
உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 12

குழந்தை ஒன்று எழுந்து நடக்க முயற்சிக்கிறது. முதலில் குப்புறப்படுக்கிறது, தவழ்கிறது, எழுந்து நிற்க முயற்சிக்கிறது... தட்டுத்தடுமாறி நிற்கிறது. ஆனால், அதனால் பேலன்ஸ் செய்ய முடியவில்லை என்பதால், விழுந்துவிடுகிறது. விடாமல் முயற்சிக்கிறது... தொடர்ந்து எடுக்கும் முயற்சிகளின் பலனாக, நிற்கப் பழகிவிடுகிறது. இது எப்படி நிகழ்கிறது என்று நாம் யோசித்தது இல்லை. இவை எல்லாம் குழந்தை வளர்ச்சியில் ஒரு நிலை என்ற அளவிலேயே நினைக்கிறோம்.
உண்மையில், எழுவது, விழுவது என்ற முயற்சிகள் அத்தனையும் மூளையில் பதிவாகின்றன. இந்த கற்றலைக்கொண்டு, புதிய கட்டளை செயல்படுத்தப்படுகிறது. இப்படி, கொஞ்சம் கொஞ்சமாகக் குழந்தை நடக்கப் பழகுகிறது. அதுபோலத்தான், நாம் விளையாடும் விளையாட்டு, பயிற்சி என அனைத்தும் சிறுமூளையில் பதிவாகி, உடலை நிலைத்தன்மை அடையச்செய்து அதை எதிர்கொள்ளும் வகையில் தயார் செய்கிறது. இப்படி, உடலின் நிற்கும் திறன், இயக்கம், சமநிலை என அனைத்துக்கும் தொடர்புடைய சிறுமூளையைப் பற்றி இந்த இதழில் நாம் பார்க்கலாம்.
நம் மூளை மிகவும் சிக்கலான உறுப்பு. நம்மை இயக்கும், மற்ற உறுப்புக்களை ஒருங்கிணைக்கும், கண்காணிக்கும் பணியைச் செய்கிறது. மனித உடலே சிக்கலானது என்பதால், அதை நிர்வகிக்க மூளையில் பல அறைகள் அல்லது பிரிவுகள் உருவாகியிருக்கின்றன. ஒவ்வொரு பகுதியும் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்துவருகின்றன. இப்படி, மனிதனின் இயக்கத்தைத் தூண்ட, கண்காணிக்க, கட்டுப்படுத்த, மூளையில் இருக்கும் மிக முக்கியப் பகுதிதான் சிறுமூளை.

பெருமூளையின் மினியேச்சர் போல இருப்பதால், இதற்கு சிறுமூளை (Cerebellum)என்று பெயர். மூளையின் பின்புறத்தில் ஆக்சிபேட்டல் மற்றும் டெம்போரல் லோப்-க்கு கீழே பான்ஸ் மற்றும் மிட் பிரைனுக்கு அருகில் இது அமைந்திருக்கிறது. ஒட்டுமொத்த மூளையில், வெறும் 10 சதவிகிதம்தான் இதன் அளவு. ஆனால், ஒட்டுமொத்த நியூரான்களில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட நியூரான்கள் சிறுமூளையில்தான் இருக்கின்றன.
சிறுமூளையானது இயக்கம், சமநிலை, மொழி என மூன்று முக்கியப் பணிகளைச் செய்கிறது. ஆனால், இயக்கச் செயல்பாட்டு உத்தரவுகள் சிறுமூளையில் இருந்து பிறப்பிக்கப்படுவது இல்லை. மூளையின் இயக்கச் செயல்பாடுகளுக்கு, பொறுப்பான பகுதிகளில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை நெறிப்படுத்தி, செயல்படுத்தும் பணியை சிறுமூளை செய்கிறது. நாம் நடக்க வேண்டும்; ஒரு பொருளைத் தூக்க வேண்டும் என்றால், இதற்கான உத்தரவு மோட்டார் நியூரான் பகுதியில் பிறப்பிக்கப்படும். இந்த உத்தரவு, சிறுமூளைக்கு வருகிறது. இது, எந்தத் தசை இயங்க வேண்டும் என்று முடிவுசெய்து மின்னணுத் தூண்டுதல்களை ஏற்படுத்தி அந்தத் தசைக்கு அனுப்புகிறது. நம் இயக்கம் சீராக, பாதுகாப்பாக இருக்க காட்சித் தகவல்களையும் சிறுமூளை பயன்படுத்திக்கொள்கிறது. அருகில் உள்ள பொருட்கள், அசையும் அசையாப் பொருட்கள் என ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்து, மிகவும் பாதுகாப்புடன் உத்தரவுகளைச் செயல்படுத்துகிறது. இதற்காக, அது மிகப்பெரிய அளவில் கணக்கீடுகளைச் செய்கிறது. இந்தக் கணக்கீடுகளில் பிரச்னை என்றால், நம் இயக்கத்தில் அது வெளிப்படும்.

சிறுமூளைக்கு இந்தத் தகவல்கள் அனைத்தும் பெருமூளையில் இருந்து, நரம்புகள், தண்டுவடம் வழியாக வருகின்றன. அதைப் பொருத்து, நம் உடலின் பாதுகாப்பான இயக்கத்தை சிறுமூளை நெறிப்படுத்துகிறது. இதனால்தான், மூளையின் இந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு புத்திசாலித்தனம், உணர்ச்சிகள் உள்ளிட்டவற்றில் பாதிப்பு ஏற்படுவது இல்லை. ஆனால், இவர்களால் சரியாக நடக்க முடியாது. கை-காலில் நடுக்கம் இருந்துகொண்டே இருக்கும். எந்த ஒரு பொருளையும் இவர்களால் சரியாகக் கையாள முடியாது. கீழே போட்டுவிடுவார்கள்.
சிறுமூளையானது, நம் நிலைத்தன்மை, இயக்கம் மிகவும் மென்மையாக இருக்க தசைகளின் இயக்கத்தைத் தூண்டுகிறது. சிறுமூளையில் இருந்து அனுப்பப்படும் மின்னணுத் தூண்டல்கள், தசைகளைத் தூண்டி இயக்கம், அசைவுக்குக் காரணமாக இருக்கின்றன.
- அலசுவோம்!
நிலைத்தன்மைக்குக் காரணம்!
கீழே விழாமல் நடக்கிறோம் என்றால், அதற்கு சிறுமூளைதான் காரணம். சமதளத்தில் நம்மால் கீழே விழாமல் நடக்க முடிகிறது. இதுவே, ஒரு கம்பியில் நம்மால் தடுமாறால் நடக்க முடியுமா? சிறுமூளையால் அது சாத்தியப்படும். முதலில் தடுமாற்றம் ஏற்பட்டாலும், அதில் இருந்து சிறுமூளை பாடம் கற்றுக்கொண்டு, உடலை நிலைப்படுத்த ஆரம்பிக்கும். பின்னர் நம்மால் நிலையாகக் கம்பியின் மீது நடக்க முடியும். மோட்டார் நியூரான்களிடமிருந்து வரும் தகவலைப் பெற்று, தசைகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது. இதனால்தான், நம்மால் நிலையாக நிற்க, நடக்க முடிகிறது. இந்தப் பகுதியில் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நிலைத் தடுமாற்றம் இருக்கும். இயக்கம் தொடர்பான கற்றலுக்கும் சிறுமூளை மிகமிக அவசியம்.