2022 பிப்ரவரி 24-ல் உக்ரைன் மீது ரஷ்யா போர்தொடுக்க ஆரம்பித்து ஒருவருடம் நிறைவடையவிருக்கும் நிலையில், இன்னமும்கூட போர் நின்றபாடில்லை. இந்த நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் இன்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில், உக்ரைன் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிரிஸ்கி (Denys Monastyrsky) உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் கீவின் புறநகர்ப் பகுதியான ப்ரோவரியில் (Brovary) இந்த விபத்து நடந்திருக்கிறது. இதில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிரிஸ்கி உட்பட 8 பேர் பயணம் செய்திருக்கின்றனர்.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் மழலையர் பள்ளி மீது விழுந்து அருகிலுள்ள குடியிருப்புக் கட்டடத்தில் மோதி தீப்பிடித்ததில் மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை வெளியான தகவலின்படி, உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிரிஸ்கி, அவரின் இணையமைச்சர் யெவ்ஜெனி யெனின் (Yevgeniy Yenin), மூன்று குழந்தைகள் உட்பட மொத்தம் 18 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அதோடு, 15 குழந்தைகள் உட்பட 29 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த ஹெலிகாப்டர் விபத்தை உறுதிசெய்த உக்ரைனின் காவல்துறை தலைவர் இகோர் கிளைமென்கோ (Igor Klymenko), ``அரசின் அவசர சேவை ஹெலிகாப்டர் ப்ரோவரியில் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இதில் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிரிஸ்கி உயிரிழந்தார்" எனத் தெரிவித்தார்.