மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாடர்ன் மெடிசின்.காம் - 5 - பித்தக்குழாய் அடைப்புக்குப் புதிய சிகிச்சை!

மாடர்ன் மெடிசின்.காம் - 5 - பித்தக்குழாய் அடைப்புக்குப் புதிய சிகிச்சை!
பிரீமியம் ஸ்டோரி
News
மாடர்ன் மெடிசின்.காம் - 5 - பித்தக்குழாய் அடைப்புக்குப் புதிய சிகிச்சை!

கு.கணேசன், பொதுநல மருத்துவர்

ண் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுகிறது. பசி குறைந்துவிட்டது. வாந்தி வருகிறது. இந்த அறிகுறிகள் தோன்றினாலே, அது மஞ்சள் காமாலையாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் நினைப்பது சரிதான். ஆனால், எல்லோரும் நினைக்கிற மாதிரி  மஞ்சள் காமாலை என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல; அது ஓர் அறிகுறி மட்டுமே!

மாடர்ன் மெடிசின்.காம் - 5 - பித்தக்குழாய் அடைப்புக்குப் புதிய சிகிச்சை!



காமாலை எப்படி ஏற்படுகிறது?

கல்லீரல் பித்தநீரைச் (Bile) சுரக்கிறது. இது கொழுப்பு உணவு செரிமானத்துக்கு உதவுகிறது. இதன் நிறம் மஞ்சள். காலாவதியாகிப் போன ரத்தச் சிவப்பு அணுக்கள் மண்ணீரலில் (Spleen) சாகடிக்கப்படுகின்றன. அப்போது ஒவ்வொரு ரத்த அணுவும் ஹீம் (Haeme), குளோபின் என இரண்டாக உடைகிறது. ஹீமிலிருந்து ‘பிலிருபின்’ (Bilirubin) என்ற ‘பித்த நிறமி’ தினமும் 300 கிராம் வரை உற்பத்தியாகிறது. இதன் நிறமும் மஞ்சள். இது ஒரு விஷப் பொருள். இதே அளவில் இது ரத்தத்தில் தங்கினால் உயிருக்கு ஆபத்து. எனவே, இதைப் பித்தநீருடன் கலக்கிறது, கல்லீரல். இதனால் பித்தநீர் மஞ்சள் நிறமாகிறது.

பித்தநீர் குடலுக்குச் செல்லும்போது அதனுடன் பிலிருபினும் சேர்ந்து சென்று, பித்த உப்பாக மாறி மலத்தில் வெளியேறுகிறது. மிச்சமுள்ளது ரத்தம் வழியாகச் சிறுநீரகத்துக்குச் சென்று சிறுநீரில் வெளியேறுகிறது. இம்மாதிரியான சுத்தப்படுத்தும் சுழற்சியால் பிலிருபினின் அளவு 0.2 - 0.8 மி.கி./ டெசி லிட்டர் என அடங்கிவிடுகிறது. அதேநேரம் கல்லீரலில் நோய்த்தொற்று, புற்று, பித்தநீர்ப் பாதையில் கல் அடைப்பு என்பன போன்ற காரணங்களால் ரத்தத்தில் பிலிருபின் அளவு அதிகரித்துவிடும். அப்போது பாதிக்கப்பட்ட அந்த நபர்களுக்குக் கண், நகம், சிறுநீர் எல்லாமே மஞ்சளாகத் தெரியும். இதுதான் ‘மஞ்சள் காமாலை’!

காமாலை வகைகள்

காமாலையில் பல விதம் உள்ளது. ‘தொற்றுக் காமாலை’ (Infective jaundice) முதல் வகை. இது வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளால் வருகிறது. ஹெபடைட்டிஸ் - ஏ மற்றும் பி வகை காமாலைகளை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம். ‘ரத்த அழிவுக் காமாலை’ (Haemolytic jaundice) என்று ஒரு வகை இருக்கிறது. ரத்தச் சிவப்பணுக்கள் அளவுக்கு மீறி அழிந்து போவதால் வருகிற காமாலை. ரத்தவகை ஒவ்வாமை, கடுமையான மலேரியா, தலசீமியா போன்ற நோய்களின்போது இது ஏற்படுகிறது.

‘அடைப்புக் காமாலை’ (Obstructive jaundice)  என்று இன்னொரு வகை இருக்கிறது. கல்லீரலில் சுரக்கிற பித்தநீர் பித்தப்பைக்கு வந்து சிறிதுநேரம் தங்குகிறது. பிறகு, பித்தக்குழாய் வழியாக முன் சிறுகுடலுக்கு வந்து சேருகிறது. இந்தப் பாதை சரியாக இருந்தால்தான் பித்தநீர் குடலுக்கு வந்து கொழுப்பு உணவைச் செரிக்கும். சில சமயங்களில் இந்தப் பாதை அடைத்துக் கொள்ளும், அப்போது பித்தநீர் ரத்தத்தில் கலந்துவிடும். இதனால் மஞ்சள் காமாலை வரும். இதுதான் அடைப்புக் காமாலை.

மாடர்ன் மெடிசின்.காம் - 5 - பித்தக்குழாய் அடைப்புக்குப் புதிய சிகிச்சை!

என்ன காரணம்?

பித்தநீர்ப்பாதை அடைத்துக்கொள்வதற்குப் பித்தப்பையில் இருக்கிற கற்கள் அல்லது புற்றுநோய் காரணமாகலாம்; பிறவியிலேயே பித்தக்குழாய் அமைப்பில் குறைபாடு இருக்கலாம்; பித்தக்குழாய் அழற்சி மற்றும் கணைய அழற்சியின்போதும் இம்மாதிரி அடைப்பு ஏற்படலாம்; இந்த அடைப்பினால் பித்தநீர் குடலுக்குச் செல்ல முடியாமல் ரத்தத்தில் கலந்து காமாலையை ஏற்படுத்தும். கணையத்தில் அழற்சி, கட்டி, புற்றுநோய் போன்றவை காணப்பட்டாலும் இம்மாதிரியான காமாலை ஏற்படுவதுண்டு.

சிகிச்சை என்ன?

அடைப்புக் காமாலைக்கு மருந்து, மாத்திரை, பச்சிலைச் சாறு என எதுவும் தீர்வு தருவதில்லை. அறுவை சிகிச்சையால் மட்டுமே அதைக் குணப்படுத்த முடியும்.

முன்பெல்லாம் பித்தப்பைக் கற்களை அகற்றுவதற்கு வயிற்றைக் கிழித்துப் பொது  அறுவை சிகிச்சை செய்து கற்கள் உள்ள பித்தப்பையையே வெளியில் எடுத்துவிடுவது வழக்கம். இதற்குப் பத்து நாள்கள் வரை நோயாளி மருத்துவமனையில் தங்க வேண்டும். அறுவை சிகிச்சை வலி, வயிற்றில் நீண்ட தழும்பு ஏற்படுவது, பணிக்குத் திரும்புவதில் கால தாமதம் போன்ற பிரச்னைகள் இதில் இருந்தன. அதற்குப் பிறகு நுண்துளை அறுவை சிகிச்சை (Laparoscopic surgery) நடைமுறைக்கு வந்தது. வயிற்றில் மூன்று துளைகள் மட்டும் போட்டு மேற்கொள்ளப்படுகிற அறுவை சிகிச்சை இது. பித்தப்பை பிரச்னைகளுக்குத் தற்போது அதிகமான பயன்பாட்டில் உள்ள சிகிச்சை இதுதான். அறுவை சிகிச்சையை விரும்பாதவர்களுக்கு ERCP எனும் சிகிச்சை மேற்கொள்ளப்படுவது அடுத்த கட்ட முன்னேற்றம்.

இப்போது இதைவிட மேலான சிகிச்சை ஒன்று மருத்துவத்துறைக்குள் நுழைந்துள்ளது. அதற்கு ‘ஸ்பைகிளாஸ் கொலாஞ்சியோ பேங்கிரியாட்டோஸ்கோப்பி’ (SpyGlass cholangiopancreatoscopy) என்று பெயர். ERCP எனும் சிகிச்சையின் அடுத்த கட்ட முன்னேற்றம் என்று இதை மருத்துவர்கள் சொல்கிறார்கள். இதை மேற்கொள்வதற்கு அறுவை சிகிச்சையே தேவையில்லை என்பது இதன் கூடுதல் பலன்.

வலி இல்லாத புதுமை சிகிச்சை!

‘கொலாஞ்சியோ பேங்கிரியாட்டோஸ் கோப்பி’ என்பது எண்டோஸ்கோப்பியில் ஒருவகை. சுமார் 9 மில்லிமீட்டர் சுற்றளவுள்ள ஒரு நீண்ட குழாய் இது. பிவிசி ரப்பர் குழாயில் பல அடுக்கு மின்சார வயர்களைச் செலுத்தியிருப்பதைப்போல இதனுள், வெளிச்சம் செலுத்த, காட்சிகளைப் பிரதிபலிக்க, அடைப்பு ஏற்பட்டால் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்க, காற்றைச் செலுத்த, கட்டியைச் சாம்பிள் எடுக்க என்று அடுக்கடுக்கான வேலைகளைச் செய்ய பல வயர் அமைப்புகள் உள்ளன. கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும் இக்கருவியை மருத்துவர் வெளியில் இருந்தபடியே இயக்குவார். உணவுப்பாதையில் என்ன பிரச்னை உள்ளது என்பதைக் கண்ணால் நேரடியாகப் பார்க்க இந்தக் கருவிக்குள்  இருக்கின்ற ஃபைபர் ஆப்டிக் கண்ணாடித் தொகுப்புகள் தரும் வெளிச்சம் உதவுகிறது.

வாய்வழியாக இந்தக் குழாயை உள்ளே அனுப்பிவிட்டு, கார் ஸ்டீயரிங்கைத் திருப்புவதைப்போல, வெளியில் இருக்கும் ஸ்விட்சைத் திருப்பி ‘நேராகச் செல்’. ‘இடதுபுறம் திரும்பு’, ‘வலதுபுறம் திரும்பு’ ‘வளை’ ‘குனி’ ‘நிமிர்’ என்று கட்டளை பிறப்பிப்பார். உணவுக்குழாயிலிருந்து இரைப்பை, முன்சிறுகுடல் வரைக்கும் பல வளைவுகள் இருக்கின்றன. இந்தக் கருவி இவற்றை எல்லாம் கடந்து பித்தக் குழாய் வழியாக பித்தக் கற்கள் உள்ள பித்தப்பையை அடைந்ததும், மின்நீர்க் கதிர்களைச் (Electrohydraulic lithotripsy) செலுத்தி, அந்தக் கற்களை நொறுக்கி, கற்களின் துகள்களை உறிஞ்சி வெளியில் எடுத்துவிடுவார்கள். இதனால் பித்தநீர்ப் பாதை சரிசெய்யப்படும். இதன் பலனாக மஞ்சள் காமாலை முற்றிலும் சரியாகிவிடும்.

இந்தக் கருவியால் இன்னுமொரு நன்மையும் உண்டு. அதாவது, பித்தப்பையிலோ, பித்தநீர்ப் பாதையிலோ புற்றுநோய் இருப்பதாகச் சந்தேகப்பட்டால், எண்டோஸ்கோப் கருவியின் உள் முனையில் இடுக்கி மாதிரி ஒரு கருவியை அனுப்பி அந்த இடத்தில் உள்ள திசுவிலிருந்து சிறிய அளவில் சாம்பிள் வெட்டி எடுத்து அதைப் பரிசோதித்து, அது புற்றுநோய்தானா அல்லது  வேறு ஏதாவதா என்று நோயாளிக்கு உள்ள பிரச்சினையை மிகத் துல்லியமாகச் சொல்லிவிட முடியும். இந்த நவீன சிகிச்சை இப்போது சென்னையிலும் மேற்கொள்ளப்படுகிறது.

 (தேடுவோம்)

யாருக்குப் பயன்படும்?

* பித்தக் குழாயில் கல், கட்டி, புற்றுநோய் இருப்பவர்களுக்கு.

* பித்தக் குழாயில் அழற்சி, அடைப்பு உள்ளவர்களுக்கு.

* பித்தப்பைக் கற்கள் அல்லது புற்றுநோய் உள்ளவர்களுக்கு.

* பித்தப்பையில் புற்றுநோய் உள்ளவர்களுக்கு.

* பித்தப்பையில் அழற்சி, அடைப்பு உள்ளவர்களுக்கு.

* கணையத்தில் அழற்சி, கட்டி, புற்றுநோய் உள்ளவர்களுக்கு.

* கணையக் குழாயில் சுருக்கம் அல்லது அடைப்பு உள்ளவர்களுக்கு.