குஜராத்தில் கடந்த 1-ம் தேதி நாட்டின் அதிவிரைவு ரயிலாகக் கருதப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். தொடங்கிவைத்த சில நாள்களில் அந்த ரயில் மும்பையிலிருந்து காந்தி நகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது திடீரென எருமை மாடுகள் தண்டவாளத்தில் புகுந்ததால், அவற்றின்மீது மோதி ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது. சேதமடைந்த பகுதி உடனே சரிசெய்யப்பட்டு மீண்டும் வந்தே பாரத் ரயில் தன் பயணத்தைத் தொடங்கியது. ரயில் தண்டவாளத்தில் எருமை மாடுகளைவிட்ட மாட்டு உரிமையாளர்கள்மீது குஜராத் போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.

இது போன்ற விபத்துகளைத் தவிர்க்க முடியாது என்றும், இது போன்ற அம்சங்களை கவனத்தில்கொண்டுதான் ரயில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், ரயில் முனைப்பகுதியை முற்றிலும் மாற்றிக்கொள்ள முடியும் என்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்த ரயில் காந்தி நகரிலிருந்து மும்பையை நோக்கி வந்தபோது மீண்டும் விபத்தில் சிக்கியிருக்கிறது. ரயில் குஜராத் மாநிலத்திலுள்ள ஆனந்த் என்ற இடத்துக்கு அருகே வந்தபோது ரயில் தண்டவாளத்தில் பசு மாடு ஒன்று புகுந்துவிட்டது.

அந்தப் பசு மாட்டின்மீது ரயில் மோதிக்கொண்டது. இதில் ரயிலின் முன் பகுதி அதாவது, ஏற்கெனவே நடந்த விபத்தில் சேதமடைந்து சரிசெய்யப்பட்ட பகுதி மீண்டும் சேதமடைந்தது. இந்தச் சம்பவத்தால் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டது. இந்த ரயிலையே முழுமையாக இயக்க முடியாமல் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. அடுத்தகட்டமாக மும்பையிலிருந்து அகமதாபாத்துக்கு புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. அதை எப்படி இயக்கப்போகிறார்களோ என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.