விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷெரிப். அ.தி.மு.க-விலிருந்த இவர், முன்னாளில் அமைச்சராக இருந்த சி.வி.சண்முகத்தின் வலதுகரம்போல உலா வந்தவர். சி.வி.சண்முகத்தின் பெயரை தன் கையில் பச்சைக் குத்தியும் வைத்திருந்தார். அ.தி.மு.க-வில் விழுப்புரம் மாவட்ட ஊடகப் பிரிவுச் செயலாளராக இருந்துவந்த இவருக்கு, விழுப்புரம் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளராகப் பின்னர் பொறுப்பு மாற்றி வழங்கப்பட்டது.

Also Read
சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர், சி.வி.சண்முகத்துடனான கருத்து வேறுபாட்டின் காரணமாக சசிகலா தரப்பில் ஐக்கியமானார். அதிலிருந்து சசிகலாவின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவராக இருந்துவருகிறார். ஜூன் 5-ம் தேதி திண்டிவனத்தில் இவர் மகளின் திருமணம் நடைபெற்றது. அதற்காக ஒரு நாள் முன்பாகவே சசிகலா திண்டிவனம் வந்திருந்தார். சசிகலா திண்டிவனம் பகுதிக்கு வரும்போதெல்லாம் இவர் தலைமையில் பிரமாண்ட வரவேற்பும் அளிக்கப்படும்.
அந்த வகையில், தற்போது சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்துவருகிறார். இந்த நிலையில் இவரும், டி.கீரனூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஜாஃபர் என்பவரும் சேர்ந்து, விழுப்புரம் - சாலமேடு பகுதியைச் சேர்ந்த பழனிவேலு என்பவரின் மகள்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.16,00,000 பழனிவேலிடமிருந்து பெற்றனராம். ஆனால், அரசு வேலையை வாங்கித்தராமல், பணத்தையும் திருப்பித்தராமல் இருவரும் ஏமாற்றிவிட்டதாக பழனிவேலு போலீஸிடம் புகார் அளித்திருக்கிறார்.

இந்தப் புகாரின் மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை மேற்கொள்ள விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா உத்தரவிட்டதின் பேரில், விழுப்புரம் குற்றப்பிரிவு டி.எஸ்.பி சம்பத்குமார் வழக்கு பதிவுசெய்தார். இந்த நிலையில், டி.எஸ்.பி சம்பத்குமார் தலைமையிலான போலீஸார் முகமது ஷெரிப்பை கைதுசெய்தனர். பின்னர், விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தினர்.

அப்போது நீதிபதி முன்னிலையில் ஷெரிப், தன்னுடைய மகனுக்கு திருமணம் வைத்திருப்பதாகக்கூறி, புகாரளித்த நபருக்கு உரிய பணத்தை வழங்கினார். அதையடுத்து, நீதிபதி அவருக்கு பெயில் வழங்கினார். இருப்பினும், இந்த விவகாரத்தில் ஷெரிப் மீதான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்கிறார்கள் போலீஸார்.