம். உள்ளாட்சித் தேர்தலை நடத்த மனமில்லாத ஆளுங்கட்சி, முட்டுக்கட்டை போட்ட எதிர்க்கட்சி இவற்றைமீறிப் பலமுறை நீதிமன்றப் படிக்கட்டுகள் ஏறி, அரையும் குறையுமான உள்ளாட்சித் தேர்தல்தான் இப்போது நடக்கவிருக்கிறது. ஆனால் இந்தத் தேர்தல்களே முறையாக நடக்குமா என்று நமக்கு சந்தேகங்கள் வரக் காரணமானவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, மக்களும்தான் என்பது துயரமானது.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ளாட்சி நிர்வாகிகளுக்கான பதவிகள் ஏலம் விடப்படுவதாக அடுக்கடுக்கான செய்திகள் வருகின்றன. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் ஊராட்சித்தலைவர் பதவி 50 லட்சத்துக்கும், துணைத்தலைவர் பதவி 15 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்ட தகவல் முதலில் வெளிவந்து அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது. தஞ்சை மாவட்டம் திருமங்கலக் கோட்டை ஊராட்சித் தலைவர் பதவியை 32 லட்ச ரூபாய்க்கு ஏலம் விட்டுள்ளனர். ‘2 லட்சம் முன்பணம் கொடுத் துள்ள நபர், 15-ம் தேதிக்குள் மீதிப்பணத்தைச் செலுத்தவில்லை என்றால் இன்னொரு நபருக்கு ஏலம் விடப்படும்’ என்று ஊர்க்காரர்கள் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்.

ஜனங்களே சிதைக்கலாமா ஜனநாயகத்தை?
ஜனங்களே சிதைக்கலாமா ஜனநாயகத்தை?

ராமநாதபுரம் மாவட்டத்தில் களரி ஊராட்சிக்குட்பட்ட சுமைதாங்கி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஊராட்சித் தலைவருக்கான வேட்பாளரை வாக்களித்துத் தேர்வு செய்த சம்பவமும் நடந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் கோட்டைப்பட்டி ஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விட நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்த்துக் கேட்ட இளைஞர் கொல்லப்பட்டது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

தேர்தலில் வென்று ஊழல் செய்தது முதல்கட்டம் என்றால், வாக்களிக்கும் மக்களுக்கும் பணம் கொடுத்து ஊழல்மயமாக்கியது, சீர்கேட்டின் அடுத்தகட்டம். இவையெல்லாம் அரசியல்வாதிகள் செய்த தவறுகள். இப்போது மக்களே மதிப்புமிக்க பதவிகளை ஏலத்தில் விடுவது, ஜனநாயகத்துக்கு இழைக்கப்படும் அவமானம். ஏலத்தில் எடுப்பவர் உள்ளாட்சி நிர்வாகி என்றால் பணமில்லாதவர்கள் பதவிக்கே வரமுடியாதே!

அரசு, அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று யார் ஜனநாயகத்துக்குத் தீங்கு இழைத்தாலும் அதைத் தட்டிக்கேட்க வேண்டிய, சரிசெய்ய வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உண்டு. ஆனால் ஜனநாயகத்தை ஜனங்களே சிதைத்துவிட்டால், ஊழல் அரசியல்வாதிகளைத் தட்டிக்கேட்கும் தார்மிக உரிமையை இழந்துவிட மாட்டோமா என்பதை மக்கள் ஆழமாக யோசிக்க வேண்டும்.