மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 16

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 16
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 16

டி.நாராயண ரெட்டி, செக்ஸாலஜிஸ்ட்ஹெல்த்

ணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் கவரப்பட்டுக் காதல்கொண்டு உறவில் இணைவதே ஓரினச்சேர்க்கை. இதற்கும், ஆண்-பெண் உறவுக்கும் பெரியளவில் வேறுபாடில்லை. உணர்வு ரீதியாக இரண்டும் ஒன்றுதான். ஓரினச்சேர்க்கை குறித்து சமூகத்தில் பல தவறான கருத்துகள் உலவுகின்றன. ‘இது ஒரு மனநோய்’, ‘இது இயற்கைக்கு முரணானது’, ‘இவர்களுக்கு ஹெச்.ஐ.வி வரும்’ - இப்படிப் பல கருத்துகள்!

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377, ‘ஓரினச்சேர்க்கை போன்ற இயற்கைக்கு முரணான உடலுறவுகளில் ஈடுபடுவது குற்றச்செயல், இந்தக் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்குத் தண்டனை கொடுக்கலாம்’ என்கிறது. இது, 1857-ம் ஆண்டு இங்கிலாந்து அரசால் கொண்டுவரப்பட்ட சட்டம். அதைத்தான் இன்றுவரை இந்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. இது தொடர்பான வழக்குதான் இப்போது உச்சநீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது.

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 16

ஓரினச்சேர்க்கை என்பது, மனநோய் கிடையாது. அமெரிக்க உளவியல் சங்கம், 1978-ம் ஆண்டே மனநலப் பிரச்னைகள் பட்டியலிலிருந்து இதை நீக்கிவிட்டது. உலகம் முழுவதும் இருக்கும் மருத்துவர்கள், ‘இது இயல்பானதுதான்’ என்றும், `மாற்று உடலுறவு’ (Alternative Sexual Orientation) என்றும் கூறுகிறார்கள். உலகின் பல நாடுகளில் ஓரினச்சேர்க்கையை அங்கீகரித்திருக்கிறார்கள்.ஹெச்.ஐ.வி என்பது உடலுறவு கொள்ளும் இருவரில், யாராவது ஒருவருக்கு இருந்தால்தான் மற்றவருக்குப் பரவும். ஓரினச்சேர்க்கைக்கும் ஹெச்.ஐ.வி-க்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. இதுவரை நடந்திருக்கும் மருத்துவ ஆராய்ச்சியில், ‘ஓரினச்சேர்க்கையைவிட சாதாரண பாலியல் உறவு மூலமாகவே அதிகம் பேருக்கு ஹெச்.ஐ.வி பரவியிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஓரினச்சேர்க்கைக்கும் நாட்டில் நடக்கும் குற்றச் சம்பவங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இயல்பான பாலியல் உணர்ச்சிபோல, ஓரினச்சேர்க்கையும் இயற்கையான பாலியல் உந்துதல் தான். ஓரினச்சேர்க்கையாளர்களைக் குற்றவாளிகளைப் போலப் பார்ப்பது முற்றிலும் தவறு.

பாலியல் உணர்வு என்பதே தனிநபர் விருப்பம் சார்ந்தது. பொது பாதிப்பு இல்லாதவரையில் அதில் எவரும் தலையிட முடியாது. மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளிடமும் ஓரினச்சேர்க்கை இருக்கிறது. ஓரினச்சேர்க்கையாளர்கள் யாருடைய தூண்டுதலாலும் இதில் ஈடுபடுவதில்லை. அது அவர்களுக்கு இயற்கையாக ஏற்படக்கூடிய உணர்வு. இயற்கையில் அனைத்தும் ஒரே மாதிரி இருக்காது, வேற்றுமைகள், முரண்கள் இருக்கத்தான் செய்யும். இதைத் தவறென்றோ, குற்றமென்றோ சொல்லமுடியாது.

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 16

ஓரினச்சேர்க்கையாளர்கள் அல்லது அவர்களின் பெற்றோர், `இதை மாற்ற முடியுமா, இதற்குச் சிகிச்சைகள் இருக்கின்றனவா’ என்று மருத்துவர்களிடம் கேட்கிறார்கள். இது நோயாக இருந்தால்தானே சிகிச்சையளிக்க முடியும்! ஓரினச்சேர்க்கை உணர்வு ஒருவருக்கு ஏன் ஏற்படுகிறது என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஒருவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதற்கான காரணங்களாக நான்கு கோட்பாடுகள் நம்பப்பட்டன. ‘மரபணுதான் காரணம்’ என்பது ஒரு கோட்பாடு. இதை `ஜெனடிக் தியரி’ (Genetic Theory) என்பார்கள். ‘ஹார்மோன் கோளாறுதான் காரணம்’ என்கிறது இரண்டாவது கோட்பாடு. இதை `ஹார்மோனல் தியரி’ (Hormonal Theory) என்பார்கள். ‘சிறு வயதில் பார்த்த, அனுபவித்த சம்பவங்கள்தாம்

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 16

காரணம்’ என்பது மூன்றாவது கோட்பாடு. இதை `சைக்கோ அனலிடிகல் தியரி’ (Psychoanalytic Theory) என்பார்கள். ‘பத்து பேர் இருக்கும் இடத்தில், எட்டு பேரின் குணாதிசயம் மற்ற இரண்டு பேருக்கும் தொற்றிக்கொள்ளும்’ என்பது நான்காவது கோட்பாடு. இதை, `பியர் இன்ஃப்ளுயென்ஸ் தியரி’ (Peer Influence Theory) என்று சொல்வார்கள். ஆனால், இவற்றில் எந்தக் கோட்பாடும் இதுவரை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

ஓரினச்சேர்க்கை என்பது நோயல்ல. ஆகவே இதற்குச் சிகிச்சையும் கிடையாது. இருபால் சேர்க்கையாளர்களுக்குச் சமூகத்தில் எந்த அளவுக்கு உரிமையும் மரியாதையும் இருக்கிறதோ, அதே அளவுக்கு உரிமையும், மரியாதையும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் இருக்கிறது. அவர்களும் மனிதர்கள்தாம், புறக்கணிக்க வேண்டாம்!

(இன்னும் கற்றுத் தருகிறேன்...)

- மு.இளவரசன்