
அந்தக் காலத்துல சிறுசு, பெருசுன்னு அத்தனை பத்திரிகைகளும் தீபாவளி மலர் வெளியிடும். விலை அஞ்சு ரூபாய்.
தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கிறது. தீபாவளி மலர்களும், சிறப்பிதழ்களும் சுடச்சுட ரெடியாகிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், 50 வருடங்களுக்கு முந்தைய தங்களுடைய தீபாவளி மலர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் மூத்த ஓவியர்கள் சிலர்.

வரைஞ்சிட்டிருக்கும்போதே விடிஞ்சிடும்... ஓவியர் ஜெயராஜ்
``அந்தக் காலத்துல சிறுசு, பெருசுன்னு அத்தனை பத்திரிகைகளும் தீபாவளி மலர் வெளியிடும். விலை அஞ்சு ரூபாய். 1960-கள்ல அது பெரிய காசு. ஆனந்த விகடன் மாதிரி பெரிய பத்திரிகையில ஆரம்பிச்சு சிறு பத்திரிகைகளின் தீபாவளி மலர் வரைக்கும் எல்லாத்துக்கும் ஓவியம் வரைஞ்சிருக்கேன். தீபாவளி நேரத்துல ஒரு பத்திரிகைக்கே நாலைஞ்சு படங்கள் வரைய வேண்டியிருக்கும். சில நாள்கள்ல ஓவியம் வரைஞ்சுக்கிட்டிருக்கும்போது பொழுதே விடிஞ்சிருக்கும். உடம்புக்கு சோர்வா இருந்தாலும் மனசுக்கு சந்தோஷமா இருக்கும். தீபாவளிக்கு முந்தைய நாளே நான் ஓவியம் வரைஞ்ச தீபாவளி மலர்களெல்லாம் வீட்டுக்கு வந்துடும். எங்க ஃபிளாட்ல இருந்த பல குடும்பங்கள் என்கிட்டதான் தீபாவளி மலர்கள் வாங்கிப் படிப்பாங்க. புத்தகங்கள் கிழிஞ்சிடக்கூடாதுன்னு அட்டைபோட்டு வெச்சிருப்பேன். அதெல்லாம் அழகான காலம்.’’


கர்ப்பிணி தன் குழந்தையைப் பார்க்கிற ஃபீலிங் அது! - ஓவியர் மாருதி
``நான் ஃபீல்டுக்கு வந்து 63 வருஷமாச்சு. தீபாவளி வரப்போகுதுன்னா எல்லாருக்கும் போனஸா பணம் கிடைக்கும். என்னை மாதிரி ஓவியர்களுக்கு போனஸா நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். அப்போ எல்லாம் கதைகளை வீட்டுக்கு கொடுத்தனுப்புவாங்க. வரைஞ்ச படங்களை நான்தான் ஒவ்வொரு பத்திரிகை ஆபீஸா கொண்டுபோய் கொடுப்பேன். படம் பிரின்ட் ஆகி தீபாவளி மலர்ல வர்றதை பார்க்கறது கர்ப்பிணி, தன் குழந்தையைப் பார்க்கற மாதிரியான ஒரு ஃபீலிங். இந்த நேரத்துல வர்ற எக்ஸ்ட்ரா பணம் தீபாவளிக்கு ஊருக்குப் போற செலவுக்கும், ஓவியம் வரையுறதுக்கு ஆர்ட் மெட்டீரியல் வாங்குறதுக்கும் உபயோகப்படும். லட்சுமி, அனுராதா ரமணன் மாதிரி சில எழுத்தாளர்கள் என் ஓவியம் வேணும்னு கேட்பாங்க. அந்தக் காலத்துல நான் ஓவியம் வரைஞ்ச தீபாவளி மலர்களை இப்பவும் பத்திரமா எடுத்து வெச்சிருக்கேன். என் ஓவியங்களுக்கு கிடைச்ச அங்கீகாரங்கள் இல்லையா அவை..!’’


சேனல் திருப்புற மாதிரி வேலை பார்ப்போம்! - ஓவியர் மணியம் செல்வன்
``1970-கள்ல வழக்கமா வர்ற புத்தகங்கள்ல ஓவியங்கள் கறுப்பு, வெள்ளையில இருக்கும். தீபாவளி மலர்லதான் கலர் ஓவியங்கள் வரும். அதனால, தீபாவளி மலர்களுக்கு படம் வரையுறதுனாலே ஓவியர்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம்தான். பத்திரிகைகள்ல இருந்து ஆறு மாசத்துக்கு முன்னாடியே மலருக்கான கதைகளையும் கட்டுரைகளையும் அனுப்பிடுவாங்க. ஒரு வரலாற்றுக்கதைக்கு ஓவியம் வரைஞ்சிக்கிட்டிருக்கும்போதே சமூகக்கதை வரும். அதுக்கு படம் வரைஞ்சிக்கிட்டிருக்கும்போதே ஓர் ஆன்மிகக்கட்டுரை வரும். டக் டக்குன்னு டி.வி சேனலை மாத்துற மாதிரி மனநிலையை மாத்திக்கிட்டு வரைஞ்சிக்கிட்டே இருப்பேன். தீபாவளியன்னிக்கு நான் போட்டுக்க வேண்டிய சட்டையைகூட மனைவிதான் வாங்கிட்டு வருவாங்க. நான் வீட்டுக்குள்ள படம் வரைஞ்சுக்கிட்டே இருக்க, என்னை டிஸ்டர்ப் செய்ய வேணாம்னு உள்ள வெச்சு பூட்டிட்டுப் போன சம்பவமும் நடந்திருக்கு.’’