Published:Updated:

இன்சுலின் முதன் முதலில் மனிதர்களுக்குப் பயன்படுத்திய நாள் இன்று! - ஒன்று இன்று நன்று - 11

இன்சுலின்
News
இன்சுலின்

சரியா 100 வருஷத்துக்கு முன்னாடி இதே நாள்ல, ஜனவரி 11, 1922-ல தான் முதல் முதலா மனிதர்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் அவங்க கண்டுபிடிச்ச இன்சுலின்-அ செலுத்தியிருக்காங்க

Published:Updated:

இன்சுலின் முதன் முதலில் மனிதர்களுக்குப் பயன்படுத்திய நாள் இன்று! - ஒன்று இன்று நன்று - 11

சரியா 100 வருஷத்துக்கு முன்னாடி இதே நாள்ல, ஜனவரி 11, 1922-ல தான் முதல் முதலா மனிதர்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் அவங்க கண்டுபிடிச்ச இன்சுலின்-அ செலுத்தியிருக்காங்க

இன்சுலின்
News
இன்சுலின்

நமக்கிட்ட இருக்கிற போனைப் பிடுங்கிட்டு ஒரு ரூம்குள்ள அடைச்சு வச்சா நமக்கு உயிரே போய்டும். சோஷியல் மீடியா, லேப்டாப் இல்லனா பைத்தியமாகாத குறை தான். நவீனத் தொழில்நுட்பங்கள் இல்லாத ஒரு உலகத்துல சில மணி நேரம் வாழ்றதையே நம்மள்ல பல பேரால நினைச்சுக்கூடப் பாக்க முடியாது. ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்குத் தெரியும், ‘இன்சுலின் இல்லாத ஒரு உலகத்துல நம்மால் வாழமுடியாதுனு’! நவீன மருத்துவத்தோட மிக முக்கியமான கண்டுபிடிப்புகள்ல ஒன்னா இன்சுலினை சொல்றாங்க. இன்னைக்கு கொரோனா தடுப்பூசிகளைக் கண்டுபிடிச்ச பல நிறுவனங்கள் இஷ்டத்துக்கு அதுக்கு விலை நிர்ணயம் செஞ்சிட்டு இருக்காங்க, ‘ஆராய்ச்சிக்காக அவங்க போட்ட முதலீட்டை எடுக்க வேணாமா?’ அப்படின்னு நம்மல்ல பலரே அத நியாயப்படுத்துறோம். (இத்தனைக்கும் இதுல பல தடுப்பூசிகளோட ஆராய்ச்சிகளுக்கு அரசுகள்தான நிதி கொடுத்துருக்கு!) ஆனால், இன்சுலினைக் கண்டுபிடிச்சவங்க அதோட காப்புரிமைக்காகப் பெற்றது வெறும் ஒரு அமெரிக்க டாலர் தானாம். மகத்தான அந்த மருந்து, குறைந்த விலையில் எல்லாருக்கும் கிடைக்கனும்னு அவங்க நினைச்சாங்க. சரியா 100 வருஷத்துக்கு முன்னாடி இதே நாள்ல, ஜனவரி 11, 1922-ல தான் முதல் முதலா மனிதர்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் அவங்க கண்டுபிடிச்ச இன்சுலினை செலுத்தியிருக்காங்க.

இன்சுலின்
இன்சுலின்

சர்க்கரை நோயாளிகளோட வாழ்க்கைய இன்சுலினுக்கு முன்/இன்சுலினுக்குப் பின் அப்படின்னு ரெண்டா பிரிக்கலாம். குறிப்பா கணையம் செயலிழந்து இன்சுலின் சுரக்க இயலாத நிலையில இருக்கு டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கு! 1921-ம் வருஷம் இன்சுலினைக் கண்டுபிடிக்கிறதுக்கு முன்ன அவங்களால நீண்ட காலம் உயிர்வாழ முடியாது. ஸ்ட்ரிக்ட் டயட் இருக்கச் சொல்றதைத் தவிர, டாக்டர்களுக்கும் எந்த வழியும் இல்ல. ஒரு குழந்தைக்கு டைப் 1 சர்க்கரை நோய் இருந்துச்சுன்னா, அந்தக் குழைந்தையோட வாழ்நாள் சில ஆண்டுகள் தான். அந்த குழந்தை ஒன்னு சர்க்கரை அதிகமாகி இறக்கும், அல்லது பட்டினியால இறக்கும். இன்சுலினைக் கண்டுபிடிச்ச பிறகே அவங்களால முழுமையா தங்களோட வாழ்க்கைய வாழ முடிஞ்சது. டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கும் ஒரு கட்டத்துல இன்சுலின் சுரப்பு குறையும்போதும் இதுவே ஆபத்பாந்தவனா காப்பாத்துது. பல லட்சம் குடும்பங்களோட கண்ணீரைத் துடைத்த அற்புதக் கண்டுபிடிப்பு இன்சுலின். நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த இன்சுலினுக்கு மாற்றுனு எதுவும் இல்லைங்கிறதே அதோட மகத்துவத்தை நமக்கு சொல்லுது.

இன்சுலினைக் கண்டுபிடிக்கிற முயற்சி, அதற்கு 50 வருஷங்களுக்கு முன்னையே ஆரம்பிச்சிருச்சு. மனிதர்களைப் போலவே நாய்களுக்கும் சர்க்கரை நோய் வருமாம். அதுனால, இன்சுலினைக் கண்டுபிடிக்கிறதுக்கான இந்தப் பரிசோதனையில ஏராளமான நாய்களும் உயிர்த்தியாகம் செஞ்சிருக்கு. ஆரோக்கியமான நாய்களோட கணையத்தை ஆப்ரேஷன் செஞ்து அகற்றுன பிறகு, அதோட உடம்புல சர்க்கரையோட அளவு அதிமாச்சு. அதுனால, ‘சர்க்கரை நோய் வர்ரதுக்கு கணையத்தில் ஏற்படுற ஏதோ ஒரு பிரச்னைதான் காரணம்னு’ என்று மருத்துவர்களுக்குப் புரிஞ்சது. அடுத்தடுத்த ஆண்டுகளில் கணையத்தை இப்படி அப்படி ஆராய்ச்சி செய்து சம்பவ இடத்தை நெருங்குனாங்க ஆராய்ச்சியாளர்கள். கணையத்துல லங்கார்ஹன் திட்டுக்கள் பகுதியில சுரக்குற ஏதோ ஒரு திரவம்தான் சர்க்கரை நோய் ஏற்படுவதைத் தடுக்குதுன்னு புரிஞ்சுகிட்டாங்க. அதுக்கு ‘இன்சுலின்’னு ஒருத்தர் பெயரும் வச்சிட்டாரு.

இன்சுலின்
இன்சுலின்

1916-ம் வருஷம் ருமேனியாவச் சேர்ந்த டாக்டரான நிகோலே பாலெஸ்கு அப்படிங்கிறவர் ஒரு நாயோட கணையத்துல இருந்து சுரப்பைத் தனியாப் பிரிச்சாரு. சர்க்கரை நோயால பாதிக்கப்பட்ட ஒரு நாய்க்கு அதைச் செலுத்துனதும், அந்த நாயோட ரத்தத்துல இருந்த சர்க்கரையோட அளவு இயல்பாச்சு. தான் ஒரு மிக முக்கியமான கண்டுபிடிப்பைச் செய்ஞ்சிருக்கிறது அவருக்குப் புரிஞ்சது. ஆனால், அந்த நாய் சீக்கிரமே இறந்துடுச்சு. சில நாள்களில் முதல் உலகப் போரும் வந்துச்சு. டாக்டர் அவசரமாக ராணுவ சேவைக்குப் போக வேண்டி இருந்ததால, அந்த ஆராய்ச்சி தடைப்பட்டுச்சு.

1920 அக்டோபர் மாதம்… கனடாவச் சேர்ந்த ஃபிரடெரிக் பேன்டிங் அப்படிங்கிற ஒரு மருத்துவர், நாயோட கணையத்துல இருந்து தூய்மையான இன்சுலினை பிரிச்செடுக்க முடியும்னு தன் ஆராய்ச்சியில கண்டுபிடிச்சாரு. அவருக்கு அடுத்து என்ன செய்றதுன்னு தெரியலை. டொரன்டோ பல்கலைக்கழகத்துல இருக்க புகழ்பெற்ற மருத்துவப் பேராசிரியர் மேக்லியோட்-ங்கிறவர்கிட்ட போய் தன்னோட ஆராய்ச்சியப் பத்தி சொல்லியிருக்காரு அவர். பேன்டிங் ஒரு சாதாரண அறுவை சிகிச்சை நிபுணர் தான். பெருசா ஆராய்ச்சி செஞ்ச அனுபவம் பேன்டிங்குக்கு இல்ல. அதனால இவர் சொல்றதை எந்த அளவுக்கு நம்புறதுன்னு மேக்லியோடுக்குத் தயக்கமாவே இருந்துருக்கு, பேன்டிங் விடாம வற்புறுத்திகிட்டே இருந்திருக்காரு. இதுனால, தன்னோட ஆராய்ச்சி நிலையத்தை பேன்டிங்குக்குக் கொடுத்து, கூடவே சார்லஸ் பெஸ்ட் அப்படிங்கிற ஆய்வக உதவியாளர் ஒருத்தரையும் அனுப்பி வச்சிருக்காரு மேக்லியோடு.

1921 ஜூலை 30… பேன்டிங்கும் பெஸ்ட்டும் சேர்ந்து ஒரு நாயோட கணையத்துல இருந்து இன்சுலினை வெற்றிகரமா பிரிச்சு எடுத்தாங்க. ‘‘இதன் மூலமா சர்க்கரை நோய கட்டுக்குள்ள வைக்க முடியும்’’ அப்படின்னு அவங்க சொன்னதைக் கேட்டு சக டாக்டர்களே சிரிச்சாங்க. ‘‘பழுப்பு நிறத்தில சேறு மாதிரி இருக்கிற இதைப் போய் மருந்துன்னு சொல்றீங்களேனு?’’ கேட்டிருக்காங்க.

முதன் முதலில் இன்சுலின் மனிதர் ஒருவருக்கு பயன்படுத்தப்பட்ட நாள் இன்று
முதன் முதலில் இன்சுலின் மனிதர் ஒருவருக்கு பயன்படுத்தப்பட்ட நாள் இன்று

‘நாய் எண் 410’ன்னு பெயரிடப்பட்ட தீவிர சர்க்கரை நோயோட இருக்க நாய் ஒன்னுக்கு அந்த இன்சுலின் செலுத்தப்பட்டது. நாயோட ரத்த சர்க்கரை அளவு சில நிமிடங்கள்லயே இயல்புக்கு வந்ததுருக்கு. மரணத்தோட விளிம்பில இருந்த அந்த நாய, பேன்டிங் கண்டுபிடித்த இன்சுலின் 70 நாள்கள் வரை உயிரோட வச்சிருந்துருக்கு. இன்சுலின் தீர்ந்த பிறகே அந்த நாய் இறந்து போயிருக்கு.

இன்சுலினோட செயல்திறனைப் பார்த்த பேராசிரியர் மேக்லியோட் திகைச்சுப் போயிட்டாரு. ஒரு மாபெரும் மருத்துவத் திருப்புமுனையோட மையத்துல இருக்கிறோம்னு அவருக்கு புரிஞ்சிருக்கு. தன்னோட ஆய்வுக்கூடத்துல நடைபெற்று வந்த மத்த ஆராய்ச்சிகளையெல்லாம் நிறுத்திட்டு இன்சுலின் ஆராய்ச்சிக்கு அதிகமான இடவசதியை செஞ்சு கொடுத்தாரு மேக்லியோடு. நாய்கள்ல இருந்து எடுக்கிற இன்சுலின் போதுமானதாக இல்லை. அதுனால கன்றுக்குட்டிகள்ல இருந்து இன்சுலினை எடுத்திருக்காரு பேன்டிங். ஆனாலும், ‘இது மனிதர்களுக்குக் கொடுக்குற அளவுக்குப் பாதுகாப்பானதா’ அப்படிங்கிற சந்தேகம் மேக்லியோடுக்கு இருந்துருக்கு. இந்த இடத்துல தான் ஜேம்ஸ் காலிப் அப்படிங்கிர உயிர் வேதியியலாளரை உதவிக்கு கூப்பிடுறாரு மேக்லியோடு. இப்போ அந்தக் குழு முழு வேகத்துல உழைச்சு ஒரே மாசத்துல தூய்மையான இன்சுலினைப் பிரிச்செடுத்தது.

1922 ஜனவரி 11, கனடாவுல இருக்க டொரன்டோ பொது மருத்துவமனை. முற்றிய டைப் 1 சர்க்கரை நோயோட இருக்க லியனார்டு தாம்சன்-ங்கிற 14 வயசு சிறுவன் அனுமதிக்கப்பட்டிருந்தான். கோமா நிலைக்கு போற அளவுக்கு பாதிப்பு இருந்துருக்கு. அவனுக்கு இன்சுலினைச் செலுத்த அனுமதி கேட்டாரு டாக்டர் பேன்டிங். இதுவரை மனிதர்கள் யார்கிட்டயும் பரிசோதிக்கப்படாத ஒரு மருந்து, 'இதைக் கொடுக்கலைனாலும் தன்னோட மகன் இறக்கத்தான் போறான். கொடுத்து ஏதாவது பாதிப்பு வந்தாலும் பரவாயில்லைனு’ அந்த சிறுவனோட தந்தை ஹரோல்டு தாம்சன் சம்மதம் தெரிவிக்கிறாரு.

இப்படித்தான் இன்சுலின் இன்ஜெக்‌ஷனைப் பெற்ற முதல் மனிதனா ஆனான் சிறுவன் லியனார்டு தாம்சன். அது அவன் ரத்த சர்க்கரை அளவை உடனடியாகக் குறைச்சுது. ஆனால், எல்லோரும் நினைச்ச மாதிரி, அது சுத்தமான இன்சுலினா இல்லை. அதனால் லியனார்டு உடலில் அலர்ஜி ஏற்பட்டிருக்கு. அடுத்த டோஸ் இன்சுலின் கொடுக்கிறத உடனடியாக நிறுத்தினாங்க. உயிர் வேதியியலாளர் ஜேம்ஸ் காலிப் அடுத்த 12 நாட்கள் இரவும் பகலுமாகப் பல சோதனைகளையும் முயற்சிகளையும் செஞ்சு அந்த இன்சுலினைத் சுத்தமாக்குனாரு. ஜனவரி 23-ம் தேதி லியனார்டுக்கு இரண்டாவது டோஸ் இன்சுலின் போடாங்க. வெற்றி, இப்போ எந்த வித அலர்ஜியோ, பக்கவிளைவோ இல்லாம சர்க்கரை அளவு மட்டும் குறைஞ்சுது. எலும்பும் தோலுமா படுக்கையில் கிடந்த அந்த சிறுவன், அடுத்தடுத்து இன்சுலின் போட்டதும் உற்சாகமாகி எழுந்து விளையாட ஆரம்பிச்சுட்டான். பேன்டிங்கும் அவரோட குழுவுக்கு சந்தோஷம் தாங்க முடியல.

இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி
இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி

‘சர்க்கரை நோயைக் கட்டுக்குள்ள வைக்க இன்சுலின் கண்டுபிடிச்சசுங்கிற’ செய்தி காட்டுத்தீ மாதிரி உலகமெல்லாம் பரவுச்சு. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் இவான்ஸ் ஹ்யூக்ஸின் மகள் எலிசபெத்தும் ஒரு சர்க்கரை நோயாளியா தான் இருந்திருக்காங்க. அமைச்சர் தன்னோட மகளை கூப்பிட்டுட்டு கனடாவுக்கு போயிருக்காரு. அவர்தான் இன்சுலின் போட்டுக்கிட்ட முதல் அமெரிக்கர். இப்படி வெளிநாடுகளிலிருந்து பலர் வர்ரது ஒருபக்கம் இருக்க, வெளிநாட்டு மருத்துவர்களும் இன்சுலினைக் கேக்க ஆரம்பிச்சாங்க. அமெரிக்காவில இருக்க ஏலி லில்லி மருந்து நிறுவனம் இதுக்கா ஒப்பந்தம் செய்து, 1922 நவம்பர்லயே இன்சுலினை மக்கள் பயன்பாட்டுக்காக விற்பனைக்கே கொண்டு வந்துட்டாங்க.

இன்சுலினைக் கண்டுபிடிச்சதுக்கு 1923-ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு ஃபிரடெரிக் பேன்டிங் மற்றும் பேராசிரியர் மேக்லியோட் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டது. ‘தன்னோட ஆராய்ச்சிக்கு உதவின பெஸ்ட்டுக்கும் இதுல பங்கு உண்டுனு’ சொல்லி, அவரோட தன் பரிசுத் தொகையை பேன்டிங் பகிர்ந்துக்கிட்டாரு. ‘இன்சுலினைச் சுத்திகரிக்க உதவின ஜேம்ஸ் காலிப்புக்கும் இதில பங்கு உண்டுனு’ சொல்லி, தன்னோட பரிசுத் தொகையை அவரோட பகிர்ந்துக்கிட்டாரு மேக்லியோடு. இந்த அரிதான பெருந்தன்மையைக் கண்டு நோபல் கமிட்டி திகைச்சுச்சு.

அவங்க கண்டுபிடிச்ச இன்சுலினுக்கு காப்புரிமை வாங்கனும்னு அவங்க நினைக்கல. ஒரு சர்க்கரை நோயாளி ஆயுள் முழுக்க இன்சுலினைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்ங்கிறதால, உலகம் முழுக்க எல்லாருக்கும் இது மலிவு விலையில் கிடைக்கனும்னு ஆசைப்பட்டாங்க. ஆனால், இவர்களோட அனுமதி இல்லாமையே ஒரு மருந்து நிறுவனம் இதுக்கு காப்புரிமை வாங்க முயற்சி பண்ணுச்சு. அப்படி அவர்கள் செஞ்சிருந்தா, அவங்க மட்டுமே இன்சுலினை தயாரிச்சிருக்க முடியும். அதுக்கு என்ன விலை சொன்னாலும், உலகம் கொடுத்திருக்கனும்.

இன்சுலினைக் கண்டுபிடித்தவர்கள்
இன்சுலினைக் கண்டுபிடித்தவர்கள்

இந்த அபாயத்தை தவிர்க்கிறதுக்கு இவங்க நான்கு பேரம் ஒன்னா இணைஞ்சு, இன்சுலினுக்கான காப்புரிமைய டொரன்டோ பல்கலைக்கழகத்துக்குக் கொடுத்துட்டு ஒரே ஒரு அமெரிக்க டாலரை மட்டும் அடையாளத் தொகையா வங்கிகிட்டாங்க. ‘இன்சுலினை பிரிச்செடுக்குற வழிமுறைய நாங்க வெளிப்படையா தர்ரோம். யார் வேணும்னாலும் இந்த முறையைப் பின்பற்றி இன்சுலினை தயாரிச்சுக்கலாம். ஆனால், கொள்ளை லாபம் பார்க்க முயற்சி செய்யக் கூடாதுனு’ எழுதியும் கொடுத்துட்டாங்க. இவங்களோட இந்த செயல் தான் மருத்துவ அறத்தின் உச்சமாகப் பார்க்கப்படுது.

ஆரம்பக்காலத்துல கால்நடைகள் மற்றும் பன்றிகளோட கணையத்துல இருந்து இன்சுலின் பிரிச்செடுக்கப்பட்டுச்சு. அதுல சிலருக்கு அலர்ஜி வந்துச்சு. 40 ஆண்டுகளுக்கு முன்பு சிந்தெடிக் இன்சுலின் அறிமுகமான பிறகு, யாருக்கும் அலர்ஜி பிரச்னைகள் இல்ல. இன்சுலின் பேனா, இன்சுலின் பம்ப் எல்லாம் வந்த பிறகு இதைப் பயன்படுத்துறது இன்னும் எளிதாகிடுச்சு. பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை ஏறினால் பெரும் கூக்குரல் எழுவதுபோலவே, இன்சுலின் விலை ஏறினாலும் சர்ச்சையாகுது. அந்த நாளு ஆராய்ச்சியாளர்களுக்கு தான் நாம நன்றி சொல்லனும்.