
சி.பி.ராஜ்குமார், சர்க்கரை நோய் மருத்துவர்ஹெல்த்
எவ்வளவு கவனமாக சாலை விதிகளைப் பின்பற்றி வாகனம் ஓட்டினாலும், எதிரே வருபவர் ஒழுங்காக வராவிட்டால் அது விபத்துக்குக் காரணமாகிவிடும். வாகனம் என்பதும் ‘கில்லிங் மெஷின்’தான். அதை இயக்க உடலும் மனமும் ஒத்துழைக்க வேண்டும். குறிப்பாக, சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்கள் மிகவும் கவனமாக வாகனங்களை ஓட்ட வேண்டும். சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் வாகனங்களை இயக்குவதில் எதிர்கொள்ளும் சவால்களையும், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் விவரிக்கிறார் சர்க்கரை நோய் மருத்துவர் சி.பி.ராஜ்குமார்.
“சர்க்கரை நோயாளிகள் வாகனங்கள் ஓட்டவே கூடாது என்று சிலர் பயமுறுத்துவார்கள். அது தவறு. இன்சுலின் எடுத்துக்கொள்ளவேண்டிய நிலையில் இருப்பவர்களும் பேருந்து முதல் லாரி வரை பல்வேறு வாகனங்களை ஓட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சில கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் கடைப்பிடித்தால் பாதுகாப்பான பயணம் சாத்தியமே.

ஹைப்போகிளைசீமியா (Hypoglycemia)
சர்க்கரை நோயாளிகளுக்குத் திடீரெனச் சர்க்கரை அளவு குறையும். அதை ‘ஹைப்போகிளைசீமியா’ என்பார்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 70 மில்லி கிராமுக்குக்கீழே செல்லும்போது ஏற்படும் நிலையே ஹைப்போகிளைசீமியா. இந்த நிலை ஏற்பட்டால் உடனடியாக மயக்கம் வரும். சர்க்கரை நோயுள்ளவர்கள் குறைவான உணவை எடுத்துக் கொள்வதாலும், வழக்கத்துக்கு மாறாக அதிக நேரம் உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பு செய்வதாலும் இந்த நிலை ஏற்படலாம்.

அதிகப்பசி, வியர்வை, பார்வை மங்குதல், உடல் நடுக்கம், பதற்றம், படபடப்பு, பின்னந்தலையில் வலி போன்றவை இதன் அறிகுறிகள். சில நேரங்களில் வலிப்பும் ஏற்படலாம். நீண்டநாள் சர்க்கரை நோயாளிகளுக்கு நரம்பு பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு. இதற்கு எந்த அறிகுறியும் தெரியாது, நேரடியாக மயக்க நிலைக்கே கொண்டு சென்றுவிடும். இதை, ‘ஹைப்போகிளைசீமியா அன்அவேர்னெஸ்’ (Hypoglycemia Unawareness) என்பார்கள். இது ஓட்டுநருக்கும், அவரை நம்பியிருக்கும் பயணிகளுக்கும் மிகவும் ஆபத்தானது.
டயாபடிக் ரெட்டினோபதி (Diabetic Retinopathy)
சர்க்கரை நோயாளிகள் அதிகம் சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று சர்க்கரை நோய் விழித்திரை பாதிப்பு. கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோயால், விழித்திரை பாதிக்கப்படுவதை ‘டயாபடிக் ரெட்டினோபதி’ என்பார்கள். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிரிக்கும்போது, விழித்திரைக்குச் செல்லும் நுண்ணிய ரத்தக்குழாய்கள் பாதிக்கப்படும். ரத்தக் கசிவும் ஏற்படலாம். அதனால் பார்வை மங்கலாகத் தெரியும். ஒரு கட்டத்தில், விழித்திரை முழுவதையும் மறைக்கும் அளவுக்கு ரத்தக் கசிவு ஏற்படும். இதனால், பார்வையே பறிபோகலாம்.

இதன் ஆரம்பநிலையில் அறிகுறிகள் தெரியாது. வழக்கமான கண் பரிசோதனைக்குச் சர்க்கரை நோயாளிகள் செல்லும்போது இதற்கான பரிசோதனையையும் சேர்த்துச் செய்தால், தொடக்கத்திலே பாதிப்பைக் கண்டறிந்துவிடலாம். சர்க்கரை நோயாளிகள் ஆண்டுக்கொருமுறை கண்களைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பார்வையில் ஏதேனும் சிறு குறைபாடு இருப்பதை உணர்ந்தாலும், கண் அழுத்த அளவைப் பரிசோதிக்க வேண்டும். சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம், டயாபடிக் ரெட்டினோபதியின் தீவிரத்தைத் தடுக்க முடியும். அறுவைசிகிச்சை மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வாக அமையும். இப்போது நவீன லேசர் சிகிச்சையும் வந்துவிட்டது.
டயாபடிக் நியூரோபதி (Diabetic Neuropathy)
சர்க்கரை நோய் உள்ள வாகன ஓட்டுநர்களுக்கு நரம்புகளில் பாதிப்பு ஏற்படலாம். கைகால்கள் மரத்துப் போகலாம். இதற்கு `டயாபடிக் நியூரோபதி (Diabetic Neuropathy)’ என்று பெயர். இதில் இரண்டு வகை உள்ளன. கால்களில் மதமதப்பு, அடிக்கடி மரத்துப் போதல் அல்லது உணர்ச்சி இல்லாமல் போகும் நிலைக்கு ‘சென்ஸரி நியூரோபதி’ (Sensory Neuropathy) என்று பெயர். இதனால், கால்களில் சீரான உணர்ச்சிகள் இல்லாமல் போகும். ஆக்ஸிலேட்டர் எவ்வளவு கொடுக்கிறோம், பிரேக்கை எவ்வளவு அழுத்துகிறோம் என்பது தெரியாமல் போவதால் விபரீதமானச் சூழலுக்கு வழிவகுத்துவிடும்.
கால்கள் அல்லது கைகளில் வலிமை குறைந்துபோவதற்கு `மோட்டார் நியூரோபதி’ (Motor Neuropathy)’ என்று பெயர். இப்படிப்பட்ட சூழலில் வாகனம் ஓட்டுவதே சிரமமாகிவிடும். மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகே வாகனம் ஓட்ட வேண்டும். சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். பாதிப்புள்ளவர்கள் சர்க்கரை நோய் மருத்துவர் மற்றும் நரம்பியல் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- ஜி.லட்சுமணன்
வாகனத்தை இயக்கும்முன் கவனம்!
சர்க்கரை நோயாளிகள் வாகனம் ஓட்டுவதற்கு முன்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை அளவை குளுக்கோமீட்டரில் கண்டுபிடித்து உறுதி செய்துகொள்ள முடியும். எனவே, எப்போதும் குளூக்கோமீட்டரைக் கையில் வைத்திருக்க வேண்டும். நீண்டதூரம் வாகனம் ஓட்ட வேண்டியிருந்தால், இரண்டும் மணி நேரத்துக்கு ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
சர்க்கரை அளவு குறைவதற்கான அறிகுறிகள் இருந்தால், குளுகோஸ் கரைசலோ, சர்க்கரைக் கரைசலோ, இனிப்புகளோ உட்கொள்ள வேண்டும். சாக்லேட் சாப்பிடுவது உடனடியாகப் பயன்தராது. அது செரிமானமாகி ரத்தத்தில் கலக்க நேரமாகும். அடிக்கடி இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்.