
கண் ஒவ்வாமை

உடலின் வெளிப்புற உறுப்புகளில் சருமத்துக்கு அடுத்தபடியாகக் கண்களில்தான் அதிக ஒவ்வாமை ஏற்படுகிறது. மாசடைந்த சுற்றுச்சூழல், காற்றில் கலந்துவரும் மகரந்தம், வாகனப் புகை, சிகரெட் புகை, பலவகை தூசுகள் போன்றவை ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. அடுத்தபடியாக, கண்ணில் விழும் வேதிப் பொருட்கள், நச்சுப் பொருட்கள், கிருமிகள், அழகுசாதனப் பொருட்கள், முடிச்சாயம், மருந்து, வீட்டு விலங்குக் கழிவுகள், தூசு உண்ணிகள் (Dust Mites), கான்டாக்ட் லென்ஸ், பூச்சிக்கடி போன்றவையும் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.
என்ன காரணம்?
கண் இமைக்கு உட்புறம், விழிவெண்படலம் மற்றும் கண்ணைச் சுற்றி உள்ள பகுதிகளில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாஸ்ட் (Mast) அணுக்கள் உள்ளன. உடலுக்கு ஒவ்வாத ஒரு பொருள் கண்ணில் விழும்போது, அந்தப் பொருளை வெளியேற்ற ‘இம்யூனோகுளோபுலின் இ’ (IgE), ஐஜிஏ (IgA), அல்லது ஐஜிஎம் (IgM) எனும் எதிர்ப் புரதம் ரத்தத்தில் உருவாகிக் காத்திருக்கும். மீண்டும் அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும்போது, இது அதனுடன் கலந்து, வினைபுரிந்து, மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக, மாஸ்ட் செல்கள் ‘ஹிஸ்டமின்’, ‘லுயூக்கோட்ரின்’ (Leukotriene) எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றும். இவை, ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து, அங்கு உள்ள நரம்புமுனைகளைத் தாக்கும். அதன் விளைவால், கண்ணில் அரிப்பு ஏற்படுவது, நீர் வடிவது உள்ளிட்ட ஒவ்வாமைக் குணங்கள் உண்டாகின்றன. கண் ஒவ்வாமையில் நான்கு வகை எதிர்வினைகள் ஏற்பட்டு, பலதரப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கே காண்போம்.
இமை ஒவ்வாமை
கண் ஒவ்வாமையின் முக்கிய அறிகுறி, இமை வீக்கம். இது திடீரெனத் தோன்றும். ஒரு கண்ணிலோ இரண்டு கண்களிலோ ஏற்படலாம். வீக்கத்தில் அரிப்பு உண்டாகலாம், ஆனால் வலி இருக்காது. வீக்கத்தைத் தொட்டால், அந்த இடத்தில் குழி விழும். பெரும்பாலும், ஒவ்வாமைத் தோல் அழற்சி (Atopic Dermatitis) காரணமாக இமை வீக்கம் ஏற்பட்டால், தோல் சிவந்து தடிக்கும். அரிப்புடன்கூடிய கொப்புளங்களும் நீர்க்கசிவும் காணப்படும். கொப்புளங்கள் சரியானதும் பக்கு கட்டி, தோல் உரியும்.

திடீர் விழிவெண்படல ஒவ்வாமை நோய் (Acute Allergic Conjunctivitis)
மகரந்தங்கள், விழிவெண்படலத்தில் நேரடியாகப்படுவதால் ஒவ்வாமை உண்டாகும்.பெரும்பாலும், வசந்த காலங்களில் இந்த நோய் அதிகமாகப் பாதிக்கிறது. திடீரெனக் கண்களில் அரிப்பு, கண் எரிச்சல், நீர் வடிவது, கண்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறுவது, வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் போவது, மூக்கு ஒழுகுதல், மூக்கு அடைத்தல், அடுக்குத் தும்மல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
வசந்த கால கருவிழிவெண்படல அழற்சி நோய் (Vernal keratoconjunctivitis)
இது குழந்தைகளையும் இளம் வயது ஆண்களையும் பாதிக்கின்ற நோய். மகரந்தம், தூசுகள் படுவதால், இந்த நோய் ஏற்படுகிறது. மேலே சொல்லப்பட்ட அறிகுறிகளுடன், கண்ணுக்குள் மண் சிக்கிக்கொண்ட நெருடலும் உறுத்தல் உணர்வும் இருக்கும். கண்ணில் பீழை தள்ளும். கருவிழி ஓரங்களில் புண்கள் உண்டாகி, வெள்ளை நிறப்புள்ளிகள் தெரியும்.
பரம்பரைக் கருவிழிவெண்படல அழற்சி நோய் (Atopic keratoconjunctivitis)
பரம்பரை காரணமாக வயதில் மூத்தவர்களுக்கு, ஆஸ்துமா, தோல் அழற்சி உள்ளவர்களுக்கு இது பெரும்பாலும் வருகிறது. ஆண்டு முழுவதும் இது வரக்கூடும். கடுமையான அரிப்பும் எரிச்சலும் உண்டாகும். கருவிழியின் மத்தியில் புண் உண்டாகி, தழும்பு விழுந்து, பார்வையைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானது.
ஜயன்ட் பாப்பிலரி விழிவெண்படல அழற்சி நோய் (Giant Papillary Conjunctivitis)
கண்ணில் நீண்ட காலம் கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்களுக்கு, லென்ஸில் படியும் சில புரதப் பொருட்களின் ஒவ்வாமையாலும் இது ஏற்படலாம். கண்கள் வீங்குதல், அரிப்பு, எரிச்சல், வெள்ளை நிறத்தில் பீழை தள்ளுதல், உறுத்தல் உணர்வு போன்ற அறிகுறிகள் இருக்கும். காலையில் எழுந்திருக்கும்போது அதிகப் பீழை சுரந்து, இமைகள் மூடிக்கொள்ளும்.
பரிசோதனை
கண் பரிசோதனை செய்தாலே, கண் ஒவ்வாமையை உறுதிசெய்துவிடலாம். சிலருக்கு விழிவெண்படலத்தைச் சுரண்டி சிறிதளவு செல்களை எடுத்துப் பரிசோதனை செய்வதும் உண்டு. இவற்றோடு ஒவ்வாமைக்கான பொதுவான ரத்தப் பரிசோதனைகள், குறிப்பிட்ட ஆன்டிஜனுக்கான ஐஜிஇ அளவு (Allergen specific serum IgE), ரேடியோ அலர்கோசார்பென்ட் பரிசோதனை (Radioallergosorbent Test (RAST), தோல் பரிசோதனை, பட்டைப் பரிசோதனை ஆகியவையும் செய்யப்படும்.
சிகிச்சை?
நோயைப் பொறுத்து சிகிச்சை அமையும். செயற்கைக் கண்ணீர் சொட்டு மருந்துகளைத் தற்காலிகமாக கண்ணில் விடலாம். இதனால், அலர்ஜிப் பொருள் உடனே கண்ணில் இருந்து விலகிவிடும்.
ஆன்டிஹிஸ்டமின், டீகன்செஸ்டன்ட் மற்றும் ஸ்டீராய்டு கண் சொட்டு மருந்துகள் அலர்ஜிக் குணங்களைக் குறைக்க உதவும். சிலருக்கு வலி நிவாரணி சொட்டு மருந்துகளும் தேவைப்படும். இதைத் தொடர்ந்து, அலர்ஜிக்கான அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்கு மாத்திரைகள் சாப்பிடலாம். மாஸ்ட் செல்களை நிலைபெறச் செய்யும் (Mast Cell Stabilizers) களிம்புகள் மற்றும் சொட்டு மருந்துகள், லுயூக்கோட்ரின் மாற்று மருந்துகள் (Leukotriene Modifiers) ஆகியவற்றைத் தடுப்பு மருந்தாக, டாக்டர் கூறும் கால அளவுக்குத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த அலர்ஜியின் பாதிப்பு மீண்டும் வராமல் இருக்கும்.
அடிக்கடி கண்ணில் அலர்ஜி ஆகிறவர்களுக்கு ‘இம்யூனோதெரப்பி’ சிகிச்சை தரப்படும்.
- எதிர்வினை தொடரும்
படம்: சி.சுரேஷ் பாபு
அலர்ஜி டேட்டா!
*இந்தியாவில் 100-ல் 20 பேருக்குக் கண் ஒவ்வாமை உள்ளது.
*தோல் ஒவ்வாமை உள்ளவர்களில் 100-ல் 72 பேருக்குக் கண் ஒவ்வாமை ஏற்படுகிறது.
*சுயமாகக் கண்ணுக்குச் சொட்டு மருந்து பயன்படுத்துவோருக்கு கண்ணில் ஒவ்வாமை ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
கண் அலர்ஜியைத் தடுப்பது எப்படி?
*அலர்ஜி ஆகும் பொருட்களை நெருங்கவிடக் கூடாது.
*கைகளை சோப்பு, கிருமிநாசினி பயன்படுத்திக் கழுவிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
*படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகளை வாரம் ஒருமுறை வெந்நீரில் ஊறவைத்துத் துவைக்க வேண்டும். தூசு, உண்ணிகள் சேராமல் தடுப்பதற்கெனப் பிரத்யேக உறைகள் உள்ளன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.
*வளர்ப்புப் பிராணிகளைத் தொட்டுத் தூக்க வேண்டாம். அவை படுக்கை அறைக்கு வருவதையும் தவிர்க்க வேண்டும்.
*ஹெப்பா ஃபில்ட்டர் (HEPA filter) பொருத்தப்பட்ட வாக்குவம் க்ளீனர்கள் மூலம் சோபாக்கள், மிதியடிகள், படுக்கை விரிப்புகளைச் சுத்தப்படுத்தலாம்.
*வீட்டில், காரில் ஏசி போட்டுக்கொண்டால், தூசுகள் காற்றில் பரவுவது குறையும்.
*பூக்கள் பூக்கும் காலங்களில், காலை நேரங்களில் ஜன்னல்களுக்குத் திரைச் சீலைகளைப் போட வேண்டும்.
*வெளியில் செல்லும்போது கண்ணாடி (Plain glass) அணிய வேண்டும்.
*வீட்டுச் சுவர்கள், சமையலறை மற்றும் கழிப்பறைச் சுவர்களில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக்கொள்வதன் மூலம் பூஞ்சைகள் வளர்வதைத் தடுக்கலாம்.