Published:Updated:

தனியார் நிறுவனங்கள் உருவாக்கிய கோயில் இணையதளங்கள்... பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்படுவது சரியா?

இந்து சமய அறநிலையத்துறை
News
இந்து சமய அறநிலையத்துறை

அரசுக்குச் சொந்தமான அனைத்து கோயில்களின் இணையதளங்களும் இனி என்.ஐ.சி. நிறுவனம் (.nic) வழியாக மட்டுமே வெளியாகி பராமரிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Published:Updated:

தனியார் நிறுவனங்கள் உருவாக்கிய கோயில் இணையதளங்கள்... பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்படுவது சரியா?

அரசுக்குச் சொந்தமான அனைத்து கோயில்களின் இணையதளங்களும் இனி என்.ஐ.சி. நிறுவனம் (.nic) வழியாக மட்டுமே வெளியாகி பராமரிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை
News
இந்து சமய அறநிலையத்துறை
தமிழகத்தில் உள்ள பிரபலமான ஆலயங்களில் நடத்தப்படும் சிறப்பு பூஜைகள், விழாக்கள், சேவைகள் அனைத்தும் ஐ.டி.எம்.எஸ். (ITMS) எனப்படும் போர்ட்டல் வழியாக என்.ஐ.சி. (.nic) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இணையதளத்தில் வெளியாகின்றன. எனினும் ஐ.டி.எம்.எஸ். (ITMS) திட்டம் துவங்குவதற்கு முன்பு தனியார் அமைப்புகள் மூலம் கோயில்களுக்கு என அதிகாரபூர்வ வலைதளங்களை உருவாக்கி, அதனை அந்தந்த திருக்கோயில் நிர்வாகங்களே தனிப்பட்ட முறையில் நிர்வகித்து வந்தன.

தற்போது அதை உடனடியாக முடக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்ட இணையதளங்கள் வழியே திருக்கோயில் நடவடிக்கைகள் இன்னமும் வெளியாகின்றன. இது அரசின் கவனத்துக்கு வந்ததை அடுத்து, இது தவறானது என்றும் பாதுகாப்பு குறைபாடுகள் பலவும் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கருதி அவற்றை ஒருவார காலத்திற்கு மூட அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் ஆணை பிறப்பித்துள்ளார்.

அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன்
அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன்

மேலும் இணையத்தில் பல்வேறு முறைகேடுகள், நிதி கையாடல், 'ஹேக்கிங்' வழியே திருக்கோயில் தரவுகளைக் களவாடும் வாய்ப்புகளும் உள்ளன. அதனால் அரசுக்குச் சொந்தமான அனைத்து கோயில்களின் இணையதளங்களும் இனி என்.ஐ.சி. நிறுவனம் (.nic) வழியாக மட்டுமே வெளியாகி பராமரிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட திருக்கோயில்களில் புதிய சிறப்பு இணையதளச் சேவைகள் தேவைப்பட்டால் அது தொடர்பாக ஐ.டி.எம்.எஸ். (ITMS) நிறுவனம் மூலமாக மட்டுமே இனி அவை உருவாக்கப்பட வேண்டும்.

உயரிய வருமானம் இல்லாத இரண்டாம், மூன்றாம் நிலை ஆலய செயல் அலுவலர்களுக்கும் இது தொடர்பாக ஆலோசனை வழங்கி செயல்படுத்த வேண்டும். அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்கள் இதைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட தனியார் இணையதளங்களை மூட ஒரு வாரம் கெடு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தவறினால், அதனால் ஏற்படும் இழப்புகளுக்குச் சம்பந்தப்பட்ட செயல் அலுவலரே பொறுப்பாவார். அதேபோல், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் சில உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டோம். "இது நல்ல முடிவு என்றே சொல்லலாம். இணையத்தில் பல்வேறு தவறுகள் நடைபெறும் இந்தக் காலகட்டத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்.ஐ.சி. (NIC) நிறுவனத்தின் வழியாக திருக்கோயில் இணையதளங்கள் இயங்குவது நல்லதே. அரசின் எல்லா சேவைகளும் இந்த .nic இணையத்திலேயே நடைபெறுகின்றன. ஆலய தளங்களும் அவ்விதம் வருவது நல்லதே. ஏதாவது தவறு நடந்தால் குறைந்தபட்சம் இந்த நிறுவனம் பொறுப்பேற்கும். மற்றபடி பாதுகாப்பு கடுமையாக உள்ள இணையதளங்களைக் கூட மிக எளிதாக ஹேக் செய்யும் இந்தக் காலத்தில் எந்த நிறுவனத்தாலும் மோசடிகளைக் கட்டுப்படுத்திவிட முடியாது என்பதே உண்மை.

திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி

மேலும் திருப்பதி, சபரிமலை போன்று இங்கு உள்ள ஆலயங்களில் இணையதளங்களின் வழியே சிறப்பான சேவைகள் நடப்பதில்லை. காரணம் திருப்பதி, சபரிமலை போன்றவை தனியான தேவஸ்தான அமைப்பு கொண்டவை. இதனால் பாதுகாப்பு விஷயங்களில் அவை கண்டிப்பாக இருக்கும். நம்முடைய தமிழக ஆலயங்கள் அப்படி இல்லை என்றே சொல்லலாம். ஒருவேளை தமிழகக் கோயில் ஒன்றில் சிறப்பு சேவைக்காக பணம் செலுத்த முயன்றால் கூட முடிவதில்லை. இன்னும் ஒரு பெரிய கவலைக்குரிய விஷயம், பழநி கோயில் இணையதளம் என்று பார்த்தால் 5 அல்லது 6 இணையதளங்களை கூகுள் காட்டும். இதில் எது சரியானத் தகவலைக் கொடுக்கிறது என்பதை அறிவதே கஷ்டம். இதனால் ஒழுங்கானதொரு அமைப்பின் கீழ் அனைத்து ஆலய இணையதளங்களும் வருவது நன்மையே. ஆனால், பாதுகாப்பு ரீதியாக இதனால் பெரிய மாற்றங்கள் ஒன்றும் வந்துவிடப் போவதில்லை. ஆலய இணையதளங்கள் பிரபலமாக அதன் சேவைகள் இன்னமும் விரிவாக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தனர்.

அதேபோல பல ஆன்மிக அமைப்புகளும் இந்த முடிவை வரவேற்கின்றன. வேகமான இந்தக் காலகட்டத்தில் தமிழக ஆலய சேவைகளும் இணையம் வழியாகச் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாகவும் இருக்கிறது.