Published:Updated:

குடியிருப்புப் பகுதிகளில் நுழையும் குரங்குகள்... தீர்வு என்ன? #DoubtOfCommonMan

குரங்குகள்
News
குரங்குகள் ( Photo: M.Vijaya Kumar / vikatan )

குரங்குகள் மீது எந்தத் தவறும் இல்லை. காடுகளில் விலங்குகளுக்குத் தேவையான உணவுகள், நீர் ஆதாரங்கள் சரியாக உள்ளனவா என்பதைச் சரியான முறையில் கையாள்வது மாவட்ட வனத்துறையினரின் பொறுப்பு.

Published:Updated:

குடியிருப்புப் பகுதிகளில் நுழையும் குரங்குகள்... தீர்வு என்ன? #DoubtOfCommonMan

குரங்குகள் மீது எந்தத் தவறும் இல்லை. காடுகளில் விலங்குகளுக்குத் தேவையான உணவுகள், நீர் ஆதாரங்கள் சரியாக உள்ளனவா என்பதைச் சரியான முறையில் கையாள்வது மாவட்ட வனத்துறையினரின் பொறுப்பு.

குரங்குகள்
News
குரங்குகள் ( Photo: M.Vijaya Kumar / vikatan )
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், ``காஞ்சிபுரம், வாலாஜாபாத் சுற்றுப்புறப் பகுதியில் குரங்குகள் குடியிருப்புகளில் புகுந்து சேட்டை செய்கின்றன. இதைப்பற்றி வனத்துறையிடம் கூறிய‌ பின்னும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை; இதற்கான தீர்வு என்ன?" என விகடன் வாசகர் ‌கலைச்செல்வன் கேள்வி கேட்டிருந்தார். அதன் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள கட்டுரை இது.
DoubtOfCommonMan
DoubtOfCommonMan

காடு, பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வாழும் பல்லுயிர்க் கூடாரம். இயற்கையின் சமநிலைப்படி காடுகளில் தங்கள் உணவை, வாழ்வை தகவமைத்துவரும் உயிர்களுக்கு பாதகங்கள் பல வகையில் வருகின்றன. காடுகளை மனிதன் அழிக்கத் தொடங்கியபோது, அந்த உயிர்கள் தங்கள் இருப்பிடத்தை இழக்கின்றன. யானைகள் பலவும் தங்களின் வலசைப் பாதையை மறந்து, வழித்தடம் மாறி நிற்கின்றன. இதன் காரணமாக ஏற்படுகின்ற விபத்து முதலியவற்றால் இறந்தும் போகின்றன. பல இயற்கை ஆர்வலர்களும் இது குறித்து தொடர்ச்சியாக உரையாடி வருகின்றனர். கலைச்செல்வன் கேட்ட கேள்வியைக் காட்டுயிர் ஆர்வலர் ரவீந்தரனிடம் முன்வைத்தோம். அவர் கூறிதாவது,

``காட்டுக்குள் வசிக்கும் குரங்குகள், குடியிருப்புப் பகுதிக்கு வருவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, காட்டுக்குள் அவற்றுக்கு போதுமான உணவு மற்றும் நீர் ஆதாரங்கள் இல்லாதது. இரண்டாவது காரணம், குடியிருப்புப் பகுதிக்கு வந்த குரங்குகளுக்கு உணவுப்பொருள், பிஸ்கெட், பழங்கள் கொடுத்து ஆசை காட்டப்படுவதால். குரங்குகளுக்கு இந்த உணவுப்பொருள்கள் பிடித்துவிட்டால், அவை அங்கேயே தங்கிவிடும். அவற்றை மீண்டும் காட்டுக்குள் அனுப்புவது சிரமம்.

குரங்குகள்
குரங்குகள்

இங்கு, குரங்குகள் மீது எந்தத் தவறும் இல்லை. காடுகளில் விலங்குகளுக்குத் தேவையான உணவுகள், நீர் ஆதாரங்கள் சரியாக உள்ளனவா என்பதைச் சரியான முறையில் கையாள்வது மாவட்ட வனத்துறையினரின் பொறுப்பு.

முதலில், இதுகுறித்து மாவட்ட வனத்துறை அலுவலகத்திடம் புகார் அளிக்கவேண்டும். வனத்துறையினர்‌ `மங்கி ட்ராப்' (Monkey trap) மூலம் குரங்குகளைப் பிடித்து காடுகளில் விட்டுவிடுவர். இவ்வாறு குரங்குகளைக் காட்டுக்குள் மீண்டும் அனுப்பலாம்.

ஒருவேளை மாவட்ட வனத்துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனும்பட்சத்தில், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து புகார்மனு கொடுக்கலாம். அந்த மனுவில் எந்தப் பிரச்னை குறித்து வனத்துறையிடம் புகார் அளித்தோம் என்பதையும் எந்தெந்தத் தேதிகளில் வனத்துறைக்கு புகார் அளித்தோம் என்பதையும் குறிப்பிடலாம். முடிந்த அளவுக்கு புகார் மனுவில் அதிகமான தகவல்களைக் குறிப்பிடுவது நல்லது. மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் மனுவை ஒரு நகல் எடுத்து மீண்டும் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் கொடுக்கலாம். இது மாவட்ட வனத்துறை ஊழியர்களை விரைந்து செயல்பட வைக்கும்" என்று கூறினார்.

Monkey
Monkey
Photo: Siddharth.Maa.Pi / Vikatan

மேலும் இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட வனத்துறை அலுவலகத்தைத் தொடர்புகொண்டோம். பிரச்னை குறித்து சொன்ன பின் ``நாங்கள் விசாரிக்கிறோம். இந்தப் பிரச்னையைப் புகார் மனுவாக எழுதி அனுப்பச் சொல்லுங்கள். சில சமயம், இந்தப் புகார் மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலத்துக்கு அனுப்பிவிடுவார்கள். எங்களிடம் மனு வந்தடைய தாமதமாக வாய்ப்புள்ளது' என்று கூறினர். இந்தப் பிரச்னைக்கு விரைவில் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என உறுதியளித்தனர்.

வாலாஜாபாத் மக்களே, நீங்கள் இன்னும் புகார் மனுவை மாவட்ட வனத்துறைக்கு அனுப்பவில்லையென்றால், விரைவில் புகார் மனு அளியுங்கள்.

காடுகளை அழித்து நகரங்கள் உருவாகின்ற இந்தக் காலகட்டத்தில் மிஞ்சியுள்ள விலங்குகளை பாதுகாப்பது நம் கடமையாகும். எனவே, முடிந்த அளவு வனவிலங்குகளைச் சரியான முறையில் பராமரிப்போம். இயற்கையைப் பாதுகாப்போம். இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல.

DoubtOfCommonMan
DoubtOfCommonMan

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவுசெய்யுங்க!