கடந்த ஆண்டு, அக்டோபர் 3-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் பேரணியின்போது, ஐந்து பேர் கார் ஏற்றிக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில், நான்கு விவசாயிகளும், ஒரு பத்திரிகையாளரும் அடக்கம். இதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில், மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர்.
லக்கிம்பூர் கேரியில் நடந்த இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில், விவசாயிகள்மீது மோதிய மூன்று கார்களும் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன், ஆஷிஷ் மிஸ்ராவுக்குச் சொந்தமானவை.

எனவே, இது தொடர்பான வழக்கில் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் கைதுசெய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, ஆஷிஷ் மிஸ்ரா ஜாமீன் வழங்கக் கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி 10-ம் தேதியன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 21-ம் தேதி பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், லக்கிம்பூர் கேரி வழக்கின் சாட்சிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக விவசாயிகளின் குடும்ப உறுப்பினர்கள் கூறியிருந்தனர். இந்த மனுவை மார்ச் 15-ம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜாமீனில் வெளியே வந்த ஆஷிஷ் மிஸ்ரா பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தைத் தாக்கியது உறுதியான நிலையில், ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்துள்ளது. மேலும் ஆஷிஷ் மிஸ்ரா ஒரு வாரத்துக்குள் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.