
உலகப் பொதுமறையாகப் போற்றப்படும் திருக்குறளில் மாணவர்கள் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்கள்.
2000 ஆண்டுகளைக் கடந்தாலும், இன்றும் நம் அன்றாட வாழ்வுக்கான வழிகாட்டியாக இருப்பது திருக்குறள். உலகப் பொதுமறையாகப் போற்றப்படும் திருக்குறளில் மாணவர்கள் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்கள். அந்த வரிசையில், ஒரு சாதனை படைத்ததைப் பெருமையாக இல்லாமல் கடமையாகவே கருதுகிறார்கள் இந்தச் சுட்டிகள்.
காரைக்குடி, வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கும் இர.பிரபாகரன் மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவி க.அலமுப்பிரியா இருவரும் 30 நிமிடங்களில் 1000 குறட்பாக்களைத் தெளிவாக உச்சரித்து, ‘சோழன் உலகச் சாதனை’ படைத்துள்ளனர். இவர்கள் இருவரும் சுட்டி விகடனின் சுட்டி ஸ்டார்கள் என்பது சிறப்பு.

1 முதல் 500 குறட்பாக்களை 15 நிமிடங்களில் இர.பிரபாகரன் சொல்லி முடிக்க, 501 முதல் 1000 குறட்பாக்கள் வரை 15 நிமிடங்களில் க.அலமுப்பிரியா கூறினார். இதன் மூலம், சோழன் உலகப் புத்தகத்தில் இடம்பெற்றனர். இவர்கள் இருவரும் ஏற்கெனவே தமிழக அரசின் குறள் பரிசுத் திட்டத்தில் 10,000 ரொக்கப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் பெற்றவர்கள்.
இந்த நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஹேமமாலனி வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெ.ஜெயகாந்தன், சிறப்புரை ஆற்றினார். சோழன் உலகச் சாதனைப் புத்தகத்தின் நிறுவனர் நீலமேகம் நிமலன் வாழ்த்துரை வழங்கினர்.

‘‘வெறும் மனப்பாடத்துக்காகவோ, சாதனை செய்வதற்காகவோ இத்தகைய நிகழ்ச்சியை நடத்து வதில்லை. சிறந்த கருத்துகளுடைய ஒன்றைத் திரும்ப திரும்பப் படிக்கும்போது, அது மனதுக்குள் மாற்றத்தை உண்டாக்கும். சிறந்த மனிதநேயர்களாக மாற்றும். அதற்காகத்தான் போட்டியில் பங்கேற்கிறோம்’’ என்கிறார்கள் பிரபாகரனும் அலமுப்பிரியாவும்.
சபாஷ் சுட்டி ஸ்டார்ஸ்!