சமீபத்தில் ரிசர்வ் வங்கி, டிஜிட்டல் கரன்சி அல்லது இ - ரூபாயை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து அதனை எப்படி பயன்படுத்துவது, இந்த கணக்குகளை யார் நிர்வகிப்பார்கள், யுபிஐ பணபரிவர்த்தனையும் இதுவும் ஒன்றா போன்ற வரிசையான பல கேள்விகள் மக்களிடையே எழ ஆரம்பித்தது.

இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் டிஜிட்டல் கரன்சி மற்றும் யுபிஐ ஆகியவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை விளக்கி கூறியுள்ளார்.
அதில், ``டிஜிட்டல் கரன்சியின் பல அம்சங்கள் யுபிஐ -யிலிருந்து மாறுபட்டவை என்பது இன்னும் பலருக்கு தெளிவாக புரியவில்லை. யுபிஐ-ல் பல வங்கி கணக்குகள் ஒரே மொபைலில் இணைத்து பயன்படுத்தப்படுகிறது. எனவே பணபரிவர்த்தனையில் வங்கியானது ஒரு இடைத்தரகரை போல செயல்படும்.
உதாரணத்திற்கு, யுபிஐ ஆப் பயன்படுத்தி, ஒருவர் பணத்தை மற்றவருக்கு அனுப்பும் போது, வங்கிக்கு மெசேஜ் சென்று விடும். அதாவது யாருக்கு பணம் செல்கிறது, எவ்வளவு பெறுகிறார்கள் போன்ற விவரங்கள் வங்கிக்கு தெரியும்.
இதுவே டிஜிட்டல் கரன்சி என்று வரும்போது, வங்கியானது இடையில் செயல்படாது. நீங்கள் யாருக்கு பணம் அனுப்புகிறீர்கள், எவ்வளவு அனுப்புகிறீர்கள் போன்ற தகவல்கள் யாருக்கும் தெரியாது. வங்கியும் இடையில் இணைக்கப்படாததால், அவற்றுக்கும் விவரங்கள் தெரியாது.

காகித பணத்தை பொறுத்தவரை வங்கியில் இருந்து 1000 ரூபாய் எடுத்து, உங்கள் பர்ஸில் நீங்கள் வைத்துக் கொள்ளலாம். அதை எடுத்து கடைகளில் கொடுத்து பயன்படுத்தலாம். இதுபோலவே டிஜிட்டல் கரன்சியை எடுக்கவும், ஒரு கடையில் கொடுக்கவும் முடியும். ஆனால் அது அனைத்தும் உங்கள் மொபைலிலேயே தான் நடக்கும்.
டிஜிட்டல் கரன்சியை பொறுத்தவரை இரண்டு தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் அல்லது வணிகத்திற்கு பண பரிமாற்றத்தை செயல்படுத்த முடியும். யுபிஐ -ல் பண பரிமாற்றம் இரண்டு வங்கி கணக்குகளுக்கு இடையில் இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார். இதனை நடைமுறைபடுத்தி பார்க்கும் போதுதான் இன்னும் தெளிவு பிறக்கும் எனலாம்.