சென்னை, பெருங்குடி, அன்னை சத்யா நகரில் சரவணன் என்பவர் வசித்து வந்தார். இவரின் வீட்டின் பின்புறமுள்ள கழிவுநீர் உறைக்கிணற்றைச் சுத்தம் செய்யும் பணி இன்று மதியம் நடைபெற்றது. நீலாங்கரை பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர் மோட்டார் பம்ப் மூலமாகக் கழிவுநீரை வெளியேற்றிக் கொண்டிருந்தார். அப்போது, உறைக்கிணற்றிலிருந்து வெளியான விஷவாயு தாக்கியதில் காளிதாஸ் மயங்கி கீழே விழுந்திருக்கிறார். காளிதாஸ் மயங்கியதைப் பார்த்த சரவணன் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார். அப்போது, சரவணனும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் காளிதாஸ், சரவணன் ஆகிய இருவரையும் மீட்டனர். அங்கு வந்திருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவரையும் பரிசோதித்துவிட்டு ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரின் உடல்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இது தொடர்பாக துரைப்பாக்கம் பகுதி போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள். விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.