
வெங்கட கார்த்திகேயன், காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர்ஹெல்த்
உணவு, நீர், காற்று என அனைத்தையும் உடலுக்குள் அனுப்புவது தொண்டை. தொண்டையில் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், அவற்றை எப்படி எதிர்கொள்வது என்றும் விளக்குகிறார் காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் வெங்கட கார்த்திகேயன்.

* ஒவ்வாமை, வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று, சைனஸ், அசிடிட்டி காரணமாக அடிக்கடி தொண்டை வலி ஏற்படும். சிலர் அதற்காக ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்வார்கள். உண்மையில் எல்லாவிதமான தொண்டை வலிகளுக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள் தீர்வல்ல. முறையான காரணமறிந்து, அதற்கேற்ப சிகிச்சை எடுக்காவிட்டால், பிரச்னை தீவிரமாக வாய்ப்புண்டு.

* சிலருக்குக் குரலில் பிரச்னை இருக்கும். அப்படியிருந்தால் சத்தமாகவோ, தொடர்ச்சியாகவோ பேசவேண்டாம். ஆசிரியர்கள், பேச்சாளர்களுக்கு இதுபோன்ற இக்கட்டான சூழல் ஏற்படலாம். இப்படி பாதிக்கப்படுபவர்கள், அந்தச் சூழலுக்கு முன்னும் பின்னும் குரலுக்கு முழு ஓய்வு கொடுக்கவும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீரே தொண்டைக்குச் சிறந்த மருந்து!
* சிலருக்குத் தொண்டைக் கரகரப்பு, அமிலப் பிரச்னை அதிகம் ஏற்படும். இவர்கள் தொண்டையைச் சுத்தமாக வைத்திருப்பதாக நினைத்து, அடிக்கடி வாய் கொப்பளிப்பார்கள். `மவுத் வாஷ்’ பயன்படுத்துவார்கள். உண்மையில் தொண்டைக் கரகரப்பு, அடிக்கடி எதுக்களித்தல், நெஞ்செரிச்சல் போன்றவை நோய் பாதிப்புகளின் அறிகுறிகள். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

* மனித உடலில் அனைத்து எலும்புகளும், ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். ஆனால், தொண்டையிலுள்ள ஹையாட் (Hyoid Bone) எலும்பு மட்டும் இதற்கு விதிவிலக்கு. தொண்டைப் பகுதி அதன் வடிவத்தைப் பெற இந்த எலும்பு மிகவும் முக்கியமானது.
* மாறிவரும் வாழ்க்கைமுறையால், பலருக்கு இரவுத் தூக்கமே இல்லை. இதுபோன்ற வாழ்வியல் மாற்றங்கள் ஒருவிதமான அமிலப் பிரச்னையை ஏற்படுத்தும். அதாவது, வயிற்றுப்பகுதியில் இருக்கும் அமிலங்கள், தொண்டையை நோக்கி நகர்ந்து எரிச்சலை ஏற்படுத்தும். அப்போது வறண்ட இருமல், விழுங்குவதில் சிக்கல், தொண்டைக் கரகரப்பு போன்ற அறிகுறிகள் தென்படும்.
* குறட்டை ஓர் அபாய மணி. தூங்கும்போது உடலுக்கு ஆக்சிஜன் செல்வது தடைப்படுவதால் ஏற்படும் மூச்சுத்திணறலே குறட்டை. இதைக் கண்டுகொள்ளாமல் விட்டால், `ஸ்லீப் ஆப்னியா’ (Sleep Apnea) எனப்படும் தூக்கக் குறைபாடு நோய் ஏற்படக்கூடும். மேலும் ரத்த அழுத்தம், இதய பாதிப்புகள், பக்கவாதமும் ஏற்படலாம்.
-ஜெ.நிவேதா