தேனி மாவட்டம், சின்னமனூர் அருகேயுள்ளது மேகமலை. வன உயிரினச் சரணாலயமான மேகமலையில், யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் இருக்கின்றன. யானைகள் அடிக்கடி மேகமலையில் தென்படுவது வழக்கம். அவற்றைச் சுற்றுலாப் பயணிகளும் ரசிப்பர். யானைகளும் மனிதர்களை அச்சுறுத்தாது. இந்தநிலையில், கடந்த சில மாதங்களாகவே, வழக்கமாக மேகமலையில் உலாவும் யானைக் கூட்டங்களைத் தவிர்த்து, ஒற்றை ஆண் காட்டுயானை ஒன்று மக்கள் குடியிருப்புக்குள் உலாவருகிறது.

தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த மேகமலையில், தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பைக் குறிவைக்கும் காட்டு யானை, அடிக்கடி அங்கே வந்து உணவு தேடுவதும், வீடுகளைச் சேதப்படுத்துவதுமாக இருந்தது. குறிப்பாக, மேகமலையிலுள்ள மணலாறு, அப்பர் மணலாறு, இரவங்கலாறு, வெண்ணியாறு ஆகிய பகுதிகளில் ஒற்றையானை உலா வருகிறது.
இந்தநிலையில், கடந்த டிசம்பர் 15-ம் தேதி மணலாறு பகுதியில் 58 வயதான அம்மாவாசை என்பவரை யானை மிதித்துக் கொன்றது. அதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 23-ம் தேதி இரவு, அப்பர் மணலாறு பகுதியில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த முத்தையா, சத்தம் கேட்டு வெளியே வர, வீட்டு வாசலில், முத்தையாவை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். அடுத்தடுத்து நடந்த இரண்டு சம்பவங்களால், மேகமலைவாசிகள் அச்சமடைந்திருக்கும் நிலையில், சில நாள்களுக்கு முன்னர், இரவங்கலாறு பகுதியில் மூன்று வீடுகளை யானை சேதப்படுத்தியது.

இது தொடர்பாக, மேகமலை வன உயிரினச் சரணாலய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,``யானைக் கூட்டங்கள் மேகமலையில் இருக்கின்றன. ஒற்றை யானையின் நடமாட்டம் குறித்து கண்காணித்துக்கொண்டிருக்கிறோம். இனி அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது” என்றார்.
`தற்போது ஹைவேவிஸ் முதல் இரவங்கலாறு வரை சாலைப் பணிகள் நடந்துவருகின்றன. அமைதியாக இருந்த பகுதியில் சாலை வேலைகள் நடப்பதால், வன விலங்குகள் அச்சமடைந்திருக்கலாம். அதனால் குடியிருப்புப் பகுதிக்குள் வந்திருக்கலாம்’ என்கின்றனர் வன விலங்கு ஆர்வலர்கள்.