சிசிபிணவறையில் மாயமான உடல்:
புதுச்சேரி, வில்லியனூர் மனவெளிப் பகுதியில் வசிப்பவர் யோகநாதன். மூச்சுத்திணறல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவருடைய மனைவி குணவள்ளிக்கு வயது 43. கடந்த சில வருடங்களாக சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த இவருக்கு ஞாயிற்றுகிழமை மூச்சுத்திணறல் அதிகமானது. அதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் யோகநாதன். ஆனால், மருத்துவமனையின் வாசலிலேயே உயிரிழந்தார் குணவள்ளி. அதன் பிறகு கொரோனா பரிசோதனைக்காகத் தன் மனைவியின் உடலை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார் யோகநாதன். அங்கு குணவள்ளியின் உடலை கொரோனா சோதனைக்கு உட்படுத்திவிட்டு, பிணவறையில் வைத்திருந்தனர் மருத்துவமனை ஊழியர்கள்.

நேற்று காலை குணவள்ளியின் உடல் பரிசோதனையில் `கொரோனா நெகட்டிவ்’ என்று வந்திருந்த நிலையில், உடலை வாங்குவதற்காகச் சென்றிருக்கிறார் யோகநாதன். ஆனால் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த குணவள்ளியின் உடலைக் காணவில்லை. குணவள்ளியின் கணவர் யோகநாதனிடம் பேசினோம். ``நாமக்கல் மாவட்டத்துல இருக்குற காளிப்பட்டிதான் என் சொந்த ஊரு. பாண்டிச்சேரியில சிறுதொழில் பண்ணிக்கிட்டு இருக்கேன். ரெண்டு வருஷமா தோல்நோய்க்காக என் மனைவிக்குச் சிகிச்சை எடுத்துக்கிட்டிருந்தோம். நுரையீரலும் பாதிக்கப்பட்டிருந்ததால அவங்களுக்கு மூச்சுப் பிரச்னை ஏற்பட்டது. சென்னை அப்போலோ ஹாஸ்பிட்டல்ல ட்ரீட்மென்ட் எடுத்ததுக்கு அப்புறம் கொஞ்சம் சரியானாங்க. ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடி திடீர்னு மறுபடியும் மூச்சுத்திணறல் வந்துடுச்சு. ஏற்கெனவே டாக்டர் கொடுத்த மருந்தையும், நெபுலைஸரையும் வெச்சப்புறம் சரியானாங்க.
`என் கையைப் புடிச்சிக்கிட்டே அவ போயிட்டா...’
ஞாயிற்றுக்கிழமை மதியம் மறுபடியும் மூச்சுத்திணறல் வந்துடுச்சு. ஹாஸ்பிட்டலுக்கு போலாம்னு நான் சொன்னப்போ, `வேணாம் மாமா... ஞாயித்துக்கெழமை டாக்டருங்க இருக்க மாட்டாங்க. நான் தாங்கிக்கிறேன். நாளைக்கு காலையில போலாம்’னு சொன்னாங்க. ஆனா, அன்னைக்கு நைட் அவங்களுக்கு ரொம்ப முடியாமப் போயிடுச்சு. உடனே எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குற தனியார் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிக்கிட்டுப் போனேன். அங்கே செக் பணணின டாக்டருங்க `ஆக்சிஜன் கம்மியா இருக்கு’ன்னு சொல்லி, ஜிப்மர் ஹாஸ்பிட்டலுக்கு போகச் சொன்னாங்க. `ஐயோ... அவ்ளோ தூரம் இப்போ போக முடியாது. எதாவது பண்ணுங்க டாக்டர்’னு அழுது பார்த்தேன். அப்புறம் என்ன பண்றதுன்னு தெரியாம, பக்கத்துல இருக்குற இன்னொரு தனியார் ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிக்கிட்டு போனேன்.

அங்கே போனதும் டாக்டருங்க உடனே ஸ்ட்ரெச்சர் எடுத்துட்டு வந்தாங்க. ஆனா, என் மனைவியால காரைவிட்டு இறங்க முடியலை. `என்ன பண்ணுறது...’ன்னு டாக்டருங்க கேட்டாங்க. அப்போ என் கையைப் புடிச்சிக்கிட்டு `என்னால ரொம்ப முடியலை மாமா...’னு என் மனைவி சொல்லிக்கிட்டிருக்கும்போதே உசுரு போயிடுச்சி. எப்படியாவது காப்பாத்திடணும்னு அவ வாயில் என் வாயைவெச்சு ஊதிப் பார்த்தேன். ஆனா என் கையைப் புடிச்சிக்கிட்டே அவ போயிட்டா. டாக்டருங்க எவ்வளவோ முயற்சி பண்ணியும் காப்பாத்த முடியலை. மூச்சுப் பிரச்னை இருந்ததால, `கொரோனா டெஸ்ட்டுக்கு இந்திராகாந்தி கவருமென்ட் ஹாஸ்பிட்டலுக்குத்தான் உடம்பை அனுப்புவோம்’னு சொல்லிட்டாங்க. நேத்து காலையில (திங்கள் கிழமை) 6:15 மணிக்கு கதிர்காமம் ஹாஸ்பிட்டல்ல கொரோனா டெஸ்ட் எடுத்துட்டு மார்ச்சுவரியில உடம்பைவெச்சுக்கிட்டாங்க.
குணவள்ளியின் உடலுக்கு நடந்தது என்ன ?
நான் உசுருக்கு உசுரா நெனச்ச என் மனைவிகூட வாழத்தான் எனக்குக் கொடுத்துவெக்காமப் போயிடுச்சு. கொரோனா டெஸ்ட் ரிசல்ட், `பாசிட்டிவ்’னு வந்துட்டா, இத்தனை வருஷம் என்கூட வாழ்ந்த அவ உடம்பைக் கொடுக்க மாட்டாங்களேனு ராத்திரிபூரா தவிச்சிக்கிட்டு இருந்தேன். இன்னைக்குக் காலைல 6 மணிக்கே வந்து பார்த்தப்போ கொரொனா ரிசல்ட் `நெகட்டிவ்’னு இருந்துச்சு. சொந்த ஊருக்கு உடம்பை எடுத்துட்டுப் போறதுக்கு எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டேன். 11 மணிக்கு போலீஸ் வந்து தேடினப்போ மார்ச்சுவரியில என் மனைவி உடம்பு இல்லை. இன்னும் தேடிக்கிட்டுத்தான் இருக்காங்க. இதுவரைக்கும் கிடைக்கலை. எனக்கு இப்போ என் மனைவி வேணும். எனக்கு வேற எந்தச் சமாதானமும் வேணாம். என் மனைவி உசுரு பிரியுற வரைக்கும், `அவ உசிரு போயிடக் கூடாது’ன்னு கவலையா இருந்துச்சு. உசிரு போனதுக்கப்புறம், `உடம்பை நம்மகிட்ட குடுத்துடணுமே’ன்னு கவலையா இருந்துச்சு. கவருமென்ட் சொல்ற ரூல்ஸை மக்கள் கடைப்பிடிக்கும்போது, எங்க உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கணும்ல சார்? என் எதிரிக்குக்கூட இந்த நிலைமை வந்துடக் கூடாது” என்று கதறி அழுகிறார்.

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தன்னார்வலர்கள்தான் அடக்கம் செய்து வருகின்றனர். உறவினர்கள் அடையாளம் காட்டியதன் அடிப்படையில், உடலைத் தன்னார்வலர்களிடம் ஒப்படைப்பார்கள் மருத்துவமனை ஊழியர்கள். அதன்படி நேற்று கொரோனா தொற்றால் உயிரிழந்த தேங்காய்திட்டு பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஆனந்தாயியின் (70) உடலுக்கு பதிலாக, கொரோனா தொற்று இல்லாத குணவள்ளியின் உடலை எடுத்துச் சென்று எரித்துவிட்டார்கள். மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமும், பிணவறையில் அதிக அளவில் குவிந்துவரும் உடல்களும்தான் இந்தக் குழப்பத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்:
மருத்துவமனைக்கு வந்த உதவி ஆட்சியர் சுதாகர், ``தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக புகார் கொடுத்தால் அரசு சார்பில் விசாரணை நடத்தப்படும்’’ என்று உறுதியளித்தார். இது குறித்து விளக்கம் கேட்க மருத்துவமனையின் இயக்குநர் மாணிக்கதீபனை தொடர்புகொண்டபோது, ``விசாரணை செய்து கொண்டிருக்கிறோம். முடிந்தவுடன் விளக்கமாகக் கூறுகிறேன்” என்று முடித்துக்கொண்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒருவரின் உடலைச் சவக்குழிக்குள் தூக்கி வீசிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. `அந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு வாரத்துக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்’ என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருணுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது தேசிய மனித உரிமைகள் ஆணையம். இந்நிலையில் உடலை மாற்றி ஏரித்திருக்கும் விவகாரம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.