விருதுநகர் மாவட்டம், சிவகாசி அம்மன்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 49). இவர் அந்தப் பகுதியில் ஹோட்டல் நடத்திவந்தார். திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்வதற்காக விரதம் மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில், இவரின் தலைமையில், சுமார் 30 பேர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நேற்று இரவு பாதயாத்திரைக்குக் கிளம்பியிருக்கின்றனர்.
இந்தப் பாதயாத்திரை குழுவினர், சாத்தூர்-கோவில்பட்டி இடையே தேசிய நெடுஞ்சாலையில் புல்வாய்ப்பட்டிவிலக்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது, அவர்களுக்குப் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கருப்பசாமி, சிவகாசி மீனாட்சி காலனியைச் சேர்ந்த சங்கரன் (45) ஆகிய இருவரும் தூக்கிவீசப்பட்டனர். இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும் ஆமத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
படுகாயமடைந்த நபரை விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைத்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவுசெய்து, விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம், அதன் டிரைவரைத் தேடிவருகின்றனர்.